google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 4 ஜூலை, 2024

தோட்டக்கலைப் பயிர்களில் பழ ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக பழ பயிர்களில் பழ ஈ தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பீடு மற்றும் தரத்தில் ஏற்படும் பாதிப்பு கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, பல்வேறு சூழ்நிலைகளை தாங்கி வளரும் பூச்சிகளின் தகவமைப்பு, வேகமான இனப்பெருக்க திறன் மற்றும் பல்வேறு பயிர்களை உண்டு வாழும் திறன் என பல காரணங்களால் பழ ஈக்களை கட்டுப்படுத்துவது சற்று சவாலாக இருக்கிறது. 
  • தோட்டக்கலை பயிர்களில் பழ ஈக்கள் தாக்குதலால் 40 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடும், தரத்தில் குறைவும் ஏற்படுகிறது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பழ தோட்டம் மற்றும் மரங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் இதனால் பழ ஈக்களின் வாழ்க்கை சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம். 
  • மரத்திலிருந்து உதிர்ந்த பழங்கள் அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். இதனால் இதில் இருக்கும் முட்டை மற்றும் இளம் புழுக்களை முற்றிலும் அழிக்கலாம். அதாவது பாதிக்கப்பட்ட பழங்களை அரைத்து குழி தோண்டி புதைக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக முட்டை மற்றும் இளம் புழுக்கள் அழியும். 
  • அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை பிளாஸ்டிக் பையில் இறுக்கமாக கட்டி வைப்பதால் நாளடைவில் அது அழிந்துவிடும். 
  • அல்லது இந்த பழங்களை தோட்டத்திலிருந்து சற்று தொலைவில் நன்கு காய வைத்து மற்ற கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 
  • பழ தோட்டத்தில் குப்பைகள், களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைப்பதுடன் பழ ஈக்கள் தாக்காத பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம். 
  • பழ ஈக்களின் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய பழ செடிகள் அல்லது ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். ஈக்கள் பழங்களில் முட்டை இடுவதை தவிர்க்க சிறு காயக இருக்கும்போது அதனை பிளாஸ்டிக் பை/காகிதம் பயன்படுத்தி சுற்றிக் கட்டி விடலாம். இந்த முறை சற்று அதிக செலவினம் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பயனளிக்க கூடியதாகும். எனவே குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனை பின்பற்றலாம். 
  • சாகுபடி செய்யும் பழ மரங்களை தாக்கும் ஈக்கள் இனத்தைப் பொறுத்து ஒட்டுண்ணி குளவி மற்றும் பூஞ்சைகளை பயன்படுத்தி பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம். இந்த முறை ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 
  • இயற்கை பூச்சிக்கொல்லி திரவங்களான Beauveria bassiana, Metarhizium anisopliae, Isaria fumosorosa முதலியவற்றை தெளிப்பதால் 55 முதல் 70% வரை பழ ஈக்களை கட்டுப்படுத்த முடியும். 
  • மரங்களில் காய்கள் பழுக்கும் முன்னதாக அதாவது 100% பச்சை நிறத்தில் இருக்கும் பொழுது அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இளம் புழுக்கள் கூட்டுக் புழுவாக மாறாமல் தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். காய்கள் நிறம் மாறும் பொழுது அதில் இருக்கக்கூடிய இளம் புழுக்கள் பழத்தின் உட்பகுதி மற்றும் தோல் பகுதியை உண்டு துளையிட்டு வெளிவந்து தரையில் விழுந்து கூட்டு புழுவாக மாறுகிறது. இதனால் முதிர்ந்த பழ ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே தோப்பில் பழங்களை பழுக்க விடாமல் முன்னதாக அறுவடை செய்ய வேண்டும். 
  • அதேபோன்று காய்களின் செல் சுவர்களை கடினப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கான கால்சியம், மெக்னீசியம், சிலிகான், மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்துக்களை முறையாக கொடுக்க வேண்டும். 
  • நாம் தேர்வு செய்யும் ரகங்களின் செல் சுவர்கள் அதிக கடினத் தன்மை கொண்ட ரகமாக இருந்தால் பழ ஈக்கள் அதில் முட்டை இட வாய்ப்புகள் குறைகிறது. முதிர்ந்த பழ ஈக்களை அதிக அளவில் கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தலாம். 
  • நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறி கிடைக்கப்பெறுகிறது. அதேபோன்று கவர்ச்சி பொறிகளை தயார் செய்து வயலில் அங்கங்கே வைத்து முதிர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். 
  • கோடை பருவத்தில் இரண்டு மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உழவு செய்வதால் மண்ணில் இருக்கும் கூட்டுப் புழுக்களை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சீர்குலைக்கலாம். வயலில் கவர்ச்சி பொறி அல்லது பொறி பயிர்களை சாகுபடி செய்யலாம். 
  • அறுவடை செய்த பழங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வெப்பநிலை கொண்ட நீரில் நேர்த்தி செய்து பின்பு சேமித்து வைக்க வேண்டும். 
  • ஆரம்ப நிலை தாக்குதல் அல்லது தாக்குதலுக்கு முன்னதாக தொடர்ச்சியாக வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வருவதால் இதன் தாக்குதலை தவிர்க்கலாம் என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
  • தாய் அந்தப் பூச்சிகளை அதிக அளவு கவர்ந்து அழிக்க Fish meal trap எனப்படும் கருவாட்டு பொறியையும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சிறிய டப்பாவில் கருவாட்டு உடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் பூச்சி மருந்து கலந்து வயலில் ஆங்காங்கே கட்டி வைப்பதால் பூச்சிகள் கவர்ந்து இறந்துவிடும். இதனை ஏக்கருக்கு 20 முதல் 25 எண்கள் பயன்படுத்த வேண்டும் மேலும் அவ்வப்போது கருவாட்டை மாற்றி கட்ட வேண்டும். 
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இரண்டுமே சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். (10 லிட்டர் தண்ணீருக்கு) 
  • Imidacloprid - 10 மில்லி 
  • Emamectin+ imidacloprid- 5 கிராம்+ 10 மில்லி 
  • Imidacloprid+ acetamaprid - 10 மில்லி+ 10 கிராம் 
  • Phenthoate - 15-25 மில்லி 
  • Spirotetramet+imidacloprid - 10-20 மில்லி
  • Spinosad - 5-8 மில்லி
  • இவை அனைத்தும் ஆரம்ப நிலை தாக்குதலின் போது பயன்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளாகும் தீவிரமாகும் போது அதற்கு ஏற்றவாறு மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


எலுமிச்சையில் நுனி கருகல்/ பின் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தமிழகத்தில் நாளுக்கு நாள் எலுமிச்சை சாகுபடி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதான காரணமாக மாறுபட்ட தட்பவெப்ப நிலை மற்றும் புளிப்பு வகை சார்ந்த இதர பழ சாகுபடி குறைந்து வருவதே ஆகும். 
  • எலுமிச்சை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் அறிந்த பிரதான நோயாக நுனி கருகல் நோய் திகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் Die back/ Wither dip/Anthracnose/ Citrus Decline நோய் என்று அழைப்பார்கள். 
  • இந்த நோயானது பூஞ்சை தாக்குதல்,பூச்சி தாக்குதல், முறையற்ற பராமரிப்பு, மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை, ஊட்டச்சத்து பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு வகை நோய் அல்லது சீர்குலைவு எனலாம்.
  • இந்த நோயினால் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளைகளில் உள்ள நுனி இலைகள் வாடி பழுப்பு நிறம் அடைந்து பின்னர் உதிர ஆரம்பிக்கும்.
  • அடுத்த கட்டமாக இலை உதிர்வு நுனியில் இருந்து கிளையின் அடிப்புரத்தை நோக்கி பரவும். எனவே தான் இதனை பின் கருகல் நோய் என்றும் கூறுவார்கள்.
  • தண்டுப் பகுதியில் மரப்பட்டைகள் உதிர்தல் பிசின் வெளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கிளையில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும். 

  • நாளடைவில் பாதிக்கப்பட்ட கிளைகள் முற்றிலும் காய்ந்து விடும்.
  • நோய் தாக்குதலினால் செடிகள் அல்லது மரங்கள் இறப்பது மிகவும் அரிது. ஆனால் ஒரு சில கிளைகள் காய்ந்து வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
  • இந்த வகை நோய் இளம் மரங்களில் வேகமாக பரவும் தன்மை உடையது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • காய்ந்து போன கிளைப் பகுதியை அகற்ற வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட கிளை பகுதி முற்றிலும் காய்ந்து இருக்க வேண்டும். கிளையின் தண்டுப் பகுதியில் பச்சையம் இருக்கும் போது அதை அகற்றினால் நோய் பரவுதல் காணப்படும்.

  • இது செடியின் காய்ப்பு திறனை பெரிய அளவில் பாதிக்கும். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

  • மற்ற நோய் மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கு செடிகள் ஏதுவாக அமையும். எனவே குறிப்பிட்ட கிளை பகுதியை அகற்றிய பிறகு அதில் நோய் பரவாமல் இருப்பதற்கு காப்பராக்சி குளோரைடு என்ற மருந்தை தடவி விட வேண்டும். 
  • மரங்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். 
  • மரம் ஒன்றிற்கு 15 முதல் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 100 கிராம் Trichoderma, 100 கிராம் VAM மற்றும் 100 கிராம் Humic அமிலம் ஆகியவற்றை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இட்டு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். 
  • ரசாயன உரங்களாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 250:150:200 கிராம் என்ற அளவில் வருடத்திற்கு நான்கு முறை கொடுக்க வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மாதம் ஒரு முறை வேர் வழியாகவும் இலை வழியாகவும் ஊட்டச்சத்துக் கொடுக்க வேண்டும்.
  • நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் கண்டிப்பாக வட்டப்பாத்தி இட்டு அதன் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். 
  • நாம் பாய்ச்சும் நீர் தண்டுப் பகுதியை தொடாமல் இருக்க மண் அணைக்க வேண்டும்.
  • இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாதவாறு செடிகளை பராமரிக்க வேண்டும்.
  • மரங்களுக்கு தேவையான அளவு நுண்ணூட்ட சத்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக காப்பர், துத்தநாகம், மாங்கனிசு, இரும்பு மற்றும் மாலிப்டினம். 
  • நுண்ணூட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் வருடம் இரண்டு முறை இடவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாதம் ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 அல்லது 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இயற்கை வழி திரவங்களை பயன்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus ஆகியவற்றைக் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


செவ்வாய், 2 ஜூலை, 2024

இலாபம் தரும் சவுக்கு மரம் சாகுபடி

முன்னுரை:

குறைந்த நாட்களில் செலவில்லாமல் மர பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு சவுக்கு மரம் சாகுபடி செய்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. காகிதம் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், விறகு, மரக்கட்டை என பல்வேறு பயன்களை கொண்டுள்ள சவுக்கு மர சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் சாகுபடிக்கு உகந்தது: 

  • அனைத்து மண் வகைகளிலும் வளரும் 
  • குறைந்த சாகுபடி செலவினம் 
  • வேலையாட்கள் பெரிய அளவில் தேவையில்லை 
  • நீர் தேவை மிகவும் குறைவு 
  • எளிதில் விற்பனை செய்ய இயலும் 
  • வனவிலங்குகள் தொல்லை இல்லை 
  • நோய் அல்லது பூச்சி தாக்குதல் இல்லை 
  • சராசரி விலை கிடைக்கப் பெறுகிறது.

ரகம் தேர்வு செய்தல்: 

  • பல்வேறு நாட்டு, ஒட்டு  மற்றும் கலப்பின ரகங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து முழு விலையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. நாட்டு சவுக்கு மற்றும் இந்தோனேசிய வகை ரகங்கள் கொண்டு கலப்பினம் அல்லது ஒட்டுக் கட்டிய ரகங்களை முறையாக தேர்வு செய்து பயிரிடுவதால் நல்ல விளைச்சல் பெற இயலும்.
  • குறிப்பாக TNPL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் கலப்பின ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கக் கூடியதாக திகழ்கிறது எனவே இதனையும் தேர்வு செய்து நடவு செய்யலாம். 

நிலம் தயார் செய்தல்: 

இரண்டு முறை கலப்பை உழவு செய்து பின்னர் ரோட்டா வேட்டர் பயன்படுத்தி மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி: 

இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி ஐந்து முதல் ஆறு அடி எனவும் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மூன்று முதல் மூன்று அடி வரை இருக்கலாம். இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 2500 மரங்கள் பெற இயலும்.

குழி எடுத்தல்: 

30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உடைய குழிகளை தயார் செய்து 15 நாட்கள் ஆற விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள், VAM மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இடவேண்டும்.

நடவு செய்தல்: 

போதுமான நீர் வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மன வரி பூமியில் நடவு செய்ய விரும்பினால் பருவ மழை காலத்தில் நடவு மேற்கொள்ளலாம்.

களை மேலாண்மை:

ஆரம்ப காலத்தில் களை மேலாண்மை மிகவும் அவசியம். அதாவது முதல் வருடம் சுமார் 4 முறையாவது களையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உர மேலாண்மை: 

இந்த மரம் வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது அதற்கேற்றவாறு உரமிடுதலை திட்டமிடலாம். வருடத்திற்கு இரண்டு முறை போதுமான அளவு ஊட்டச்சத்து பருவமழை தருணத்தில் கொடுக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்: 

சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால் வேலையாட்கள் குறைக்கப்படுகிறது, களைகள் அதிகம் வளர்வதில்லை, நீர் தேவையும் குறைவு, அனைத்து வகையான நிலங்களுக்கும் உகந்தது, நீரில் கரையும் உரங்களை கொடுக்க இயலும். இதனால் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

இதில் பெரிய அளவு நோய் அல்லது பூச்சி தாக்குதல் இருப்பதில்லை அவ்வாறு இருந்தால் அதனை எளிதில் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி விடலாம்.

ஊடுபயிர் இடுதல்: 

அனைத்து வகையான காய்கறி பயிர்கள், நிலக்கடலை,உளுந்து, எள், பயிறு வகை பயிர்கள் என குறைந்த வாழ்நாள் கொண்ட அனைத்து பயிர்களையும் முதல் ஒரு வருடம் சாகுபடி செய்யலாம்.

அறுவடை மற்றும் விளைச்சல்: 

அதிக வாழ்நாள் திறன் கொண்ட பயிராக இருந்தாலும் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்களில் நாம் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். கலப்பின கன்றுகளை பயன்படுத்தும் பொழுது ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வரை நிகர லாபம் எடுக்க இயலும். 

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 29 ஜூன், 2024

காய்கறி பயிர்களில் ஒட்டுக்கட்டுதலும் அதன் நன்மைகளும்

முன்னுரை: 

  • மனிதர்களின் அன்றாட வாழ்வில் காய்கறிகளின் பண்பாடு தவிர்க்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காய்கறி சாகுபடியில் ஏற்படும் அதிக நோய் மற்றும் பூச்சி தாக்குதல், அதிக உர பயன்பாடு, மகசூல் குறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பழ பயிர்களில் ஒட்டுக்கட்டி வீரிய ரகங்களை பெறுவது போன்றே காய்கறி பயிர்களிலும் ஒட்டுக்கட்டுதல் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். 

ஒட்டு கட்டுதல் என்றால் என்ன: 

  • ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரே இனம் அல்லது குடும்பத்தைச் சார்ந்த இரண்டு செடிகளின் பாகங்களை இணைத்து அதன் சிறப்பு பண்புகளை புதிய செடி வடிவில் உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகும். 
  • இந்தச் செடியின் அடிப்பாகத்தை வேர்ச்செடி எனவும் மேல் பாகத்தை தண்டுக்குச்சி எனவும் அழைப்பார்கள். பொதுவாக வேர்ச்செடிகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை, அதிக நீர் அல்லது உப்பை தாங்கி வளரும் தன்மை, வேர் வழியாக பரவக்கூடிய பல்வேறு நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை அல்லது தாங்கி வளரும் தன்மையை கொண்டிருக்கும். 
  • தண்டுக்குச்சியானது நோய் அல்லது பூச்சி எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன், மேம்பட்ட ஊட்டச்சத்து, அதிக விளைச்சல் என பல்வேறு பண்புகளை கொண்டிருக்கும். இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கிணைத்து புதிய செடியாக மாற்றி நாம் விரும்பிய பண்புகள் மற்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட புதிய செடியை உருவாக்குவது ஒட்டுக்கட்டுதல் நிகழ்வாகும்.

கத்தரி செடியில் ஒட்டு கட்டும் முறை:

  • நல்ல வேர் அமைப்பு, அதிக ஆண்டு நிலைத்திருக்கும் தன்மை, வறட்சியை தாங்கி வளர்தல், நோய், பூச்சி மற்றும்  நூற்புழுக்களுக்கு எதிரான செயல்படும் கத்திரி இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய் செடியை வேர் செடியாக பயன்படுத்த வேண்டும். 
  • அதேபோன்று நாம் விரும்பிய பண்புகளைக் கொண்டுள்ள கத்திரி ரகத்தை தண்டு குச்சியாக பயன்படுத்த வேண்டும். இதன் இரண்டு தண்டு பகுதியும் ஒரே அளவு உதாரணத்திற்கு பென்சில் தடிமன் உடையதாக இருக்க வேண்டும். 
  • சுண்டைக்காய் செடியில் செங்குத்தாக வளரும் கிளைப் பகுதியில் உள்ள குச்சியை தேர்வு செய்து அதே தடிமன் உடைய கத்தரி தண்டு குச்சியை ஒன்றிணைத்து ஒட்டு கட்ட வேண்டும். அதாவது வேர்ச்செடியின் பாகத்தை சுமார் பத்து சென்டிமீட்டர் உயரத்தில் கத்தி முழுமையாக இருப்பது போன்று தயார் செய்ய வேண்டும் அதில் தண்டுக்குச்சியின் பகுதியை V வடிவத்தில் தயார் செய்து குச்சியின் பகுதியுடன் இணைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தி இணைத்து கட்ட வேண்டும். 
  • இவ்வாறு செய்தால் அதிக அளவு உணவு இந்த ஒட்டு பகுதிக்கு செல்வதால் எளிதில் ஒட்டுக்கட்டுதல் ஒருங்கிணைந்து புதிய செடியாக உருவாகும். போதுமான வேர் வளர்ச்சி அடைந்தவுடன் இதனை தனியாக பிரித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடினப்படுத்தி பின்பு வயலில் நடவு செய்ய வேண்டும். 
  • இதற்கு 70 முதல் 80 சதவீதம் காற்று ஈரப்பதம் இருக்கும் இடத்தில் பத்து நாட்களும் பிறகு நிழல் வலை கூடாரத்தில் பத்து நாட்களும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உருவாகும் ஒட்டுச் செடியில் தண்டு குச்சி மற்றும் வேர்ச்செடி ஆகிய இரண்டு பண்புகளும் ஒருங்கிணைந்து கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவினும் குறைவதுடன் அதிக மகசூல் பெற இயலும்.

ஒட்டு கத்திரியின் சிறப்பியல்புகள்: 

  • நல்ல வேர் அமைப்பு 
  • வறட்சியை தாங்கி வளர்தல் 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை தாங்கி வளர்த்தல் 
  • அதிகளவு ஊட்டச்சத்து மற்றும் நீரை பயிர்களுக்கு உறிஞ்சி கொடுப்பது 
  • இதனால் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் அதிக கா
  • வேர் சம்பந்தமான அனைத்து நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை பெறுதல்
  • நீண்ட நாட்களுக்கு மகசூல் தருதல் 
  • அதிக மகசூல் தரும் தன்மையுடையது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறவும்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 26 ஜூன், 2024

சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்:

முன்னுரை:

  • சமையலறையின் அரசி என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் 20 முதல் 30 நாட்கள் வயது உடைய பயிராகவும், ஒரு சில இடங்களில் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிரின் ஆரம்ப நிலையில் தற்போது நிலவும் மந்தமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சில இடங்களில் நுனி கருகல் காணப்படுகிறது.
  • Stemphylium எனப்படும் ஒரு வகை பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது Stemphylium இலை கருகல் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

பூஞ்சானத்தின் வாழ்க்கை சுழற்சி:

  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சையானது மண், முந்தைய பயிர்களின் எச்சம், களைகள் மற்றும் இதர குப்பைகளில் நீண்ட காலமாக உறக்க நிலையில் இருக்கும். சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் பயிர் நிலவும் பொழுது பூஞ்சையானது பயிர்களில் நோயை ஏற்படுத்துகிறது. 
  • நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் மற்றும் பண்ணை பணிகளால் பயிர்களில் ஏற்படும் காயங்கள் வழியாக பூஞ்சானமானது நோயை ஏற்படுகிறது.

நோய் பரவும் விதம்: 

தாக்கப்பட்ட பயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூஞ்சானமானது காற்று மற்றும் பாசனம் வழியாக பரவுகிறது. இது மட்டுமின்றி மாலை நேரத்தில் செடிகளை ஈரப்பதம் இருக்கும் பொழுது நாம் பண்ணைப் பணிகளை மேற்கொள்வதால் மேலும் நோய் பூஞ்சானம் பரவும்.

சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான வெப்பநிலை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • மழைப்பொழிவு அல்லது அதிகை மண் ஈரப்பதம் 
  • அதிக பனிப்பொழிவு 
  • நெருங்கிய நடவு மேற்கொள்ளுதல்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நீள் வட்ட வடிவில் வெள்ளை முதல் பழுப்பு நிற புண்கள் இலையில் காணப்படும். 
  • ஆரம்ப கட்டத்தில் செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகளில் தான் அறிகுறிகள் தென்படும். 
  • நாளடைவில் புண்கள் நீர்த்த வெளிர் சிகப்பு முதல் கருப்பு நிறத்தில் மாற்றம் அடையும். 
  • சாதகமான சூழ்நிலை நிலவும் பொழுது அடுத்தடுத்த இலைகளுக்கு நோய் பரவுதல் காணப்படும். 
  • நோய் தாக்குதல் தீவிரமடையும் பொழுது புண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அதன் அளவு அதிகரித்து ஒன்றுடன் ஒன்று சிதைந்து கருகி காணப்படும். 
  • புண்கள் தென்பட்ட இடத்தில் தாள்கள் எளிதில் உடைந்து தொங்கும். 
  • இதனால் இலைகளின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு மகசூல் அளவு குறையும்.

  • கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • நோயால் பாதிக்கப்படாத விதை கிழங்குகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்பு நடவு செய்ய வேண்டும். 
  • இந்த நோய்க்கு எதிராக எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்து அதனை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • தொடர்ச்சியாக இந்த நோயின் பாதிப்புகள் தென்படும் வயலில் பயிர் சுழற்சி அல்லது மாற்று பயிரிடுதல் மிகவும் உகந்தது.
  • நடவு செய்யும்போது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் இருக்கக் கூடாது.
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • களைகள் அதிகம் வளராமல் கட்டுப்படுத்த வேண்டும் மேலும் முந்தைய பயிர்களின் குப்பைகள் கண்டிப்பாக வயலில் இருக்கக் கூடாது.
  • நோயின் அறிகுறிகள் பரவலாக தென்படும் போது தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • மேலும் நோயின் தாக்குதல் தென்படும் வேளையில் ஏக்கருக்கு 25 கிலோ சல்பேட் இட வேண்டும் இது நோய் பரவுதல் கட்டுப்படுத்தும். 
  • பனிப்பொழிவு அல்லது மழை பெய்த நேரங்களில் காலை நேரத்தில் பண்ணைப் பணிகளை செய்வதை தவிர்க்கவும்.
  • Trichoderma harzianum எனும் பூஞ்சான கொல்லி இந்த நோய்க்கு எதிராக நல்ல செயல் திறன் கொண்டுள்ளதால் நோயின் ஆரம்ப காலத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். 
  • இந்த வழிமுறையை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் தெளிப்பதால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளில் ஏதேனும் இரண்டை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.(பத்து லிட்டர் தண்ணீர் காண அளவு)
  • Carbendazim+ mancozeb - 25 கிராம்
  • Azoxystrobin+ mancozeb - 50 கிராம்
  • Zineb- 25 கிராம்
  • Tebuconazole - 10-25 மில்லி
  • Azoxystrobin+Difenaconazole - 10 மில்லி
  • Tebuconazole+ Trifloxystrobin - 10 கிராம்
  • Mettiram+ pyraclostrbin - 50 கிராம்

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

திங்கள், 24 ஜூன், 2024

நிழல் வலை கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வதன் நன்மைகள்

முன்னுரை:

  • பெரும்பான்மையான காய்கறிப் பயிர்கள் குறிப்பிட்ட பருவம் மற்றும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதால் பருவமற்ற காலத்தில் இதன் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரம் குறைந்து விலையில் அதிக மாற்றம் திகழ்கிறது.
  • விவசாயிகள் பருவ மற்ற தருணத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பொழுது அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, மழை மற்றும் வெப்பநிலை காரணத்தால் இதன் உற்பத்தி பெரிதும் பாதிப்படைகிறது. குறிப்பாக தீவிர குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை காரணத்தால் பெரும்பான்மையான காய்கறி பயிர்களில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு காய் பிடிப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு விலை ஏற்றத்தை காண இயலுகிறது.
  • பல்வேறு உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் பயிர் சாகுபடியில் ஏற்படும் சவால்களை சரி செய்திடவும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், பருவ மற்ற தருணத்தில் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்திடவும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை வழங்கிட  நிழல்வலைக் கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வது ஒரு சிறந்த முறையாகவே கருதப்படுகிறது.

நிழல் வலை கூடாரம் என்றால் என்ன:

இதில் நிழல் வலை கூடாரம் என்பது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளியை குறிப்பாக அல்ட்ரா வயலட் கதிர் வீச்சை தடை செய்தும், வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதத்தை பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியும், காற்று உள் புகுந்து எளிதில் வெளி வரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.

நிழல் வலை கூடாரத்தில் நிறங்கள்:

பச்சை மற்றும் கருப்பு - இந்த நிற நிழல் வலை கூடாரங்கள் ஒளியின் அளவு மற்றும் தரத்தை மாற்றி அமைத்து கொடுக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வெள்ளை- ஒளியின் அளவை சற்று குறைத்து மட்டும் கொடுக்கிறது தரத்தில் எந்த மாற்றமும் செய்யாது. இதனால் பயிர் வேகமாக வளரும்.

நிழல் வலை கூடாரத்தின் நன்மைகள்:

  • கூடாரத்தின் உட்பகுதியில் வெப்பநிலையை 50 சதவீதம் வரை குறைத்துக் கொடுக்கக்கூடியது. 
  • அனைத்து பருவத்திலும் காய்கறி பயிர் சாகுபடி செய்ய உகந்தது. 
  • அதிக வெப்பநிலை மழைப்பொழிவு காற்று போன்ற அசாதாரண சூழ்நிலையில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. இதனால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படாமல் அதிக அளவு பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • வீரிய விட்டு ரகங்களை சாகுபடி செய்ய உகந்த சூழ்நிலை ஏற்படுத்தும். 
  • கிடைக்கப்பெறும் குறைந்த இடத்தில் பயிர்களை செங்குத்தாக வளர்த்து அதிக மகசூலை ஈட்ட இயலும். எனவே இதன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கும்
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படுகிறது.
  • இதனால் மகசூலின் தரம் மேம்பட்டு காணப்படும்.
  • இதர வேளாண் நவீன தொழில் நுட்பங்களான நிலப் போர்வை அமைத்தல், சொட்டுநீர் பாசனம் /தெளிப்பு நீர் பாசனம், பல்வேறு பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தரமான காய்கறிகளை பெறலாம்.
  • தக்காளி, கத்தரி, வெள்ளரி, மிளகாய், குடைமிளகாய், கீரை வகைகள் மற்றும் அனைத்து கொடி காய்கறி வகைகள் என நாம் விரும்பிய பயிரை இதில் சாகுபடி செய்து பயன்பெறலாம். 
  • இது மட்டும் இன்றி களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளுக்கு தேவைப்படும் வேலை ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதால் உற்பத்தி செலவும் குறைகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 22 ஜூன், 2024

தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் போரான் ஊட்டச்சத்து மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • அனைத்து வகையான மண்ணிலும் இதன் குறைபாடு தென்படும்.
  • எந்த வயதுடைய தென்னம் பிள்ளை அல்லது மரமாக இருந்தாலும் போரான் ஊட்டச்சத்து குறைபாடு கண்டிப்பாக தெரியும்.
  • நமது வயலில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய கண்டிப்பாக மண் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • மண் பரிசோதனையில் போரான் அளவு 0.30 ppm என்ற அளவிற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அதனை பற்றாக்குறை உள்ள மண் என்று தீர்மானிக்கலாம். 
  • போரான் பற்றாக்குறை உள்ள மண்ணில் இருக்கும் தென்னை மரங்கள் அல்லது பிள்ளைகள் உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 மட்டுமே இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக இல்லை அதிகமாக இருக்கும் மண்ணில் கண்டிப்பாக போரான் ஊட்டச்சத்துக் குறைபாடு தென்படும். 
  • எனவே கார அமிலத்தன்மையை நடுநிலையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது போரான் ஊட்டச்சத்து மண்ணிற்கு அடியில் செல்வதால் அதனை தடுக்க ஏதுவாக போதுமான வடிகால் வசதி மற்றும் நீரை சேமித்து வைத்திருக்க கூடிய மண்புழு உரம், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். 
  • மண்ணை இறுக விடுவதால் அதில் இருக்கக்கூடிய சத்து செடிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே அதற்கேற்றவாறு ஏதேனும் பயிர் சாகுபடி செய்து குறிப்பாக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்தால் மண்வளம் பெருகும்.
  • இயற்கையாகவே மண்ணில் போரான் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் அதனை செடிகளுக்கு கிடைக்க ஏதுவாக வேஷ்டி கம்போசர் அல்லது இயற்கை வழி தயாரிப்பு திரவங்களான ஈ எம் கரைசல், ஜீவாமிர்தம் பஞ்சகாவியா போன்றவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
  • பொதுவாக நமது வயலில் வளரக்கூடிய அனைத்து களை செடிகளும் ஊட்டச்சத்து மிகுந்தது எனவே அவற்றை பிடுங்கி சிறு துண்டுகளாக வெட்டி செடிகளுக்கு இட்டு நீர் பாய்ச்சலாம்.
  • மண் அல்லது பயிர்களுக்கு அதிக அளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து கொடுத்தாலும் போரான் பயிர்களுக்கு கிடைக்காது. எனவே சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். 
  • எருக்கு கரைசல் அல்லது எருக்கு செடிகளை சிறு துண்டுகளாக வெட்டி தென்னையின் தண்டுப் பகுதியிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம். 
  • போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் எந்த ஒரு பாகமும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பாது. 
  • அதேபோன்று இழை வழியாகவோ அல்லது வேர் வழியாகவோ போரான் ஊட்டச்சத்து கொடுத்த பிறகு உடனடியாக அதன் செயல்பாடு இருக்காது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் பயிரில் அதன் குறைபாட்டால் தோன்றும் அறிகுறிகள் குறையும்.
  • உரக்கடைகளில் பல்வேறு வடிவங்களில் போரான் ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது உதாரணத்திற்கு Disodium octaborate, Boric acid, Sodium tetraborate மற்றும் பல. 
  • இந்த வகை போரான் வடிவத்தை ரசாயன உரம் அல்லது மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம் அல்லது மண்ணில் இடலாம். 
  • தென்னை மரங்களை அதிக அளவு காய்ச்சலில் விட்டாலும் போரான் ஊட்டச்சத்து பயிர்களுக்கு கிடைக்காது. எனவே போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது இதனை இடுவது சிறந்தது.
  • அதிக அளவு போரான் ஊட்டச்சத்து கொடுப்பதும் தவறான செயலாகும் இது பயிர்களில் நச்சுத்தன்மை அறிகுறியை ஏற்படுத்தும் அது போன்ற தருணத்தில் போதுமான அளவு துத்தநாகம் பயன்படுத்தினால் போரான் செயல்பாட்டை குறைக்கலாம்.
  • குருணை பவுடர் மற்றும் திரவ வடிவில் போரான் ஊட்டச்சத்தை கிடைக்கப்பெறுகிறது அதனை பரிந்துரைக்கப்பட்ட செடிகளுக்கு இடுவதால் வெகுவாக இதன் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


தென்னையில் போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்

முன்னுரை:

  • தென்னை சாகுபடியில் பிரதானமாக தழைச்சத்து,மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான், மாங்கனிசு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டு அறிகுறிகள் தென்படுகிறது. இதில் நுண்ணூட்ட சத்தான போரான் தென்னையின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன் மகசூல் இழப்பீட்டை பெரிய அளவில் ஏற்படுகிறது. 
  • இயற்கையாகவே மண், தண்ணீர், பாறை, மணல் போன்றவற்றில் போரான் ஊட்டச்சத்து மிகக் குறைந்த அளவில் உள்ளது. எனவே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மண்  வகைகளில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவே கருதப்படுகிறது.

தென்னையில் சாகுபடியில் போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்:

  • தேவையான அளவு போரான் ஊட்டச்சத்து இடாமல் இருத்தல்.
  • தொடர் மழையினால் மண்ணில் இருக்கக்கூடிய போரான் வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணுக்கு அடியில் செல்லுதல். 
  • மணல் அமைப்பு உடைய மண் வகைகளில் போரான் கிடைக்கப் பெறாத வண்ணம் இருத்தல்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல். அதாவது pH 7.5க்கு மேல் செல்லும் பொழுது இதன் பற்றாக்குறை தென்படும்.
  • தொடர்ச்சியாக பயிரை வறட்சியில் அல்லது நீர் பற்றாக்குறையில் விடும் பொழுது மண்ணில் இருக்கக்கூடிய போரான் ஊட்டச்சத்து செடிகளுக்கு கிடைக்காமல் மண் துகள்களுடன் ஒட்டிக் கொள்ளுதல். 
  • அதிகளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து இடுவதால் போரான் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது.

போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள்:

இலைப் பகுதியில் காணப்படும் அறிகுறிகள்:

  • பொதுவாக போரான் ஊட்டச்சத்து பயிர்களில் அதிக அளவு ஊடுருவி செல்வதில்லை எனவே இதன் பற்றாக்குறை பயிரின் குருத்துப் பகுதியில் அதிகம் தென்படுகிறது.
  • முழுமையாகத் திறக்கப்படாத நுனி இலைகள் வளைந்து நெளிந்து காணப்படுதல். 
  • இந்த இலைகளின் நடு நரம்பு மற்றும் இலை காம்பும் வளைந்து நெளிந்து காணப்படும்.
  • குருத்துப் பகுதியில் தோன்றும் இலைகளின் எண்ணிக்கை குறைவதுடன் இலை காம்பின் நீளம் குறைந்து காணப்படும். அரிதாக குருத்துப் பகுதியில் குறைந்த நீளம் மற்றும் குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான ஓலைகளை காண இயலும்.
  • ஓலைகளின் ஒரு பக்கத்தில் உள்ள இலைகள் ஊக்கு போன்று வளைந்து காணப்படும் இதில் சில நேரங்களில் பிசின் காணப்படலாம். மிகவும் அரிதாக இலைகள் இரண்டு முறை வளைந்து இரண்டு ஊக்குகள் இருப்பது போன்று காட்சி அளிக்கும்.
  • சில நேரங்களில் ஓலைகளில் உள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து குச்சி போன்று காட்சியளிக்கும். ஓலைகளின் ஒரு புறத்தில் உள்ள இலைகள் மட்டும் கூட உதிரும்.
  • ஓலைகளின் நுனிப்பகுதி கருகி ஒடிந்து தொங்கும்.
  • ஓலைகள் விசிறி அமைப்பு போன்றும், படகு அமைப்பு போன்றும், துடைப்பம் போன்றும், மீன்களின் எலும்பு அமைப்பு தோன்றும் கூட சில நேரங்களில் அறிகுறிகள் காணப்படலாம்.

பாலை மற்றும் காய்களில் தோன்றும் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் குன்றிய வளர்ச்சி காணப்படும், குருத்துப் பகுதி ஒரு புறமாக சாய்தல்.
  • குருத்து பகுதியில் அழுகல் அல்லது காய்தல் தென்படலாம்.
  • பாலையில் உள்ள பூங்கொத்துகளில் எண்ணற்ற கிளைகள் அடர்த்தியாக தோன்றும். 
  • சிதைவடைந்த பூங்கொத்து காணப்படுதல்.
  • பாலை விரிந்தவுடன் பூங்கொத்துகள் கருப்பு நிறமாக மாற்றமடைந்து உதிர்தல். 
  • பூங்கொத்துகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் பெண் மலர்கள் காணப்படுதல். 
  • குரும்பை உதிர்தல் ஒரு சில குரும்பை மட்டுமே காணப்படுதல்.
  • ஒல்லி காய்கள் தோன்றுதல்.
  • காய்களில் பருப்புகள் இல்லாமல் இருத்தல், அரைகுறையாக உருவாதல் அல்லது ஒழுங்கற்ற வடிவில் உருவாதல்.
  • மட்டையில் வெடிப்புகள் தோன்றுதல். 
  • மட்டையில் வெடிப்புகள் இல்லையெனில் உரித்த காய்களில் வெடிப்புகள் காணப்படலாம். இந்த வெடிப்புகள் நீள் வட்ட வடிவில் இருக்கும்.
  • மட்டையில் திட்டு திட்டாக கருப்பு நிற மாற்றத்தை காண இயலும்.
  • பருப்புகள் நிறமாற்றம் அடைதல், ஒழுங்கற்ற வடிவ காய்கள், பாலையில் சிறிய மற்றும் பெரிய காய்கள் ஒரே நேரத்தில் தென் படுதல்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 20 ஜூன், 2024

நிலக்கடலையில் துத்தநாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகவும் முக்கியமானது நிலக்கடலை. உலக அளவில் இந்தியா நிலக்கடலை சாகுபடியில் முதலிடம் வகித்தாலும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகிக்கிறது. 
  • நிலக்கடலையில் இந்தியாவின் சராசரி உற்பத்தி திறன் 1400 கிலோ/ஹெக்டேர் ஆகும்.தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை 70 சதவீதம் மானாவாரியிலும் முப்பது சதவீதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

நிலக்கடலையில் துத்தநாகம் ஊட்டச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகள்:


  • நுனி இலைகளின் மைய நரம்பு பகுதியில் இருந்து விளிம்புகளை நோக்கி மஞ்சள் நிற நிற மாற்றத்தை காண இயலும். 
  • மைய மற்றும் இதர இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். 
  • சில நேரங்களில் வெளிர் பழுப்பு நிற இலை புள்ளிகள் காணப்படும்.
  • இலையின் அடிப்புரத்தில் உள்ள இலை நரம்புகள் நிறம் மாறி வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதில் பின்னடைவு. 
  • மகசூலின் அளவு மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படுதல்.

துத்தநாகம் ஊட்டச்சத்தின் பணிகள்:

வேர் வளர்ச்சி:

துத்தநாகம் நிலக்கடலையில் பல்வேறு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நொதிகளை ஊக்குவித்து வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ துத்தநாகம் சல்பேட் இடுவதால் பயிரின் ஆரம்ப நிலையில் வேர்களின் எண்ணிக்கை, அடர்த்தி மற்றும் அது ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகப்படுத்தி நல்ல பயிர் வளர்ச்சியை காண இயலும். எனவே அடி உரமாக எந்தவித மண்ணாக இருந்தாலும் மண் பரிசோதனையின் அடிப்படையில் ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ இடலாம்.

பயிர் வளர்ச்சியை அதிகரித்தல்: 

நிலக்கடலை பயிருக்கு தேவையான துத்தநாகம் கிடைக்கப்பெறும் வளர்ச்சி ஊக்கியான இண்டோல் அசிட்டிக் ஆசிட் IAA உற்பத்தி செய்யப்பட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைவ உதவி புரிவதுடன் இலைகள் நன்கு பச்சை நிறத்தில் இருப்பதை காண இயலும்.

தழைச்சத்தை கிரகித்து கொடுத்தல்: 

பயிறு வகை பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை அதன் வேர் பகுதியில் நிலை நிறுத்தி பயிர்களுக்கும் மண்ணிற்கும் பல்வேறு பயன்களை அளிக்கிறது என்பது நாம் அறிந்ததே. போதுமான அளவு துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது வேர்களில் வேர் முடிச்சுகளை உருவாக்கும் நொதிகளை ஊக்கப்படுத்தி அதிக வேர் முடிச்சுகள் உருவாவதை காண இயலும். 

ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்தல்: 

போதுமான அளவு துத்தநாகம் கொடுப்பதால் நல்ல வேர் வளர்ச்சி இருக்கும்பொழுது பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை வேர்கள் எடுத்து செடிகளுக்கு கொடுக்கிறது. துத்தநாகத்துடன் போரான் ஊட்டச்சத்து கலந்து இடுவதால் செடிகளுக்கு செடிகளுக்கு கிடைக்க பெறும் தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகிறது. இது மட்டுமின்றி பயிரில் கடலையின் எண்ணிக்கை மற்றும்  அளவு அதிகமாகின்றது.

மகசூல் அதிகரித்தல்: 

பயிர்களுக்கு போதுமான அளவு துத்தநாகம் கிடைக்கப்பெறும் பொழுது விழுதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் நீளமும் அதிகரிப்பதால் அவை எளிதில் மண்ணிற்கும் சென்று வளர்வதால் அதிக காய் பிடிப்பு திறன் காண முடியும் இதனால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.

புரதச்சத்து அதிகரித்தல்: 

நிலக்கடலை பருப்பில் உள்ள புரதச்சத்தின் அளவு துத்தநாகம் இடுவதால் அதிகரிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உணவுக்காக சாகுபடி செய்யும் பொழுது இதனையும் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

எண்ணெய் சதவீதம் அதிகரித்தல்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்து உர அளவுடன் மண்ணின் தன்மையை பொறுத்து துத்தநாகம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை துத்தநாகம் சல்பேட் என்ற வடிவில் இடும் பொழுது இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை கடலை பருப்பில் உள்ள எண்ணெய் சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 14 ஜூன், 2024

சாம்பல் பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • சாம்பல் பூசணி சாகுபடியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாம் எந்த பயனுக்காக சாகுபடி செய்கிறோம் என்பதுதான். திருஷ்டிக்காக சாகுபடி செய்யும் போது அதன் உருவம் சரியானதாக இருக்க வேண்டும். உணவுக்காக உற்பத்தி செய்யும் போது அறுவடை பருவம் பருவமழையை ஒத்து வரக்கூடாது. 
  • இதைத் தவிர இதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புக்காக சாகுபடி செய்கிறோம் என்றால் வியாபாரிகளிடம் சாகுபடிக்கு முன்னதாக ஒப்பந்தம் இட்டு கொண்டு பின்பு சாகுபடி வேலையை தொடங்கலாம்.

பருவம்: 

அறுவடை காலம் பருவமழையை நெருங்கி வரக்கூடாது. டிசம்பர் முதல் மே மாதம் இறுதி வரை அறுவடை செய்ய ஏதுவாக பயிர் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நல்ல விலை கிடைப்பதுடன் மகசூல் பாதிப்பு இருக்காது.

ரகம்: 

Mahyco, Drishti, VNR போன்ற ரகங்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை வாங்கும்போது தரமானதா மற்றும் காலாவதி ஆகாத விதையா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

விதை அளவு: 

600-700 கிராம் ஏக்கருக்கு.

நிலம் தயார் செய்தல்: 

வாய்க்கால் அமைக்க வேண்டும். இரண்டு வாய்க்காலுக்கு இடைப்பட்ட தூரம் இரண்டு முதல் மூன்று மீட்டர் இருக்கலாம். ஒரு வாய்க்காலின் இரண்டு அணைப்பகுதிகளிலும் விதைகள் நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்: 

  • வாய்க்காலில் நன்கு நீரைப் பாய்ச்சி ஈரப்படுத்தவும். விதைகள் விதைப்பதற்கு முன்பு அல்லது பின்பு களைக்கொல்லி தெளிக்கலாம். 
  • ஏக்கருக்கு சுமார் 750-1000 மில்லி Pendimethlin அல்லது Metolachlor தெளிக்கலாம். விதைப்பதற்கு முன்பு அல்லது விதைத்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மட்டுமே தெளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட நாட்களில் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

விதைத்தல்: 

குழிக்கு இரண்டு விதை விதைக்கலாம்.

உரம் இடுதல்: 

அடி உரமாக தேவையான அளவு தொழு உரம், 75 கிலோ டி ஏ பி மற்றும் தேவையான அளவு நுண்ணூட்ட உரம். ஆனால் 20-25 நாட்களில் ஒரு முறையும் 40 முதல் 45 நாட்களில் மீண்டும் ஒரு முறையும் உரம் இடுதல் மிகவும் சிறந்தது.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: 

  • விதைத்த 20 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை etherl என்ற மருந்தை பத்து லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 மில்லி கலந்து தெளிப்பதால் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் பூ உதிராது.
  • தேவையின் அடிப்படையில் உரம் மற்றும் டானிக் பயன்படுத்தலாம். குறிப்பாக இதில்  பொட்டாசியம், போரான் மற்றும் நுண்ணூட்ட சத்து கொடுக்க வேண்டும் அப்போதுதான் பூ மற்றும் காய் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூச்சி மேலாண்மை: 

  • பயிரின் ஆரம்ப நிலையில் சாறு உறிஞ்சு பூச்சி அஸ்வினி மற்றும் இலைபேன் தாக்குதல் தென்படும். இதனை கட்டுப்படுத்த Fibronil அல்லது imidacloprid தெளிக்கவும்.
  • பயிரின் நடுத்தர மற்றும் பிந்தைய நாளில் புழு மற்றும் பழ ஈ தாக்குதல் காணப்படும் அதை இயற்கை முறையில் அல்லது ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை:

இதில் பெரிதளவு நோய்கள் ஏற்படாது சாறு உறிஞ்சும் பூச்சிகளால் தேமல் நோய் தென்படலாம் அதைத் தவிர மழைக்காலங்களில் வேர் அழுகல் மற்றும் வெள்ளை பூஞ்சான நோய் காணப்படும். நோய்கள் தென்படும் போது உடனடியாக அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வியாழன், 13 ஜூன், 2024

வாழை பயிரில் துரு இலைபேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழங்களில் குறைந்த செலவில் மனிதர்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக் கொடுக்கக்கூடிய பழமாக வாழை திகழ்கிறது. 
  • வாழை உற்பத்தி போதுமான அளவு இருந்தாலும் தரமான காய்களை உற்பத்தி செய்வதில் சற்று பின்னடைவு காணப்படுகிறது. பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் வாழை சாகுபடியை பாதித்தாலும் காய்களின் தரத்தை மிகவும் பாதிக்க கூடியதாக சிகப்பு துரு இலைபேன் திகழ்கிறது. 
  • இந்த வகை இலைபேன் தாக்குதலால் மகசூலின் அளவு, சுவை மற்றும் ஊட்டச்சத்து விகிதத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

முட்டை: 

வெளிர் வெள்ளை நிறமுடைய முட்டைகளை தண்டு பகுதி, குருத்துப் பகுதி, பூக்கள் மற்றும் சிறு காய்கள் என பல்வேறு இடங்களில் இடுகிறது.

இளம் புழுக்கள்:

வெளிர் மஞ்சள் நிறத்தில் உடைய இளம் புழுக்கள் செடிகளின் பல்வேறு பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும்.

கூட்டுப் புழு: 

முதிர்ந்த இளம் புழுக்கள் கூட்டு புழுவாக மாறி மண்ணில் விழுந்து விடுகிறது.

முதிர்ந்த பேன்: 

இது செடிகளில் இருந்து சாதகமான பகுதியில்(இலையுறை, இலைகள், பூக்கள் மற்றும் காய்கள்) சாற்றை உறிஞ்சும். இதன் அளவு சுமார் 1 முதல் 1.5 மில்லி மீட்டர் அளவு மட்டுமே இருப்பதால் கண்ணுக்கு தெரிவது சற்று கடினம்.சராசரியாக இதன் மொத்த வாழ்நாள் 28 முதல் 30 நாட்கள் ஆகும். எனவே ஒரு வருடத்தில் பலமுறை பல எண்ணிக்கையில் பெருக்கம் அடைகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இதன் இளம் புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் பயிர்களை தாக்கி சாற்றை உறிஞ்சும் திறன் படைத்தது.தண்டுப் பகுதியில் உள்ள இலை உறைகளின் அடிப்புரத்தில் சாற்றை உறிஞ்சுவதால் அதன் மேற்புறத்தில் வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காண இயலும். 
  • அதேபோன்று இலைகளின் அடி புறத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மேல் புறத்தில் நிறம் மாற்றம் காண இயலும். 
  • பூக்கள் விரிவடையும் முன்னதாக மஞ்சரியில் காணப்படும் இலை உறையின் அடி புறத்தில் இதன் தாக்குதலால் வெளிர் நிறமாற்றத்தை காணலாம்.
  • பூக்கள் மற்றும் இளம் காய்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தங்கி சாற்றை உறிஞ்சுவதால் இளம் முதல் முதிர்ந்த காய்களில் இதன் அறிகுறிகள் காணப்படும். 
  • இதனால் காய்களில் துரு பிடித்தது போன்ற சொரசொரப்பான சிவப்பு நிற அமைப்பு காணப்படும். நாளடைவில் இந்த காய்களில் வெடிப்பு தோன்றும்.
  • இலைகளில் மஞ்சள் நிறமாக மாறுதல், உருமாற்றம் அடைதல் மற்றும் உதிர்தல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இலை பேன்கள் பறக்கும் தன்மை கொண்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட பயிர் மூலமாகவே மற்ற இடங்களுக்கு அதாவது இளம் கன்றுகள் வாயிலாக பரவுகிறது.எனவே பாதிக்கப்பட்ட வயலில் இருந்து இளம் கன்றுகள்/ கட்டைகளை கண்டிப்பாக தேர்வு செய்யக்கூடாது.ஒருவேளை தேர்வு செய்தால் அதனை சுடு தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
  • மீண்டும் மீண்டும் ஒரே வயலில் வாழை சாகுபடி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • வழக்கமாக சாகுபடி செய்யும் ரகத்தை தவிர்த்து புதிய ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம். 
  • அடி உரமாக ஏக்கருக்கு இரண்டு முதல் நான்கு டன் நன்கு மக்கிய தொழு உரம் இடும் பொழுது அதனுடன் மூன்று கிலோ Metarhizium மற்றும் ஒரு கிலோ Trichoderma ஆகிய இரண்டையும் கலந்து சுமார் 18-20 நாட்கள் ஊட்டமேற்றி பின்பு இட வேண்டும்.
  • அல்லது ஏக்கருக்கு 200 கிலோ இடித்த வேப்பங்கொட்டை இட வேண்டும் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
  • பயிர் இடைவெளி வழக்கத்திற்கு மாறாக  சற்று அதிக இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் துரு இலைபேன் இனப்பெருக்கத்திற்கு தேவைப்படும் சாதகமான சூழ்நிலையை தவிர்க்கலாம். 
  • நன்மை செய்யும் பூச்சியான கண்ணாடி இறக்கை பூச்சி, பொறி வண்டு போன்றவற்றை வயல்களில் அதிகப்படுத்த ஊடு பயிராகவும் வரப்பு பயிராகவும் பூ வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • வயலில் கண்டிப்பாக களைகள் அல்லது முந்தைய பயிர்களின் எச்சங்கள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • ஆறு மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக வாழை மரத்தில் துரு இலைபேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை காண வேண்டும்.
  • அவ்வாறு தென்படும் பட்சத்தில் ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • 100 gauge தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி தார் பகுதியை மூடி வைக்கலாம். ஆனால் இதில் தொடர்ச்சியாக தாக்குதல் உள்ளதா என்பதை கவனித்து வரவேண்டும். 
  • ஆறு மாதங்களுக்கு பிறகு மாதம் ஒருமுறை ஏக்கருக்கு இரண்டு முதல் நான்கு கிலோ Fibronil குருணைகள் அல்லது Mettarhizum இட்டு நீர் பாய்ச்சுவதால் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
  • அதேபோன்று இழை வழியாக Fibronil என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி அல்லது Verticillium lecanii 18 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வருவதால் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
  • தண்டுப் பகுதியில் spirotetramet+imidacloprid என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தியும் இதன் தாக்குதலை குறைக்கலாம்.
  • அதேபோன்று மஞ்சரியில் 500 மில்லி தண்ணீரில் 0.3 மில்லி imidacloprid கலந்து ஊசி மூலம் செலுத்துவதால் 75% துரு இலைபேன் தாக்குதலை குறைக்கலாம்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து அறிகுறிகள் தென்பட்டால் இலைபேனை கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


ஞாயிறு, 9 ஜூன், 2024

நிலக்கடலையில் நீர் மேலாண்மையில் ஏற்படும் சவால்கள்

முன்னுரை:

  • வைகாசி பட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விதைப்பு மேற்கொண்டு தற்பொழுது சுமார் 10 முதல் 25 நாள் வயது பயிராக சாகுபடியில் உள்ளது. 
  • தற்போது பெய்து வரும் குறைந்தபட்ச மழையினால் கூட தொடர்ச்சியான மண் ஈரப்பதம் திகழ்வதால் பல்வேறு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நிலக்கடலையில் காண முடிகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களும் பெரும்பான்மையான பயிறு வகை பயிர்களும் தொடர்ச்சியான மழைப்பொழிவு / வயலில் நீர்த்தேக்கம் / தொடர்ச்சியான ஈரப்பதம் போன்ற பல்வேறு நீர் மேலாண்மை சார்ந்த காரணங்களால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நிலக்கடலையில் நீர் மேலாண்மை: 

  • மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் தேர்வு செய்யப்படும் ரகம் ஆகியவற்றைப் பொறுத்து நிலக்கடலை மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் மூலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது மண் தன்மையை பொறுத்து சராசரியாக 7-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அதாவது மணல் மற்றும் சரளை வகை மண்ணில் ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் செம்மண் போன்ற நிலங்களுக்கு சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது.
  • நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற அதன் மொத்த வாழ்நாளில் சுமார் 500 முதல் 800 மில்லி மீட்டர் அளவிற்கு நீரை கொடுத்தால் நல்லது.
  • நிலக்கடலை பயிரில் நீர் மேலாண்மையில் ஏற்படக்கூடிய சவால்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று வறட்சி பருவம் மற்றொன்று பூக்கும் பருவம். 
  • வளர்ச்சி பருவம் என்பது விதை விதைப்பு மேற்கொண்ட நாட்கள் முதல் சராசரியாக 55 நாட்கள் வயதுடைய பயிராக கருதலாம். இந்த நாட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயிர் அதிகப்படியான வறட்சியை கூட தாங்கி வளரும் ஆனால் மண்ணில் நிலவும் தொடர்ச்சியான ஈரப்பதத்தினால் குன்றிய பயிர் வளர்ச்சி, பல்வேறு  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல நோய்கள் பயிரை தாக்கும்.

பயிர் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்:(50 நாட்களுக்கு உட்பட்ட வயது உடைய பயிர்களில்)

அதாவது வளர்ச்சிப் பூர்வமான முதல் 50 முதல் 55 நாட்களில் பயிர் வறட்சியை எளிதாக தாங்கி வளரும் ஆனால் மழை காரணமாக அல்லது தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுவதால் கீழ்க்கண்ட அறிகுறிகளை நாம் வயலில் காண இயலும்.

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • குன்றிய வேர் வளர்ச்சி 
  • இதனால் வேர்ப்பகுதியில் வேர் முடிச்சுகள் குறைவாக உருவாதல். எனவே தழைச்சத்தை கிரகித்து வேர்ப்பகுதியில் நிலை நிறுத்துவது வெகுவாக குறையும். 
  • இளம் பருவத்திலேயே செடிகளின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்தல். 
  • பயிர்கள் சரியாக கிளை பிரியாமல் காணப்படுதல்.
  • கிளைகளில் காணப்படும் கணு இடைவெளி பகுதி அதிகமாக இருப்பதால் குச்சி போன்ற வளர்ச்சி இருக்கும்.
  • இதனால் பயிரில் இருக்கும் மொத்த எண்ணிக்கையின் இலைகள் குறைவாகவே காணப்படும்.
  • நிலக்கடலையை உருவாக்கக்கூடிய விழுதுகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: தழைச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, துத்தநாகம் மற்றும் சல்பர் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரதானமாக காண இயலும். 
  • ஏற்படும் நோய்கள்:  வேர் அழுகல், கழுத்து அழுகல் மற்றும் மொட்டு அழுகல் நோய் பிரதானமாக காணப்படுகிறது.

50 நாட்களுக்கு மேற்பட்ட வயது உடைய பயிரில் ஏற்படும் அறிகுறிகள்:

  • வாடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • விழுதுகள் எண்ணிக்கை குறைந்து மற்றும் மண்ணில் சரிவர புதையுறாமல் இருக்கும். 
  • காய்கறி எண்ணிக்கை குறைதல்.
  • நிலக்கடலையில் உள்ள பருப்புகள் போதுமான அளவு பெருக்கம் அடையாமல் இருக்கும்.
  • நாட்டு நிலக்கடலையில் பருப்பின் சுவை மாறுபட்டு காணப்படுதல். 
  • ஆனால் பருப்பில் இருக்கும் எண்ணெய் சதவீதம் மற்றும் புரதச்சத்து அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • நிலக்கடலை ஒரே தருணத்தில் முதிர்ச்சி அடைவது இல்லை. 
  • அறுவடை சமயத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் விதை முளைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது போன்ற வேளாண்மை சார்ந்த தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 7 ஜூன், 2024

மரவள்ளி பயிரை தொடர் மழையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

முன்னுரை:

  • மரவள்ளி பயிரானது எந்த அளவிற்கு தண்ணீரை விரும்புகிறதோ அதே அளவிற்கு அதிக அளவு தண்ணீர் விடும் பொழுது பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் இது தரைமட்டத்திற்கு கீழ் இருக்கக்கூடிய கிழங்கு பகுதியை மகசூலாக அடிப்படையாகக்  கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக ஈரப்பதம் இருத்தல் அல்லது அதிக நீர் தேங்குவது பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி இருப்பதால் போதுமான காற்று மண்ணிற்கு உள் அதாவது வேர் பகுதிக்கு செல்வதில்லை. இதனால் மண்ணில் இருக்கும் காற்றை வேர்கள் விரைந்து பயன்படுத்துவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவ்வாறு சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும் பொழுது அழுகல் நோய், வளர்ச்சி தடைபடுதல், ஊட்டச்சத்து கிடைக்காமல் இருத்தல், பயிர் வாடுதல் போன்ற அறிகுறிகளை நாம் காண இயலும்.
  • பொதுவாக எந்த ஒரு பயிரிலும் மண்ணில் நீர் தேங்கி இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் தென்படும். மரவள்ளி பயிரை பொருத்தவரையில் வயலில் நீர் தேங்கி இருந்தால் மூன்று முதல் நான்காவது நாட்களில் அதன் அறிகுறிகள் நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியவரும். அழுகல் நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான் இதில் கவனிக்கப்பட வேண்டியவை அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

அழுகல் நோய்:

  • ஒன்று முதல் மூன்று மாத பயிரில், விதைக்குச்சி அல்லது வேர் பகுதி அல்லது கழுத்து பகுதி ஆகிய இடங்களில் அழுகல் தென்படும். 
  • இதனால் ஒழுங்கற்ற இலை வளர்ச்சி மற்றும் இலை மஞ்சள் நிறமாதல் நாளடைவில் செடிகள் இறந்துவிடும்.
  • மூன்று முதல் ஐந்து மாதங்கள் வயதுடைய பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல், இலைகள் வாடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். 
  • ஆறு மாதங்களுக்கு மேல் வயது உடைய பயிர்களில் ஆரம்ப வளர்ச்சியில் இருக்கும் கிழங்குகள் பாதிக்கப்பட்டு அழுகல் ஏற்படும் இதனால் இலைப் பகுதியில் அறிகுறிகள் தென்படும். கழுத்துப் பகுதியிலும் அழுகல் நோய் ஒரு சில இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 
  • பொதுவாக அழுகல், இந்த பயிரில் பல வகை பூஞ்சனங்களால் தாக்குவதால் ஏற்படுகிறது எனவே இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊட்டச்சத்து பற்றாக்குறைகள்: 

  • நமது குழுவில் நான் பலமுறை கூறியது உண்டு எந்த ஒரு பயிரிலும் வேர் பகுதிக்கு காற்றோட்டம் இல்லை எனில் கண்டிப்பாக ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும் என. 
  • மரவள்ளியில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை செடிகளின் அடி இலைகளில் தென்படும். உதாரணத்திற்கு அடி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறம் மாற்றம் காணப்பட்டால் அது மெக்னீசியம் பற்றாக்குறை. 
  • கால்சியம், மாங்கனிசு, போரான், இரும்பு, காப்பர், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை அறிகுறிகள் செடிகளின் நுனிப்பகுதியில் உள்ள இலைகளில் காணப்படும்.
  • இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பு கோடை மழையில் இருந்து பயிர்களை காக்க நாம் எந்த வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிந்து கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • இதைத் தவிர பல்வேறு வழிகளிலும் பயிர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது உதாரணத்திற்கு பயிர்கள் ஒரு புறமாக சாய்தல், இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. 

இதிலிருந்து பயிர்களை காக்க பொதுவான சில வழிமுறைகள்: 

  • ரசாயன உரம் இடுவதை தவிர்க்கவும்.
  • இயற்கை வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தவும்.
  • முன்னெச்சரிக்கையாக அழுகல் நோயை கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை ஏக்கருக்கு தலா 1.5 லிட்டர் நீரில் விடலாம் அல்லது வேர் பகுதியில் ஊற்றலாம்.
  • பயிர்களுக்கும் அதன் வேர்களுக்கும் வெப்பத்தை அளிப்பதற்கு சல்பேட் உரம் இடலாம்.
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை வயலில் இருந்து அகற்றலாம்.

  • தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் இயற்கை வழி பூஞ்சான மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தி ஊட்டமேற்றி இடலாம்.
  • தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர்த்தேக்கம் இருக்கும் சூழ்நிலையில் VAM நன்மை செய்யும் பூஞ்சானம் சிறப்பாக செயல்பட்டு ஒருவித அமினோ அமிலங்களை பயிர்களுக்கு அளித்து பயிர் செழிப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே பருவ மழைக்கு முன்னதாக ஏக்கருக்கு நான்கு கிலோ வீதம் VAM இடுவது மிகவும் உகந்தது.

  • அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரசாயன  மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம். Carbendazim + Mancozeb / COC /Copper hydroxide / Metalaxyl + Mancozeb / Thiophanate methyl / Fosetyl Aluminum etc..

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு நமது குழுவில் இணைந்து பயன்படுத்தலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


Recent Posts

Popular Posts