google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 9 ஜூலை, 2026

இயற்கை துப்புரவாளர்கள் – சாண வண்டு

முன்னுரை:

இயற்கை சூழலில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலையைப் பேணுவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது. அவ்வாறு இயற்கையின் ஒரு அற்புத படைப்பாக திகழ்வதுதான் இந்த சாண வண்டு  (Dung Beetle) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதுவும் சாதாரண பூச்சி வகையில் ஒன்றுதான். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் உழைப்பு உன்னதமாக கருதப்படுகிறது. இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய பணியை செய்வதால் இதனை சூற்றுச்சூழலின் பொறியாளர்/இயற்கையின் துப்புரவாளர்கள் /சாணம் உருட்டு வண்டு என அழைக்கப்படுகிறது.

உடலமைப்பு மற்றும் இனப்பெருக்கம்:

மற்ற பூச்சி இனங்களை போன்றே இதன் உடலமைப்பும் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். வயிற்றின் சராசரி நீளம் 0.5 செ.மீ ஆகும். தலையில் கண்கள் மற்றும் விசிறி போன்ற உணர்கொம்புகள் இருக்கும். மார்பு பகுதியில் கடினமான இளங்கொம்பும் ஆறு கால்களும் உள்ளன. முன்னங்கால்கள் சிறியதாகவும் பின்னங்கால்கள் பெரியதாகவும் காணப்படும். பின்னங்கால்களால் தான் சாணியை உருட்டி செல்கின்றன. வயிறு உணவு செரிப்பதற்கு உதவி புரிகிறது.

இவற்றின் முன்பகுதி மண்வெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இது சாணத்தை உருட்ட உதவுகிறது. இவை கருப்பு, பழுப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. அவற்றின் நெற்றியில் காணப்படும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமின்றி நிலத்தில் சுரங்கம் தோண்டப் பயன்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறு சாணத்தை மட்டுமே உண்ணும், அதுவும் இலைத்தழைகளை உண்ணும் விலங்குகளின் (ஆடு, மாடு, குதிரை, யானை) சாணத்தினையே விரும்பி உண்ணும். இவை சாணத்தை ஒரு பந்தாக உருட்டி அதில் முட்டையிடும், முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இந்த சாணத்தை உண்டு வளரும், இவை சுமார் 3 மில்லி மீட்டர் அளவிலிருந்து 3 செ.மீ அளவு வரை காணப்படுகிறது. சாணி வண்டில் இதுவரை சுமார் 7000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சாணி வண்டுகள் கூட்டமாக வாழும் நல்ல மோப்ப சக்தி உடையது. 

மழைபொழிவு காலத்தில் சாணி வண்டுகள் இனப்பெருக்கத்திற்கான தனது துணையை தேடும். அளவில் பெரிதான சாணி உருண்டையை உருட்டி பெண் வண்டை கவரும். ஆண் மற்றும் பெண் வண்டுகள் ஒரே வளைக்குள் வாழ்ந்து முட்டையிடும். முட்டையிலிருந்து வரும் இளம் புழுக்கள் சாணியை உண்டு வண்டாக வெளியே வரும். இவ்வண்டுகளின் ஆயுள் காலம் 2-3 மாதம், சில வண்டுகள் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

முக்கிய வகைகள்

1.  உருட்டும் சாண வண்டு

·சாணத்தை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்கின்றன.

பாதுகாப்பான இடத்தில் புதைத்து அதில் முட்டையிடும்.

2.   தோண்டும் சாண வண்டு

· சாணத்தின் கீழ் சுரங்கம் தோண்டி அதில் முட்டையிடும்.

3.   சாணத்தின் உள்ளே வாழும் வண்டு

·சாணத்தின் உள்ளேயே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

விவசாயத்தில் இதன் நன்மைகள்:

  • சாணத்தை மண்ணுக்குள் கொண்டு செல்வதால் கரிமச்சத்து அதிகரிக்கும். மேலும் நுண்னுயிரிகளின் பெருக்கம் நன்றாக இருக்கும்.
  • சுரங்கம் தோண்டுவதால் நீர் பிடிப்பு திறன் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சி மேம்படும்.
  • சாணம் மண்ணில் மட்குவதால் ஊட்டச்சத்துகள் மீண்டும் மண்னிற்கு திரும்புகின்றன.
  • சாணத்தில் முட்டையிடும் ஈக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இனப்பெருக்கம் தடைபடும்.
  • சாணத்தில் இருக்கும் விதைகள் மண்ணுககுள் கொண்டு செல்வதால் உயிரினப் பல்வகைமை அதிகரிக்கும்.
  • மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன.

பாதுகாப்பின் அவசியம்:   

          இன்றைய தீவிர வேளாண்மையில், கால்நடைகளுக்கு அதிக அளவில் வழங்கப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளின் எச்சங்கள் சாணத்தில் இருப்பதால் பல சாண வண்டுகள் உயிரிழக்கின்றன. இதனால் சாண வண்டு இனங்கள் பல பகுதிகளில் குறைந்து வருகின்றன. எனவே அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மிகவும் அவசியம்.

முடிவுரை

        சாண வண்டு என்பது சாணத்தை உருட்டும் ஒரு சாதாரண G+ச்சி அல்ல. அது இயற்கையின் துப்புரவாளன், மண் வளத்தை மேம்படுத்தும் உயிரியல் பொறியாளர், ஊட்டச்சத்து மறுசுழற்சியாளர் மற்றும் விவசாயிகளின் மறைமுக நண்பன். மண்ணின் ஆரோக்கியம் பயிர் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் இதன் பங்கு அளப்பரியது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS?s=cl&p=a&ilr=1&amv=1

சனி, 4 ஜூலை, 2026

வாழையில் மெக்னீசியம் (Mg) சத்து குறைபாடு – அறிகுறிகள் மற்றும் மேலாண்மை

 

மெக்னீசியம் என்பது தாவர வளர்ச்சிக்கு தேவையான இரண்டாம் நிலை பேரூட்டச்சத்து (Secondary Macronutrient) ஆகும். இது குளோரோபில் மூலக்கூறின் மைய அணுவாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மற்றும் மாவுச்சத்து  உருவாக்கத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது.

மெக்னீசியம் தாவரத்தில் இடம்பெயரும் (Mobile nutrient) தன்மை கொண்டது. எனவே, குறைபாடு ஏற்பட்டால் முதலில் வயதான இலைகளிலிருந்து Mg இளம் இலைகளுக்கு நகர்ந்து விடுகிறது. இதனால் கீழ் இலைகளிலேயே முதற்கட்ட அறிகுறிகள் தோன்றுகின்றன.

மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பிரதான செயல்பாடுகள்:

1. குளோரோபில் உருவாக்கம்

ü குளோரோபில் மூலக்கூறின் மையத்தில் Mg உள்ளது.

ü Mg இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெறாது.

2. ஒளிச்சேர்க்கை

ü  சூரிய ஒளியை வேதியியல் ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

ü  CO-ஐ கார்போஹைட்ரேட்டாக மாற்றும் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது.

3. ATP உருவாக்கம்

ü Mg இல்லாமல் ATP செயல்படாது. ATP என்பது தாவரத்தின் "ஆற்றல் நாணயம்" ஆகும்.

4. நொதிகளின் (Enzymes) செயல்பாடு

ü 300-க்கும் மேற்பட்ட நொதிகள் Mg இருப்பினால்தான் சிறப்பாக செயல்படுகின்றன.

5. சர்க்கரை கடத்தல்

ü இலைகளில் உருவாகும் சர்க்கரை பழம் மற்றும் குலைக்கு நகர Mg உதவுகிறது.

வாழையில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

  • முதலில் வயதான இலைகளில் தோன்றும்.
  • இலை நரம்புகள் பச்சையாக இருந்து, நரம்புகளுக்கு இடையிலான பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும் (Interveinal Chlorosis).
  • குறைபாடு அதிகரித்தால் இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகி காய்ந்து விடும்.
  • பச்சையத்தின் அளவு குறைந்து உணவு உற்பத்தி குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும். இதற்கு நீல நோய் என்ற பெயர் உண்டு
  • பற்றாக்குறை அதிகரித்தால் மட்டைகள் தண்டு பகுதியில் இருந்து விலகி காணப்படும்.
  • தண்டின் வலிமை குறையும்
  • குலை எடை மற்றும் பழத்தின் தரம் குறையும்.
  • பழங்கள் சிறியதாக இருத்தல்

Magnesium deficiency in BananaHorticulture :: Deficiencies and Disorders-Banana-Magnesium

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

o   மணற்பாங்கான மண்

o   அமில மண் (pH < 5.5)

o    கரிமப்பொருள் குறைவு

o   அதிக மழையால் Mg கழுவிச் செல்லுதல்

o   அதிக தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கால்சியம் இடுதல்

மேலாண்மை:

1. மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்

2. அடி உரமாக ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

3. குறைபாட்டு அறிகுறியின் ஆரம்ப நிலையில் செடி ஒன்றுக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.

4. அதிக தழைச்சத்து,  சாம்பல் சத்து மற்றும் கால்சியம் தவிர்க்க வேண்டும்.

5. 1% மெக்னீசியம் சல்பேட் இலைத் தெளிப்பு: 2–3 முறை

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறவும். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

வியாழன், 2 ஜூலை, 2026

நூற்புழுக்களுக்கு எதிரான உயிரியல் போராளிகள்

Pochonia chlamydosporia  மற்றும் Purpureocillium lilacinum நீடித்த வேளாண்மைக்கான நிலையான தீர்வு

பயிர் சாகுபடியில் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் நிலையற்ற தட்பவெப்ப சூழ்நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், களைகள் மட்டுமல்லாமல் கண்களுக்குப் புலப்படாத நூற்புழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் வாழும் இந்நுண்ணுயிர் போன்ற விலங்குகள் தாவர வேர்களைத் தாக்கி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை குறைத்து, பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பெருமளவில் பாதிக்கின்றன.

தோட்டக்கலை பயிர்களில் சுமார் 10 - 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் உடையது.

நூற்புழு (Nematode) என்றால் என்ன?

நூற்புழுக்கள் (Plant Parasitic Nematodes) என்பது மண்ணில் வாழும் மிகச் சிறிய, நீளமான, நூல் போன்ற நுண்ணுயிர் விலங்குகள் ஆகும். இவை தாவர வேர்களில் ஊசி போன்ற ”Stylet என்ற உறுப்பை நுழைத்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன.

முக்கிய தீங்கு விளைவிக்கும் நூற்புழுக்கள்

1. வேர்முடிச்சி நூற்புழு - Root-knot nematode (Meloidogyne spp.)

2.  மொச்சை வடிவ நூற்புழு - Reniform nematode (Rotylenchulus reniformis)

3. வேர்குத்தும் நுற்புழு – Pratylenchus spp

4. சிட்ரஸ் நுற்புழு – Tylenchulus semipenetrans

5. வாழை துளைக்கும் நூற்புழு – Radopholus similis

6. சுழல்  நூற்புழு – Helicotylenchus spp

இவை வாழை, தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை, மா, மாதுளை, பப்பாளி, கொய்யா,  எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:

ü வேர்களில் முடிச்சுகள் உருவாகுதல்

ü வேர் வளர்ச்சி குறைதல்

ü சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைதல்

ü குன்றிய பயிர் வளர்ச்சி

ü இலை மஞ்சளாதல்

ü வறட்சியை தாங்கும் திறன் குறைதல்

ü  பூ மற்றும் காய் உதிர்தல்

ü மகசூல் குறைதல்

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறிகளை ஒத்து இருப்பதால் அளவுக்கு அதிகமாக உரம் இடுதலை தவிர்த்து நூற்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியல் முறையில்  நூற்புழுக்களை கட்டுப்படுத்துதல்:

நூற்புழுக்களை கட்டுப்படுத்த பிரதானமாக இரண்டு பூஞ்சாணங்கள் பயண்படுத்தப்படுகிறது.

1. Pochonia chlamydosporia

 2. Purpureocillium lilacinum

முக்கிய வேறுபாடுகள்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

முக்கிய இலக்கு

நூற்புழு முட்டைகள்

நூற்புழு முட்டைகள்  +  பெண் நூற்புழுக்கள்

செயல்படும் வேகம்

மிதானமாக (நீண்டகால தாக்கம்)

விரைவாக (விரைவு தாக்கம்)

வேர் மண்டல குடியேற்றம்

சிறந்தது நீண்டகால நிலைக்கும்

மிதானமானது

முக்கிய நொதிகள்

அதிக Chitinase

அதிக Protease

இரண்டாம் நிலை நச்சப் பொரட்கள்

குறைவு

அதிகம்

Root-knot nematode கட்டுப்பாடு

சிறந்தது

சிறந்தது வேகமான தாக்கம்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

Cyst Nematode கட்டுப்பாடு

மிகவும் சிறந்தது

மிதானமானது

தாவர வளர்ச்சி ஊக்குவித்தல் (LAA, Phosphate solubilisation)

அதிகம்

மிதானமானது

மண்ணில் நீடிக்கும் திறன்

அதிகம்

மிதானமானது

பயன்படுத்தும் வழிமுறைகள்: 

  • 100 கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்துடன் 1 கிலோ பர்புரியோசிலியம் லிலாசினம் கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின்னர் அடி உரமாக இடவேண்டும்.
  • திரவ வடிவ திரவங்களை ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கலாம். 
  • பழப் பயிர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு 500 முதல் 1 கிலோ இடலாம்.
  • போச்சோனியா கிளமிடோஸ்போரியா உயிரியல் பூஞ்சானத்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் நன்கு நன்கு மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ü நூற்புழு முட்டைகள் மற்றும் பெண் நூற்புழுக்களை அழிக்கிறது.

ü வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ü பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

ü இரசாயனப் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் போது கவணிக்கப்பட வேண்டியவை

ü முழு பலன் பெற மண்ணணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

ü நேரடி வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.

ü பயன்படுத்தும் முன் லேபிளில் உள்ள வழிமறைகளை பின்பற்றவும்.

முடிவுரை:

நூற்புழுக்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்றாலும், அவை ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியது. இவற்றை கட்டுப்படுத் Pochonia chlamydosporia  மற்றும  Purpureocillium lilacinum  போன்ற நன்மை பயக்கும் பூஞ்சாணங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த, அறிவியல் பூர்வமான மற்றும் பொருளாதார ரீதியாக பயனுள்ள தீர்வாகும்.

மண் வளத்தை காக்கும் இந்த உயிரியல் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வதே எதிர்கால நிலையான வேளாண்மைக்கான முக்கிய அடித்தளமாக அமையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

வெள்ளி, 1 மே, 2026

மா தண்டு துளைப்பான் மேலாண்மை

முன்னுரை:

  • மா மரங்களை பல்வேறு பூச்சிகள் தாக்கினாலும் மா தண்டு துளைப்பான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பூச்சியாக கருதப்படுகிறது. 
  • ஏனெனில் மறைமுகமாக தாக்கி மரங்களை அழித்துவிடும். 
  • மா தண்டு துளைப்பான் காரணமாக சுமார் 40% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும்.

🪲 வாழ்க்கை சுழற்சி : 

  • வண்டுகள் பெரிதாகும் கடினமான இறக்கைகளைக்  கொண்டிருக்கும். முன் இறக்கையில் இருபுறமும் சிகப்பு புள்ளிகள் காணப்படும். 
  • இதன் உணர் கொம்புகள் அதன் உடம்பை விட நீளமாக இருக்கும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் காணப்படும் வெடிப்புகள் சிறு சிறு காயங்கள் போன்ற இடங்களில் வண்டுகள் தனது முட்டைகளை தனித்தனியாக  இடும்.
  • சுமார் 15- 25 நாட்களுக்கு பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6-8 மாத காலம் வரை மரத்தின் தண்டு அல்லது கிளை  பகுதியில் உள்ள திசுக்களை துளைத்து உண்டு வாழும்.
  • கூட்டுப் புழுக்கள் பாதித்த இடங்களில் காணப்படும். 
  • வண்டுகளின் நடமாட்டம்  மே முதல் ஜூன் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதனால் புழு தாக்குதலை ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை எப்படி பார்க்கலாம். 

தாக்குதலின் அறிகுறிகள் :

  • வண்டுகள் நேரடியாக பதிப்பை ஏற்படுத்தாது.
  • இளம் புழுக்கள் மரத்தின் தண்டு அல்லது கிளைப் பகுதியில்   துளையிட்டு தொடர்ச்சியாக உண்டு பல்வேறு அறைகளை ஏற்படுத்தும். 
  • திசுக்களை உண்டு     மரத்தூள் சக்கைகளை வெளியேற்றும்.
  • சில நேரங்களில் மரத்தில் தண்டுப் பகுதியில் இருந்து சாறு வெளியேறுவதை காண இயலும். 
  • கிளை அல்லது தண்டைத் துளைத்து உண்ணுவதால் ஊட்டச்சத்து மற்றும் நீர் மரங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஒரு ஒரு பகுதியாக இறந்துவிட்டது. 
  • சரியாக கவனிக்கவில்லை  எனில் மரம் இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • முறையான பராமரிப்பு அவசியம்.  பராமரிப்பு இல்லாத தோப்புகளில் வண்டு தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • வண்டு தாக்குதல் குறைவாக இருக்கும் நிலம்  போன்ற ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த வண்டுகள் தாக்கும் இதர பயிர்களான பப்பாளி, அத்தி, முருங்கை, ரப்பர், மல்பரி போன்றவற்றை ஊடுபயிராகவோ அல்லது அருகிலோ சாகுபடி செய்யக்கூடாது. 
  • மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • இறந்த மரங்களை வேரோடு அகற்றி எரித்து விட வேண்டும்.
  • மே மற்றும் ஜூன் மாதங்களில் மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில்  காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மோனோகுரோட்டாபாஸ் கலந்து தடவ வேண்டும். 
  • இதனால் முட்டையிடும் சதவீதம் குறையும்.
  • வண்டுகள் நடமாட்டம் இருப்பின் உடனடியாக விளக்கு பொறி வைத்து அதனை கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • மே முதல் ஜூன் மாத இரவில் வரை மரத்தின் தண்டு பகுதியில் நைலான்  வலைகளை கட்டி வைக்கலாம். இதில் முட்டையிடும் வண்டுகள் எளிதில் மாட்டிக் கொள்ளும்.
  • புழு தாக்குதல் இருப்பின்  துளையிலிருந்து புழுக்களை அகற்றி விட்டுப் பின்னர் மோனோகுரோட்டாபாஸ் அல்லது Dichlorovos மருந்தில் பஞ்சை நனைத்து  துளையில் வைக்க வேண்டும்.
  • Arka borer control (ABC) பொருளை மரத்தின் தண்டு மற்றும் கிளை பகுதியில் தடவுவதன் மூலம் முட்டையிடுதல் தடுக்கப்படுவதுடன் தாக்கப்பட்ட புழுக்களும் இறந்துவிடும். இது சுமார் 4 மாத காலம் வரை புழு தாக்குதல் இல்லாமல்  பாதுகாக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

🌞கோடை பயிரும் 🥀பாக்டீரியா வாடல் நோயும்

முன்னுரை:

  • கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் கத்தரி, தக்காளி, மிளகாய், உருளை மற்றும் வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு காய்கறி பயிர்களில் பாக்டீரியா வாடல் நோய் தாக்குதல் அதிகம் காணப்படும். நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் திடீரென வாடி இறந்துவிடும்.
  • இதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. சராசரியாக 30 லிருந்து 70% வரை கூட இந்நோய் தாக்கதால் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • இந்த நோயானது _Ralstonia solanacearum_என்று அழைக்கப்படும் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. மண் மற்றும் பயிர் கழிவுகளில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது பல்கிப் பெருகி சாகுபடி பயிரில் நோய் தாக்குதலை ஏற்படுகிறது. 

கோடைகாலத்தில் ஏன் அதிகம்? 

  • கோடைகாலத்தில் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம், அதிக சுற்று சூழல் வெப்பநிலை மற்றும் மண் வெப்ப நிலையில் ஏற்படும் அதீத மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் கோடைகாலத்தில் பாக்டீரியா வாடல் நோய் அதிகம் காணப்படுகிறது. 
  • கோடைகாலத்தில் மண் வெப்பநிலை அதிகமாக (30-40 டிகிரி செல்சியஸ்) உயரும் தருணத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாம் தண்ணீர் பாச்சும் பொழுது திடீரென மண் வெப்பநிலை குறையும் சூழலில் விரும்பி விரும்பி வாழும். இதன் காரணமாக தீமை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கமடைந்து பயிரை தாக்கும். 
  • கூடுதலாக தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது, முந்தைய பயிர் கழிவு எச்சங்கள் முழுமையாக அகற்றாமல் இருப்பது மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட நாற்றுகளை பயன்படுத்துவது நோய் தாக்குதலை அதிகரிக்கும். 

🪾நோய் தாக்கம்: 

  1. மண்ணில் மிக நீண்ட நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சாதகமான நேரத்தில் பயிரின் வேர்களை தாக்கும். 
  1. மண்ணிலிருந்து வேர் வழியாக தாவரங்களின் வாஸ்குலார் திசுக்களை சென்றடைவதால் போதிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காமல் திடீரென வாடி இறந்துவிடும். 

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பகல் நேரங்களில் இலைகள் சற்று வாடி காட்சியளிக்கும். 
  • மாலை மற்றும் இரவு நேரத்தில் தற்காலிகமாக பயிர்கள் நன்றாக இருப்பது போன்ற தோன்றும். 
  • ஆனால் நோய் தாக்குதல் சற்று தீவிரம் அடையும் பொழுது திடீரென பயிர்கள் வாடி இறந்துவிடும். 
  • பயிர் மற்றும் இலைகள் அனைத்தும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். பூஞ்சை வாடல் நோயால் ஏற்படும் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இங்கு முற்றிலும் இருக்காது. 
  • பாதிக்கப்பட்ட பயிரின் தண்டு பகுதியை பிளந்து பார்த்தால் நிறமாற்றம் காணப்படும். 
  • வயலில் அங்கு இங்குமாக திட்டாக காணப்படும் இது போன்ற அறிகுறிகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும். 
  • முறையாக கட்டுப்படுத்தவில்லை எனில் பயிர் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படும். 

🌱கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். மாற்று பயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடலாம். 
  • தரமான விதை அல்லது நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். கோடை பருவத்திற்கென பரிந்துரைக்கப்படும் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொண்டால் சிறந்தது. 
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு திரவங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி இட வேண்டும். 
  • இயற்கை இடு பொருட்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது அதிக வெப்பநிலையை தாங்கி வளருவதுடன் நோய் எதிர்ப்பு திறனுடன் காணப்படும். 
  • மூடாக்கு அமைத்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் அதிகம் வெப்பமடைவதை தவிர்க்கலாம் மேலும் மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். 
  • கோடைப் பருவத்தில் முன்னெச்சரிக்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை trichoderma அல்லது bacillus உயிரியல் திரவம் மற்றும் ஈயம் கரைசல் ஏக்கருக்கு தலா மூன்று லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கவும். 
  • காலை அல்லது மதிய நேரத்தில் நீர் பாய்ச்சுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது இரவு நேரங்களில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
  • நோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக பாதித்த செடிகளை வேரோடு அப்புறப்படுத்தி அகற்றவும். 
  • பாதித்த செடிகள் இருந்த இடம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் trichoderma/ bacillus, 200 மில்லி ஈயம் கரைசல் மற்றும் 100 மில்லி ஹியூமிக் அமிலம் கலந்து வேர் மண்டலம் நனையும்படி ஊற்றவும். 
  • வயலில் எப்போதும் மிதமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யவும். மண் அதிக வெப்பமடைந்தால் பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகமாகும். 
  • தட்பவெப்ப சூழ்நிலை, பயிர் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • இரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் வேர் மண்டலத்தில் ஊற்ற வேண்டும். 

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

Recent Posts

Popular Posts