google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: மற்றவைகள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 அக்டோபர், 2025

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரானது இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் பழப்பயிரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. வாழை மரங்கள் மென்மையான வேர் அமைப்புடையதாக திகழ்வதால் பருவமழை காலங்களில் தொடர் மழை அல்லது அதிக காற்று காரணமாக மரங்கள் சாய நேரிடலாம். குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மரங்கள் சாய்வதை சற்று குறைக்கலாம்.

  • வடிகால் வசதியை மேம்படுத்தி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். 
  • வாழைக் கன்றுகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதன் மூலம் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொண்டு அதிக காற்று நேரத்தில் சாயாமல் இருக்க உதவி புரியும்.
  • மேட்டுப்பாத்தியில் நடவு செய்திருந்தால் அதன் உயரத்தை சற்று அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எளிதில் நீர் ஓடி வழிந்து விடும். 
  • நோய் அல்லது பூச்சி தாக்கல் பாதிக்கப்பட்ட அடி இலைகளில் ஒன்று அல்லது இரண்டினை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மேல் இலைகளை அப்புறப்படுத்தவே தவிர்க்க வேண்டும். 
  • கன்றுகளின் உச்சிப் பகுதியில் உள்ள இலைகளை சற்று கிழித்து விடலாம் இது காற்று எளிதில் நுழைந்து வர உதவி புரியும். இதனால் பயிர்கள் சாய்வதை தவிர்க்கலாம். 
  • தார் தள்ளிய  மரங்களுக்கு கண்டிப்பாக மூங்கில் கலிகளை பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் காய்ந்த இலை அல்லது தண்டு பகுதி வயலில் அழுகுவதை தவிர்க்க வேண்டும். 
  • தற்சமயம் திகழும் தட்பவெப்ப சூழ்நிலை வேர் அழுகல், வாடல் நோய், தண்டு அழுகல் நோய், மஞ்சள் மற்றும் கருப்பு இலை புள்ளி நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது கிடைக்கப்பெறும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூஞ்சான  மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்த வேண்டும். 
  • இது பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தடுக்க உதவி புரியும் மேலும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும். 
  • கண்டிப்பாக தற்போது மண்ணைக் கிளறி ரசாயன அல்லது இயற்கை உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ரசாயன உரங்கள் இடுவதால் மிக எளிதில் கரைந்து வயலை விட்டு வெளியேறலாம் அல்லது மண்ணில் ஆழமாக சென்று பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலத்தடி நீருடன் கலக்கும். 
  • மண்ணைக் கிளறுவதால் வேர்களின் பிடிப்பு திறன் சற்று குறையும். இந்த மரங்கள் அதிக காற்று வீசும் போது எளிதில் சாயலாம். 
  • மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உதாரணத்திற்கு வரப்புகளை உயர்த்துதல், மூடாக்கு இடுதல் மற்றும் இதர. 
  • இதை அனைத்தும் பின்பற்றிய பிறகும் அதிக காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தால் உடனடியாக தங்களது பகுதி தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • இதன் மூலம் சாய்ந்த மரங்களுக்கு இழப்பீடு பெற வாய்ப்புள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மண்ணில் அமோனியம் சல்பேட் இடலாம். இது ஊட்டச்சத்து ஆகவும், நோய் பரவலை தடுக்கவும், காற்றில் உள்ள வெப்பநிலையை எடுத்து பயிர்களுக்கு கொடுக்கும் உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy?mode=wwc


புதன், 15 அக்டோபர், 2025

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

  • தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பருவ மழை காலங்களில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் நோய் போன்ற காட்சி அளிக்கும் பூஞ்சை - பாசி வளர்ச்சியை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 
  • லிச்சென் (Lichen) என்பது பூஞ்சை மற்றும் பாசிகள் இணைந்து வளரும் அமைப்பாகும். இந்த உயிரினம் அடர் காடுகளில் மரத்தின் தண்டு பகுதி, பாறைகள், மண் மற்றும் இதர பொருட்களில் வளர்வதை நாம் காண இயலும்.
  • இதில் காணப்படும் பூஞ்சை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து வளரும். பாசிகள் இதில் வளர்ந்து கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு கொடுத்து வாழும்.
  • பல நூறு வகையான லிச்சென்கள் உள்ளன அவற்றில் குறிப்பிட்ட சில வகை குடும்பத்தில் காணப்படும் பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் மட்டுமே இந்தியாவில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன Graphina, Leptogium, Lecanora, Pyxine, Myriotrema, Porina. லிச்சென்கள் பல்வேறு நிறம் மற்றும் வடிவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லிச்சென் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • அளவுக்கு அதிகமான நிழல்
  • போதிய காற்றோட்டம் இன்மை 
  • அடர் நடவு 
  • பராமரிப்பு இல்லாத தோப்புகள்

லிச்சென் வளர்ச்சி காரணமாக ஏற்படும் பாதிப்புகள்:

  • லிச்சென்கள் நேரடியாக மரங்களை பாதிப்பதில்லை ஏனெனில் இதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தென்னை மரங்களை கிடைப்பதில்லை. 
  • நேரடியாக பயிர்களை பாதிக்காவிட்டாலும் கவனிக்கப்படவில்லை எனில் இந்த பூஞ்சை பாசி வளர்ச்சி படிப்படியாக பரவி மரத்தின் இலை பகுதியை தாக்கினால் பயிர் வளர்ச்சி தடைபடுவதுடன் மகசூல் இழப்பீடும் ஏற்படும். 
  • மேலும் இது இதர பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • மரங்களுக்கு உரிய நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும். 
  • ஒன்று அல்லது இரண்டு ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் போதிய வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் மரத்தின் தண்டு பகுதிக்கு கிடைக்கும்.
  • பாதிக்கப்பட்ட தோப்புகளில் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
  • ஆரம்ப நிலை வளர்ச்சியின் பொழுது தண்ணீரைப் பீச்சி அடித்து இதனை அப்புறப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சை பாசிகளை கண்டிப்பாக சுரண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • சுரண்டி எடுத்த பிறகு இந்த பகுதியில் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு உடன் ஓட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் இந்த தெளிப்பை இரண்டாவது முறை தெளிக்க வேண்டும். 
  • பிறகு தண்டு பகுதியில் சுண்ணாம்பு பூச வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    பருவமழை காலங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவே திகழ்கின்ற மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மழை, நீர்த்தேக்கம், காற்று, தொடர்ச்சியான மண் ஈரப்பதம் ஆகியவை பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதற்கு உதாரணமே"தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்" என்ற பழமொழி ஆகும்.

தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சால சிறந்தது. 

  • வடிகால் வசதியை சீரமைத்து நீர் தேங்குவதை தவிர்க்கவும். 
  • தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் அதாவது கழுத்துப் பகுதியில் கண்டிப்பாக நீர் தேங்கா கூடாது. 
  • எனவே அடித்தண்டு பகுதியில் மிதமான அளவில் மண் அணைப்பது உகந்தது. 
  • தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி மற்றும் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்படலாம் இதன் மூலம் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • வட்டப்பாதையில் மூடாக்கு அமைத்து கிடைக்கப்பெறும் நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். 
  • மூடாக்கிற்கு காய்ந்த மட்டைகள், தூளாக்கப்பட்டு மக்க வைத்த மட்டை தூள்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் அரிப்பை தடுக்கலாம். 
  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம். இது நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும். 
  • பருவமழை காலங்களில் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் ரசாயன உரங்கள் எளிதில் கரைந்து வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் ஆழமாக செல்லலாம். 
  • அல்லது அதிக மழைப்பொழிவு காரணமாக வயலில் இருந்து வெளியே அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளன. 
  • ரசாயன உரம் இட முன் பருவ அல்லது பின் பருவ மழை காலங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் நமக்கு தேவையான மண் ஈரப்பதம் இருக்கும் 
  • பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்தலாம் இது மண்ணில் பல்கி பெருகும். 
  • பருவமழை முடிந்த பிறகு மண்ணின் கார அமிலத்தன்மையை ஆய்வு செய்து அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அதிக மழை பெய்தால் ஊட்டச்சத்துக்கள் கரைந்து வெளியேறும் இதனால் அமில காரத் தன்மையில் கண்டிப்பாக மாற்றம் காணப்படலாம். 
  • இளம் தென்னங்கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும். 
  • பருவமழை காலங்களில் மரத்திற்கு அருகாமையில் ஆழமாக உழவு செய்வதை தவிர்க்கலாம். இது வேர்களை காயப்படுத்தும் இதனால் நோய் தாக்குதல் மிக எளிதில் ஏற்படலாம். 
  • மேலும் இதன் காரணமாக வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் சூழல் குறையும். இது போன்ற நேரங்களில் அதிக காற்று அடித்தால் மரங்கள் சாய் வாய்ப்புள்ளது. 
  • தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் காணப்பட்டால் பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை காண இயலும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு சுண்ணாம்பு அடித்து விடவும். 
  • காய்ந்த நிலையில் இருக்கும் அடி இலைகளை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி வெட்டி அப்புறப்படுத்தலாம். 
  • மரத்தின் கொண்டைப் பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் மற்றும் குரும்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தலாம். ஏனெனில் இது குருத்துப் பகுதியில் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்தலாம்.
  • தோப்பில் காணப்படும் மட்டைகளை சேகரித்து வரப்பில் அடுக்கி வைக்க வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகள் நிலத்தில் அழுகினால் நோய் மற்றும் வண்டு தாக்குதல் வர வாய்ப்புள்ளது. 
  • ஆனா வரி தோப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை வெட்டி மழை நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். 
  • வானிலை அறிக்கையை பின்பற்றி அதற்கு ஏற்றவாறு அறுவடை பணியை செய்ய வேண்டும். அதிக காற்று அல்லது மழை பெய்யக்கூடும் என கருதப்படும் நேரத்தில் மரம் ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • மரங்களுக்கு காப்பீடு செய்து வைப்பது மிக மிக சிறந்தது.
  • வட்டப்பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடைக்க பெறும் மழை நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும்.
  • தஞ்சாவூர் வாடல், வேர் வாடல் மற்றும் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன் அறிகுறிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்

    வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பூச்சி நோய் தாக்குதல்,  ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்,  நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை,  பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது. 

    இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:

  • வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும். 
  • இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
  • இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும். 
  • அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும். 
  • இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
  • இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை. 
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும். 
  • இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும். 

பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல். 
  • பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல். 
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும். 
  • அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
  • பராமரிப்பு குறைபாடு 
  • போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்: 

  • சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது. 
  • போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
  • உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
  • வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
  • நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
  • சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

புதன், 23 ஜூலை, 2025

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

  • பயிர்களின் தேவையை அறிந்து அல்லது நோய் அல்லது பூச்சிகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை வாங்குவதற்கு முன்னதாக நாம் வாங்கும் கடை அரசின் மூலம் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • நல்ல நிறுவனத்தின் பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
  • பொருட்களை வாங்கும் பொழுது அதன் தரம், காலாவதி நாள் மற்றும் லேபிள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி உக்கிகளை தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீரில் கலந்து மாலை அல்லது காலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • மாலை அல்லது காலை வேளையில் தெளிப்பதன் மூலம் மருந்துகள் அதிக வெப்பநிலை காரணமாக ஆவியாகி வீணாவதை தடுக்கலாம். 
  • மேலும் இந்த நேரத்தில் இலை துளைகளின் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுவதால் மருந்துகள் எளிதில் இலைகளால் எடுத்துக் கொள்ளப்படும்.
  • மருந்துகளை தெளிப்பவர்கள் முக கவசம் மற்றும் இதர உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், காற்று வீசும் திசையில் சென்று தெளிக்க வேண்டும். 
  • தெளிக்கும் பொழுது வரிசை வரிசையாக சென்று இருபுறமும் உள்ள பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் மருந்துகள் முழுமையாக பயிர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தலாம். 
  • மருந்து அல்லது வளர்ச்சி ஊக்கி தெளிக்க உரிய தெளிப்பான் தேர்வு செய்து, மருந்துகள் இலையின் மேற்புறம் அல்லது அடிப்புரத்தில் பனித்துளி மாதிரி படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெளிக்கும் பொழுது  மருந்தின் செயல்பாடு மேம்படும்.
  • நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணிகள் பெரும்பான்மையாக இலைகளின் அடிபுரத்தில் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • தெளிப்பு மேற்கொண்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் மருந்துகள் நன்றாக செயல்படும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


புதன், 25 ஜூன், 2025

மணல் சார்ந்த மண் பூமியில் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • அதிக மணல் தன்மையுடைய மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வது கடினமாகும். இது மட்டுமின்றி மண்ணில் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் மண்ணுக்கு அடியில் சென்று பயிர்களுக்கு எட்டாத வண்ணம் சென்றுவிடும். 
  • தண்ணீரும் அதே போன்று தான் ஆழமாக சென்று விடுவதால் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது இதனால் மீண்டும் மீண்டும் அதாவது குறுகிய இடைவெளியில் நாம் நீர் பாய்ச்சல் வேண்டிய தேவை இருக்கும். எனவே இந்த மண்ணை மேம்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வர கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

வழிமுறைகள்:
மக்கிய உரங்களை இடுதல்:

  • இங்கு மக்கிய உரங்கள் என்பது கால்நடை தொழு உரம், பண்ணை கழிவு உரம், மண்புழு உரம் மற்றும் கிடைக்கப்பெறும்  மட்கு பொருளை பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு இடும் பொழுது மணல் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைவதால் இவை எளிதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்கிறது. 
  • இதன் மூலம் பயிர்களுக்கு போதுமான அளவு சத்துக்களும் நீரும் கிடைக்கப் பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்பட்டு வேர்கள் மண்ணை இறுக பற்றி நன்கு வளரும்.
  • இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பயிர்களின் வேர் அமைப்புக்கு ஏற்றவாறு தொழு உரங்களை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக இடவேண்டும்.

இயற்கை நிலப் போர்வை அமைத்தல்:

  • பண்ணையில் கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் நிலப் போர்வை அமைக்கலாம். உதாரணத்திற்கு வைக்கோல், பயிர் கழிவுகள், தீவனக் கழிவுகள், களைகள் மற்றும் இதர. 
  • இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆவியாகி வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவர் தடுக்கப்படும் பொழுது பயிர்கள் இதனை எடுத்துக் கொள்ளப் போதிய நேரம் இருக்கும்.
  • இது மட்டுமின்றி மண் அரிப்பு தடுக்கப்படும் மற்றும் களைகள் முளைப்பது வெகுவாக குறையும்.
  • நாளடைவில் இந்த இயற்கை வழி நிலப் போர்வை படிப்படியாக மக்கும் பொழுது  ஊட்டச்சத்துக்கள் மண்ணில் அதிகரிக்கும்.

இதர மண்ணை இடுதல்:

  • மணல் பாங்கான மண் தன்மையை மேம்படுத்த மிதமான அளவு கருப்பு மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு உழவு செய்ய வேண்டும். 
  • இதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்தலாம். 
  • அளவுக்கு அதிகமாக இடக்கூடாது இது மண்ணை மேலும் இறுக செய்துவிடும்.

பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்தல்:

  • பசுந்தாள் பயிர்களை மிக நெருக்கமாக சாகுபடி செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • இதன் வேர்கள் மேல் மண்ணை மிக இறுக்கமாக பிடித்து வைத்து இருப்பதுடன் தழைச்சத்து உரத்தை நிலை நிறுத்திக் கொடுக்கும்.
  • இவற்றை மடக்கி உழவு செய்வதால் அதிக அளவு பயிர் கழிவுகள் மண்ணில் மக்குவதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் மேம்படும். 

உர மேலாண்மை:

  • நீரில் கரையும் உரங்களை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுக்கலாம். 
  • அல்லது ஊட்டச்சத்துக்களை பொறுமையாக கரையை செய்து பயிர்களுக்கு கொடுக்கும் உரங்களை பயன்படுத்தலாம். 
  • தேவைக்கு ஏற்ப இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளித்து வர வேண்டும்.

நீர் மேலாண்மை:

  • வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்க்க வேண்டும். இது நீர் தேவையை அதிகரிக்கும்.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 23 மே, 2025

தென்னை சாகுபடியில் கோகோகான் உயிரியல் திரவத்தின் முக்கியத்துவமும் தயாரிப்பு முறையும்

    தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும், பிரதான நோய்களாக வேர் வாடல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் காணப்படுகிறது. இந்த இரண்டு நோய்களும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் பயிர் இறந்து விடுவதால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

 இந்த நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக அல்லது ஆரம்ப நிலை அறிகுறிகள் காணப்படும் பொழுது தென்னை மரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கோகோகான் (Cococon) பயன்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையில் காணப்படும் நோய்களை  கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து அளித்து நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். 

கோகோகான் உயிரியல் திரவத்தை தயார் செய்யும் வழிமுறைகள்:

  • 200 லிட்டர் கொள்ளளவு உடைய ட்ரம்மில் 150 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • இதில் 10 கிலோ நாட்டுச் சர்க்கரை, 5 லிட்டர் தயிர் மற்றும் 500 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்த கலவையில் 5 லிட்டர் தாய் கோகோகான் கலவையை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்தக் ட்ரம்மை சாக்கு பை பயன்படுத்தி மூடி நிழலில் வைக்க வேண்டும். 
  • தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சுத்தமான மூங்கில் கழியை பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும். 
  • 7 நாட்களுக்கு பிறகு இதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் கலவை நன்கு வளர்ந்து விடும் பிறகு இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 
  • தயார் செய்த கலவையில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 8 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மரத்திற்கு 10 லிட்டர் வீதம் மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை பயன்படுத்தும் போது ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

பயன்கள்:

  • பயிர்களுக்கு தேவையான    சத்துக்களை எளிதில் கிடைக்கச் செய்கிறது. 
  • மரங்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும். 
  • நல்ல பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • காய் பிடிப்பு திறன் மேம்பட்டு காணப்படும்.
  • மண்ணில் நன்மை செய்யக்கூடிய உயிரினங்களின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படும். 
  • நீண்ட கால அடிப்படையில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு அதாவது 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்கவும்.
  • இதிலிருந்து தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து அதில் நான்கு கிலோ கல்லு உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இந்த கலவையில் 3 லிட்டர் மாட்டு கோமியத்தை கலந்து இதனை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • இந்த கரைசலில் இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து 10 முதல் 15 காத்திருந்தால் கரைசலின் மேலே ஆடை தோன்றும். இதனை நீக்கிவிட்டு கரைசலை கலைகளில் தெளிக்கலாம். 
  • இயற்கையின் முறையில் தயாரித்தாலும் இந்த களைக்கொல்லி கரைசலை தொடர்ச்சியாக வயலில் தெளிக்கும் பொழுது மண்ணின் மீது உப்பு போன்ற படலம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • இந்த களைக்கொல்லி கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த இயலாது குறிப்பாக காய்கறிகள், தானிய வகை பயிர்கள், நெல் போன்ற குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
  • பல்லாண்டு தாவரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இதனை பயன்படுத்தலாம் குறிப்பாக பழத்தோட்டங்கள், மரவகைப் பயிர்கள், மலைத் தோட்ட பயிர்கள் மற்றும் பல.
  • இந்த கரைசலை பயன்படுத்தி அனைத்து வகையான களைகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட சில வகை கீரை வகை பயிர்களை மட்டும் கட்டுப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


சனி, 26 ஏப்ரல், 2025

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களும் அதன் பண்புகளும்

  • தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் பல்வேறு பருவங்கள் இருந்தாலும் பிரதான பருவமாக குறுவை பருவம் திகழ்கிறது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 
  • ஜூன்-ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை பருவம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முடிவதால் சுமார் 125 நாட்கள் வாழ்நாள் உடைய நெல் ரகங்கள் தேர்வு செய்து பயிரிடப்படுகிறது.
  • பொதுவாக இந்த பருவத்தில் போதுமான தண்ணீர் வசதி இருப்பதால் நேரடி நெல் விதைப்பு அல்லது புழுதி விதைத்து செய்யப்படுவதில்லை மாற்றாக, பெரும்பான்மையாக நடவு முறையே மேற்கொள்ளப்படுகிறது. இந்த குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

TPS-5

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையைச் சார்ந்தது. 
  • இதன் சராசரி வாழ்நாள் 110 முதல் 115 நாட்கள் 
  • நெல் பயிர்கள் சாயாமல் இருப்பதுடன் அதிக விளைச்சல் தரக்கூடியது. ASD 16 ரகத்தை விட 10-15  சதவீதம் கூடுதல் விளைச்சல் தரும்.
  • சராசரி ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் கிடைக்க வல்லது. 
  • ஓரளவிற்கு தண்டுப்புழு, புகையான் மற்றும் இலை சுருட்டு பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

ASD -16

  • அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1986 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையை சார்ந்தது.
  • இது மொத்த வாழ்நாள் 110 முதல் 115 நாட்களாகும். 
  • ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2000-2250 கிலோ கிடைக்கும். 
  • புகையான் பூச்சி தாக்குதலுக்கு ஓரளவிற்கு எதிர்ப்பு திறன் உடையது.

ADT-36

  • ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் சராசரியாக 110 முதல் 115 நாட்கள் ஆகும். 
  • இது நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்தது ஆகும். 
  • பல்வேறு வகையான இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையது மேலும் புகையான் பூச்சி தாக்குதலுக்கும் தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1800 கிலோ ஆகும். 

ADT -37

  • இந்த நெல் ரகத்தின் சராசரி வாழ்நாள் 105 நாட்கள். 
  • குண்டு நெல் ரகத்தை சார்ந்த இந்த ரகம் அதிக விளைச்சல் தரக்கூடியது. 
  • நெல் பயிரில் தோன்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

ADT 43

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • சற்று உயரமாக அதிக எண்ணிக்கையிலான தூர்களுடன் காணப்படும்.
  • இதன் சராசரி விளைச்சல் 2300 கிலோ ஆகும்.

ADT 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2500 கிலோ ஆகும்.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது குறிப்பாக புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

MDU -5

  • 95 முதல் 100 நாட்கள் வாழ்நாள் உடைய நடுத்தர சன்ன நெல் ரகமாகும். 
  • தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் பகுதிகளுக்கு உகந்தது. 
  • ஏக்கருக்கு சுமார் 2000 கிலோ இதன் சராசரி விளைச்சல் ஆகும். 

MPR 404

  • மகேந்திரா என்று அழைக்கப்படும் இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 120 நாட்களாகும். 
  • இது குண்டு முதல் நடுத்தர நெல் வகையை சார்ந்த ரகம் எனவே நல்ல விளைச்சல் தரக்கூடியது. 
  • ஏக்கருக்கு சுமார் 20 கிலோ விதை அளவு மட்டுமே தேவைப்படும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும். 

CO 51

  • 105 முதல் 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2600 முதல் 2650 கிலோ ஆகும்.
  • நெல் பயிரை பிரதானமாக தாக்கும் பல்வேறு வகையான கருகல் நோய் மற்றும் புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

CO 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த  இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் 120 முதல் 125 நாட்களாகும். 
  • இந்த ரகம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • பல்வேறு வகையான  கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையதுடன் பூச்சி தாக்குதலை தாங்கி  வளரும் தன்மை உடையது.
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறவும்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 24 மார்ச், 2025

தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்

தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....

  • வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல் 
  • தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.
  • போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல் தென்படும்.

  • மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இளம் கன்றுகளின் இலைகளில் கருகல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் காணப்படலாம்.
  • அதேபோன்று நன்கு வளர்ந்த மரங்களில் இலை கருகல் தென்படுவதற்கு பிரதானமான காரணமாக பூஞ்சான நோய் திகழ்கிறது.
  • இந்த நோயினால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு இலைகளின் நுனிப்பகுதியில் கருகல் காணப்படும். 
  • இது இலையின் நுனிப்பகுதியில் இருந்து அடி நோக்கி பரவும். 
  • இது மட்டும் இன்றி தண்டு மற்றும் இலைக்காம்பு பகுதியில் வெடிப்புகளும்,  அதிலிருந்து திரவம் வெளியேறுவதையும் காண இயலும்.

  • ஆனால் கடந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தினாலும் இலை கருகல் தென்பட்டது.

இதை சரி செய்யும் வழிமுறைகள்...

  • தரமான நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
  • ஆழமாக நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மண் இறுக்க தன்மையுடன் இல்லாமல் இருக்க போதுமான அளவு மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகளை இட வேண்டும்.
  • மண்ணில் உள்ள உரங்கள் மட்க வருடத்திற்கு இரண்டு முறை வேஸ்ட் டிகம்போசர் அல்லது ஈயம் கரைசல் பயன்படுத்த வேண்டும்.
  • போதுமான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும்.
  • பயிர்களை அதிக வளர்ச்சிக்கு படுத்தாமல் குறைந்தபட்ச நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் கடைபிடித்தும் இலை கருகல் தென்பட்டால் நோய் காரணிகளாக இருக்கலாம்.
  • அதனை உறுதி செய்ய இலையின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவில் இலை கருகல் காணப்படும். மேலும் அதை உற்று கவனிக்கும் பொழுது தீயில் எறிந்து மீதமுடைய இலைகள் போன்று காணப்படும்.
  • இதனை இயற்கை வழி முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum மற்றும் Bacillus subtillis குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த Hexaconazole என்ற மருந்தை 100 மில்லி தண்ணீரில் 5 மில்லி கலந்து வேர் வழியாக உட் செலுத்த வேண்டும். இதனை வருடத்திற்கு மூன்று முறையாவது பின்பற்ற வேண்டும்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நவரை பட்டத்தின் சிறப்புகள்:

  • தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நெல் சாகுபடிக்கு என உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த நவரை பட்டம்.
  • பருவ மழையில் பெய்யக்கூடிய மழை நீரை சேகரித்து வைத்து அடுத்த கோடை பருவத்தில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராகுவது தான் இந்த பருவம்.
  • ஆரம்ப நிலையில் நீர் ஆதாரம் இருந்தாலும் அதிக வெப்ப காலங்களில் நீர் தேவையை குறைக்க குறைந்த வாழ்நாள் உடைய நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்பயிர்கள்
  • அதாவது பயிர்கள் பூக்கும் தருணத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஆவியாதல் மற்றும் பயிர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் தேவையை குறைத்திட ஏதுவாக குறைந்த வாழ்நாள் உடைய ரகங்களை தேர்வு செய்தல் அவசியம். 
  • எனவே இந்த பட்டத்திற்கு அதிக வறட்சி மற்றும் வெப்பநிலையை தாங்கி வளரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். 
  • பொதுவாக இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களின் அறுவடை தருணத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
  • இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள் மிதமான உயரத்தில் இருப்பதால் காற்று மற்றும் மழை காரணமாக சாயும் அபாயம் இல்லை. 

சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை: 

  • தரமான ரகம் மற்றும் விதைகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • சான்றிதழ் பெற்ற ரகத்தை வாங்குவது சிறந்தது. 
  • பெறப்பட்ட விதைகளை காலை அல்லது மாலை வெப்பநிலை சிறிது நேரம் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்தலாம். 
  • நாற்றங்காலில் அதிக உரம் இடுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விடுவதால் பயிர்கள் நடவுக்கு பின்பு செழித்து வளரும். 
  • இந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் நடுத்தர சன்ன வகையை சார்ந்ததால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் அதிக எண்ணிக்கையில் தூர் கட்டும் திறனுடையது. ஆரம்ப நிலையில் தூர்கள் வெடிப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  • இந்த ரகங்கள் அதிக மகசூலை தர வல்லது என்பதால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்து சரிவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும். 
  • குறிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

உகந்த ரகங்கள்: 

  • ADT 36, ADT 37, ASD 16, IR 64, ASD 18, ADT 42, ADT 43 MDU 5 மற்றும் பல ரகங்கள் உள்ளது.
  • தங்களது பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பிரதானமான மற்றும் அதிக சந்தை மதிப்புடைய ரகங்களை ஆராய்ந்து பின்னர் சாகுபடி செய்யவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 23 டிசம்பர், 2024

தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் தண்ணீர் வசதி இருக்கும் ஒரு சில  விவசாயிகள் வருகிற தை பட்டத்தில்(ஜனவரி - பிப்ரவரி) மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறு சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்வதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ரகம் தேர்வு செய்தல்: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு (ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர்) உட்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அதாவது விதை சான்றிதழில் துறையால் எந்த பருவத்திற்கு இந்த ரகம் சாகுபடிக்கு உகந்தது என கூறியிருப்பார்கள்.  எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரகத்தை தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.
  • சரியான பட்டம் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தால் அந்த ரகத்தை வாங்கி நாம் விதைப்பு மேற்கொண்டு ஏதேனும் பின் விளைவுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த ஒரு பதிலும் தர மாட்டார்கள். 
  • நாம் தேர்வு செய்துள்ள ரகத்தின் விதையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கடையில் மட்டும் தான் கண்டிப்பாக வாங்க வேண்டும். வாங்கும் போது ரகத்தின் பெயர், காலாவதி நாள், முளைப்பு திறன் எவ்வாறு உள்ளது, எந்த பருவத்திற்கு ஏற்றது என பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு வாங்க வேண்டும்.

முளைப்பு திறன் கண்டறிதல்:

வாங்கிய விதையை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக சிறிய பிளாஸ்டிக் தட்டில் மண்ணை எடுத்துக்கொண்டு சுமார் பத்து விதைகளை முளைப்புக்கு ஆட்படுத்த வேண்டும். முளைப்பு திறன் போதுமான அளவு இருந்தால் மட்டுமே வயலில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மேற்கொள்ளுதல்:

அதிக வெப்பநிலை நிலவுவதால் விதைகளை விதைத்து விட்டு பின்னர் நீர் விடுவதை தவிர்க்கவும். இன்று நீர் பாய்ச்சி விட்டு நாளை விதைப்பு மேற்கொள்வதால் அதிக மண் சூட்டினால் முளைப்பு திறனில் பின்னடைவு ஏற்படாமல் நன்றாக இருக்கும். மேலும் வயலில் அநேக விதைகள் முளைப்பு வரும் வரை போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி:

வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விடுவதால் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும்.

உரம் இடுதல்:

அதிக அளவில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பயிர்கள் அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி தாக்குதலை சமாளித்து வளரும் தன்மை பெறும். உதாரணத்திற்கு மண்புழு உரம், கடல்பாசி உரம், உயிர் உரங்கள், தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், இயற்கை தயாரிப்புகள் (பஞ்சகாவியம், மீன் அமிலம் மற்றும் பல).

நீர் மேலாண்மை:

  • கண்டிப்பாக போதுமான அளவு நீர் விட வேண்டும் ஏனெனில் நாம் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் எல்லாம் வீரிய ஒட்டு ரகம். எனவே அவற்றுக்கு அதிக அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். போதுமான அளவு நீர் கிடைக்கப் பெறவில்லை எனில் ஏற்படும் அழுத்தத்தால் செடிகளில் பக்க கிளைகள் சில நேரங்களில் உருவாகும். இது மட்டுமின்றி ஒரே செடியில் மூன்று முதல் நான்கு கதிர்கள் வெவ்வேறு கணுக்களில் பகுதிகளில் உருவாகும். சில நேரங்களில் மட்டுமே இவை அனைத்தும் மணிகள் பிடிக்கும். ஏனெனில் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • விதைத்த 50 முதல் 75 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் மிக முக்கிய தருணம் அந்த நேரத்தில் எந்தவித தொய்வு இன்றி போதுமான அளவு நீர் கொடுக்க வேண்டும்.
  • செடிகள் பூக்கும் தருணத்தில் குறைந்தால் அளவிலாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும் இல்லையெனில் மணி பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு மகசூல் குறையும் வாய்ப்புகள் உள்ளது. ரகத்தை பொறுத்து 55 முதல் 70 நாட்கள் வரை பூக்கும் தருணம் திகழும்.
  • பூக்கள் வெளிவர தொடங்கியது முதல் 10 நாட்கள் மகரந்த சேர்க்கை நடைபெறும் அப்போது கண்டிப்பாக மழை தேவைப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • ஜனவரி மாதம் இறுதி முதலே அதிக வெப்பநிலை திகழ வாய்ப்புள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் படை புழு தாக்குதல் அதிகம் தென்படும். அதை அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் செடிகளின் குருத்து பகுதியை முழுவதும் சேதப்படுத்தி விடும்.
  • அறுவடை சமயத்தில் பருவமழை இல்லாதவாறு விதைப்பு செய்ய வேண்டும். இது போன்ற பல சவால்கள் தைபட்டம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இவற்றைக் கருத்தில் கொண்ட சாகுபடி மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



வெள்ளி, 13 டிசம்பர், 2024

தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

 

நீர் மேலாண்மை

        தென்னை சாகுபடியில் நீர் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தரவும், மரங்கள் திடகாத்திரமாக இருக்கவும், வெப்பத்தை சமநிலை செய்திடவும் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் தேவையான நீரை கொடுத்து வருவதன் மூலம் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை காண இயலும்.  தமிழ்நாட்டில் பொதுவாக வெள்ள நீர் பாசனம், வட்டப்பாத்தி மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது.

வெள்ளநீர் பாசனமுறை

  • இம்முறை நீர் பாசனத்தால் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் காணப்படுவதால், வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லப்படுவதால் பயிர்களுக்கு கிடைக்காமல் சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிக தண்ணீர் விடுவதால் ஊட்டச்சத்து வேர்கள் அழுக நேரிடலாம்.
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக  அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தொற்று ஏற்படலாம்.
  • அதிக தண்ணீர் கொடுப்பதன் காரணமாக இளநீரின் சுவை சற்று குறைந்தும்  கொப்பரைத் தேங்காயின் எண்ணெய் அளவு குறைந்தும் காணப்படலாம்.

வட்டப்பாத்தி முறை

          மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆரத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் நீர் விடப்படுகிறது.  இம்முறையில் சுமார் 400 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது சுமார் 7 நாட்கள் வரை போதுமானதாகும்.  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மணற்பாங்கான மண்ணில் நீர் குறைவாகவும், குறைவான இடைவெளியிலும், களிமண் பூமியில் அதிக இடைவெளியிலும் நீர் பாய்ச்சலாம்.  வட்டப்பாத்தி முறையானது வெள்ளநீர் பாசனமுறையை விட சிறந்தது என்றாலும், உரங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரினால் அடித்து செல்லப்படலாம்.  மேலும், மண் மற்றும் நீர் மூலமாக பரவும் தீமை செய்யும் பூஞ்சைகள் இம்முறையில் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சொட்டு நீர் பாசனமுறை

        சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் விடுவதால் அதிக அளவு தண்ணீரை சேமிப்பதுடன் வறட்சி காலத்திலும் நல்ல பயன்பெறலாம்.  ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றக்கூடிய அமைப்புடைய குழாய்களை பயன்படுத்தி தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 40 முதல் 60 லிட்டர் வரை தண்ணீர் விட வேண்டும்.  கோடைப்பருவத்தில் இன்னும் சற்று அதிகமான நீர் தேவைப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் வட்டப்பாத்தியின் 35 முதல் 40 சதவிகித பரப்பளவை மட்டுமே நனைப்பதால் வேர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.  

நீரியில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனம் வழியாக பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 40 சதவிகிதம் வரை குறைத்து பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 11 டிசம்பர், 2024

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
  • தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.

  • அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
  • பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
  • காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை,  கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
  • மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
  • நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
  • சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
  • பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
  • தீவன பயிர்கள்
  • கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா,  மற்றும் இதர

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும். 

  • கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம். 
  • எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 10 டிசம்பர், 2024

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை  மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். 

  • பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல். 
  • அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
  • மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது. 
  • ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன்  எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
  • காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். 
  • பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
  • காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
  • இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
  • காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம். 
  • காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
  • அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு. 
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
  • அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது  இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம். 
  • சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு. 
  • இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts