google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: மற்றவைகள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஏப்ரல், 2025

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களும் அதன் பண்புகளும்

  • தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் பல்வேறு பருவங்கள் இருந்தாலும் பிரதான பருவமாக குறுவை பருவம் திகழ்கிறது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 
  • ஜூன்-ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை பருவம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முடிவதால் சுமார் 125 நாட்கள் வாழ்நாள் உடைய நெல் ரகங்கள் தேர்வு செய்து பயிரிடப்படுகிறது.
  • பொதுவாக இந்த பருவத்தில் போதுமான தண்ணீர் வசதி இருப்பதால் நேரடி நெல் விதைப்பு அல்லது புழுதி விதைத்து செய்யப்படுவதில்லை மாற்றாக, பெரும்பான்மையாக நடவு முறையே மேற்கொள்ளப்படுகிறது. இந்த குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

TPS-5

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையைச் சார்ந்தது. 
  • இதன் சராசரி வாழ்நாள் 110 முதல் 115 நாட்கள் 
  • நெல் பயிர்கள் சாயாமல் இருப்பதுடன் அதிக விளைச்சல் தரக்கூடியது. ASD 16 ரகத்தை விட 10-15  சதவீதம் கூடுதல் விளைச்சல் தரும்.
  • சராசரி ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் கிடைக்க வல்லது. 
  • ஓரளவிற்கு தண்டுப்புழு, புகையான் மற்றும் இலை சுருட்டு பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

ASD -16

  • அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1986 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையை சார்ந்தது.
  • இது மொத்த வாழ்நாள் 110 முதல் 115 நாட்களாகும். 
  • ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2000-2250 கிலோ கிடைக்கும். 
  • புகையான் பூச்சி தாக்குதலுக்கு ஓரளவிற்கு எதிர்ப்பு திறன் உடையது.

ADT-36

  • ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் சராசரியாக 110 முதல் 115 நாட்கள் ஆகும். 
  • இது நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்தது ஆகும். 
  • பல்வேறு வகையான இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையது மேலும் புகையான் பூச்சி தாக்குதலுக்கும் தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1800 கிலோ ஆகும். 

ADT -37

  • இந்த நெல் ரகத்தின் சராசரி வாழ்நாள் 105 நாட்கள். 
  • குண்டு நெல் ரகத்தை சார்ந்த இந்த ரகம் அதிக விளைச்சல் தரக்கூடியது. 
  • நெல் பயிரில் தோன்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

ADT 43

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • சற்று உயரமாக அதிக எண்ணிக்கையிலான தூர்களுடன் காணப்படும்.
  • இதன் சராசரி விளைச்சல் 2300 கிலோ ஆகும்.

ADT 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2500 கிலோ ஆகும்.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது குறிப்பாக புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

MDU -5

  • 95 முதல் 100 நாட்கள் வாழ்நாள் உடைய நடுத்தர சன்ன நெல் ரகமாகும். 
  • தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் பகுதிகளுக்கு உகந்தது. 
  • ஏக்கருக்கு சுமார் 2000 கிலோ இதன் சராசரி விளைச்சல் ஆகும். 

MPR 404

  • மகேந்திரா என்று அழைக்கப்படும் இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 120 நாட்களாகும். 
  • இது குண்டு முதல் நடுத்தர நெல் வகையை சார்ந்த ரகம் எனவே நல்ல விளைச்சல் தரக்கூடியது. 
  • ஏக்கருக்கு சுமார் 20 கிலோ விதை அளவு மட்டுமே தேவைப்படும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும். 

CO 51

  • 105 முதல் 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2600 முதல் 2650 கிலோ ஆகும்.
  • நெல் பயிரை பிரதானமாக தாக்கும் பல்வேறு வகையான கருகல் நோய் மற்றும் புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

CO 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த  இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் 120 முதல் 125 நாட்களாகும். 
  • இந்த ரகம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • பல்வேறு வகையான  கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையதுடன் பூச்சி தாக்குதலை தாங்கி  வளரும் தன்மை உடையது.
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறவும்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 24 மார்ச், 2025

தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்

தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....

  • வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல் 
  • தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.
  • போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல் தென்படும்.

  • மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இளம் கன்றுகளின் இலைகளில் கருகல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் காணப்படலாம்.
  • அதேபோன்று நன்கு வளர்ந்த மரங்களில் இலை கருகல் தென்படுவதற்கு பிரதானமான காரணமாக பூஞ்சான நோய் திகழ்கிறது.
  • இந்த நோயினால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு இலைகளின் நுனிப்பகுதியில் கருகல் காணப்படும். 
  • இது இலையின் நுனிப்பகுதியில் இருந்து அடி நோக்கி பரவும். 
  • இது மட்டும் இன்றி தண்டு மற்றும் இலைக்காம்பு பகுதியில் வெடிப்புகளும்,  அதிலிருந்து திரவம் வெளியேறுவதையும் காண இயலும்.

  • ஆனால் கடந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தினாலும் இலை கருகல் தென்பட்டது.

இதை சரி செய்யும் வழிமுறைகள்...

  • தரமான நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
  • ஆழமாக நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மண் இறுக்க தன்மையுடன் இல்லாமல் இருக்க போதுமான அளவு மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகளை இட வேண்டும்.
  • மண்ணில் உள்ள உரங்கள் மட்க வருடத்திற்கு இரண்டு முறை வேஸ்ட் டிகம்போசர் அல்லது ஈயம் கரைசல் பயன்படுத்த வேண்டும்.
  • போதுமான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும்.
  • பயிர்களை அதிக வளர்ச்சிக்கு படுத்தாமல் குறைந்தபட்ச நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் கடைபிடித்தும் இலை கருகல் தென்பட்டால் நோய் காரணிகளாக இருக்கலாம்.
  • அதனை உறுதி செய்ய இலையின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவில் இலை கருகல் காணப்படும். மேலும் அதை உற்று கவனிக்கும் பொழுது தீயில் எறிந்து மீதமுடைய இலைகள் போன்று காணப்படும்.
  • இதனை இயற்கை வழி முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum மற்றும் Bacillus subtillis குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த Hexaconazole என்ற மருந்தை 100 மில்லி தண்ணீரில் 5 மில்லி கலந்து வேர் வழியாக உட் செலுத்த வேண்டும். இதனை வருடத்திற்கு மூன்று முறையாவது பின்பற்ற வேண்டும்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 10 ஜனவரி, 2025

நவரை பட்டம் நெல் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

நவரை பட்டத்தின் சிறப்புகள்:

  • தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நெல் சாகுபடிக்கு என உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த நவரை பட்டம்.
  • பருவ மழையில் பெய்யக்கூடிய மழை நீரை சேகரித்து வைத்து அடுத்த கோடை பருவத்தில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராகுவது தான் இந்த பருவம்.
  • ஆரம்ப நிலையில் நீர் ஆதாரம் இருந்தாலும் அதிக வெப்ப காலங்களில் நீர் தேவையை குறைக்க குறைந்த வாழ்நாள் உடைய நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்பயிர்கள்
  • அதாவது பயிர்கள் பூக்கும் தருணத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஆவியாதல் மற்றும் பயிர்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் தேவையை குறைத்திட ஏதுவாக குறைந்த வாழ்நாள் உடைய ரகங்களை தேர்வு செய்தல் அவசியம். 
  • எனவே இந்த பட்டத்திற்கு அதிக வறட்சி மற்றும் வெப்பநிலையை தாங்கி வளரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். 
  • பொதுவாக இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிர்களின் அறுவடை தருணத்தில் அதிக மழை இல்லாத காரணத்தினால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய எளிதாக இருக்கும்.
  • இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரகங்கள் மிதமான உயரத்தில் இருப்பதால் காற்று மற்றும் மழை காரணமாக சாயும் அபாயம் இல்லை. 

சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை: 

  • தரமான ரகம் மற்றும் விதைகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • சான்றிதழ் பெற்ற ரகத்தை வாங்குவது சிறந்தது. 
  • பெறப்பட்ட விதைகளை காலை அல்லது மாலை வெப்பநிலை சிறிது நேரம் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்தலாம். 
  • நாற்றங்காலில் அதிக உரம் இடுவதை தவிர்த்து காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விடுவதால் பயிர்கள் நடவுக்கு பின்பு செழித்து வளரும். 
  • இந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் நடுத்தர சன்ன வகையை சார்ந்ததால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் ரகங்கள் அதிக எண்ணிக்கையில் தூர் கட்டும் திறனுடையது. ஆரம்ப நிலையில் தூர்கள் வெடிப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  • இந்த ரகங்கள் அதிக மகசூலை தர வல்லது என்பதால் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கண்காணித்து சரிவிகித அடிப்படையில் கொடுக்க வேண்டும். 
  • குறிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை பரிந்துரை செய்யப்படும் அளவில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

உகந்த ரகங்கள்: 

  • ADT 36, ADT 37, ASD 16, IR 64, ASD 18, ADT 42, ADT 43 MDU 5 மற்றும் பல ரகங்கள் உள்ளது.
  • தங்களது பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பிரதானமான மற்றும் அதிக சந்தை மதிப்புடைய ரகங்களை ஆராய்ந்து பின்னர் சாகுபடி செய்யவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 23 டிசம்பர், 2024

தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் தண்ணீர் வசதி இருக்கும் ஒரு சில  விவசாயிகள் வருகிற தை பட்டத்தில்(ஜனவரி - பிப்ரவரி) மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறு சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்வதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ரகம் தேர்வு செய்தல்: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு (ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர்) உட்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அதாவது விதை சான்றிதழில் துறையால் எந்த பருவத்திற்கு இந்த ரகம் சாகுபடிக்கு உகந்தது என கூறியிருப்பார்கள்.  எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரகத்தை தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.
  • சரியான பட்டம் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தால் அந்த ரகத்தை வாங்கி நாம் விதைப்பு மேற்கொண்டு ஏதேனும் பின் விளைவுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த ஒரு பதிலும் தர மாட்டார்கள். 
  • நாம் தேர்வு செய்துள்ள ரகத்தின் விதையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கடையில் மட்டும் தான் கண்டிப்பாக வாங்க வேண்டும். வாங்கும் போது ரகத்தின் பெயர், காலாவதி நாள், முளைப்பு திறன் எவ்வாறு உள்ளது, எந்த பருவத்திற்கு ஏற்றது என பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு வாங்க வேண்டும்.

முளைப்பு திறன் கண்டறிதல்:

வாங்கிய விதையை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக சிறிய பிளாஸ்டிக் தட்டில் மண்ணை எடுத்துக்கொண்டு சுமார் பத்து விதைகளை முளைப்புக்கு ஆட்படுத்த வேண்டும். முளைப்பு திறன் போதுமான அளவு இருந்தால் மட்டுமே வயலில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மேற்கொள்ளுதல்:

அதிக வெப்பநிலை நிலவுவதால் விதைகளை விதைத்து விட்டு பின்னர் நீர் விடுவதை தவிர்க்கவும். இன்று நீர் பாய்ச்சி விட்டு நாளை விதைப்பு மேற்கொள்வதால் அதிக மண் சூட்டினால் முளைப்பு திறனில் பின்னடைவு ஏற்படாமல் நன்றாக இருக்கும். மேலும் வயலில் அநேக விதைகள் முளைப்பு வரும் வரை போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி:

வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விடுவதால் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும்.

உரம் இடுதல்:

அதிக அளவில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பயிர்கள் அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி தாக்குதலை சமாளித்து வளரும் தன்மை பெறும். உதாரணத்திற்கு மண்புழு உரம், கடல்பாசி உரம், உயிர் உரங்கள், தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், இயற்கை தயாரிப்புகள் (பஞ்சகாவியம், மீன் அமிலம் மற்றும் பல).

நீர் மேலாண்மை:

  • கண்டிப்பாக போதுமான அளவு நீர் விட வேண்டும் ஏனெனில் நாம் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் எல்லாம் வீரிய ஒட்டு ரகம். எனவே அவற்றுக்கு அதிக அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். போதுமான அளவு நீர் கிடைக்கப் பெறவில்லை எனில் ஏற்படும் அழுத்தத்தால் செடிகளில் பக்க கிளைகள் சில நேரங்களில் உருவாகும். இது மட்டுமின்றி ஒரே செடியில் மூன்று முதல் நான்கு கதிர்கள் வெவ்வேறு கணுக்களில் பகுதிகளில் உருவாகும். சில நேரங்களில் மட்டுமே இவை அனைத்தும் மணிகள் பிடிக்கும். ஏனெனில் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • விதைத்த 50 முதல் 75 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் மிக முக்கிய தருணம் அந்த நேரத்தில் எந்தவித தொய்வு இன்றி போதுமான அளவு நீர் கொடுக்க வேண்டும்.
  • செடிகள் பூக்கும் தருணத்தில் குறைந்தால் அளவிலாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும் இல்லையெனில் மணி பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு மகசூல் குறையும் வாய்ப்புகள் உள்ளது. ரகத்தை பொறுத்து 55 முதல் 70 நாட்கள் வரை பூக்கும் தருணம் திகழும்.
  • பூக்கள் வெளிவர தொடங்கியது முதல் 10 நாட்கள் மகரந்த சேர்க்கை நடைபெறும் அப்போது கண்டிப்பாக மழை தேவைப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • ஜனவரி மாதம் இறுதி முதலே அதிக வெப்பநிலை திகழ வாய்ப்புள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் படை புழு தாக்குதல் அதிகம் தென்படும். அதை அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் செடிகளின் குருத்து பகுதியை முழுவதும் சேதப்படுத்தி விடும்.
  • அறுவடை சமயத்தில் பருவமழை இல்லாதவாறு விதைப்பு செய்ய வேண்டும். இது போன்ற பல சவால்கள் தைபட்டம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இவற்றைக் கருத்தில் கொண்ட சாகுபடி மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



வெள்ளி, 13 டிசம்பர், 2024

தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

 

நீர் மேலாண்மை

        தென்னை சாகுபடியில் நீர் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தரவும், மரங்கள் திடகாத்திரமாக இருக்கவும், வெப்பத்தை சமநிலை செய்திடவும் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் தேவையான நீரை கொடுத்து வருவதன் மூலம் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை காண இயலும்.  தமிழ்நாட்டில் பொதுவாக வெள்ள நீர் பாசனம், வட்டப்பாத்தி மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது.

வெள்ளநீர் பாசனமுறை

  • இம்முறை நீர் பாசனத்தால் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் காணப்படுவதால், வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லப்படுவதால் பயிர்களுக்கு கிடைக்காமல் சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிக தண்ணீர் விடுவதால் ஊட்டச்சத்து வேர்கள் அழுக நேரிடலாம்.
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக  அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தொற்று ஏற்படலாம்.
  • அதிக தண்ணீர் கொடுப்பதன் காரணமாக இளநீரின் சுவை சற்று குறைந்தும்  கொப்பரைத் தேங்காயின் எண்ணெய் அளவு குறைந்தும் காணப்படலாம்.

வட்டப்பாத்தி முறை

          மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆரத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் நீர் விடப்படுகிறது.  இம்முறையில் சுமார் 400 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது சுமார் 7 நாட்கள் வரை போதுமானதாகும்.  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மணற்பாங்கான மண்ணில் நீர் குறைவாகவும், குறைவான இடைவெளியிலும், களிமண் பூமியில் அதிக இடைவெளியிலும் நீர் பாய்ச்சலாம்.  வட்டப்பாத்தி முறையானது வெள்ளநீர் பாசனமுறையை விட சிறந்தது என்றாலும், உரங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரினால் அடித்து செல்லப்படலாம்.  மேலும், மண் மற்றும் நீர் மூலமாக பரவும் தீமை செய்யும் பூஞ்சைகள் இம்முறையில் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சொட்டு நீர் பாசனமுறை

        சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் விடுவதால் அதிக அளவு தண்ணீரை சேமிப்பதுடன் வறட்சி காலத்திலும் நல்ல பயன்பெறலாம்.  ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றக்கூடிய அமைப்புடைய குழாய்களை பயன்படுத்தி தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 40 முதல் 60 லிட்டர் வரை தண்ணீர் விட வேண்டும்.  கோடைப்பருவத்தில் இன்னும் சற்று அதிகமான நீர் தேவைப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் வட்டப்பாத்தியின் 35 முதல் 40 சதவிகித பரப்பளவை மட்டுமே நனைப்பதால் வேர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.  

நீரியில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனம் வழியாக பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 40 சதவிகிதம் வரை குறைத்து பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 11 டிசம்பர், 2024

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
  • தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.

  • அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
  • பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
  • காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை,  கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
  • மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
  • நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
  • சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
  • பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
  • தீவன பயிர்கள்
  • கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா,  மற்றும் இதர

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும். 

  • கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம். 
  • எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 10 டிசம்பர், 2024

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை  மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். 

  • பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல். 
  • அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
  • மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது. 
  • ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன்  எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
  • காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். 
  • பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
  • காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
  • இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
  • காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம். 
  • காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
  • அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு. 
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
  • அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது  இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம். 
  • சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு. 
  • இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 15 அக்டோபர், 2024

மழை தருணத்தில் தக்காளி சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை கவனிக்கப்பட வேண்டியவை...

முன்னுரை: 

நெல் போன்ற ஒரு சில பயிர்களை தவிர நாம் சாகுபடி செய்யும் அநேக  பயிர்களுக்கு மண் பகுதியில் ஈரப்பதமும் காற்றோட்டமும் சரிவிகித அடிப்படையில் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் சீரான வளர்ச்சி மற்றும் மகசூல் பெற இயலும். இதேபோன்று பயிரின் மண் பகுதிக்கு மேல் இருக்கும் இலை பகுதியில் போதுமான அளவு வெப்பநிலையும் திகழ வேண்டும்.தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது தக்காளி சாகுபடியில் ஏற்படும் சில சவால்களை விரிவாக பார்ப்போம். 

நாற்றாங்காலில் ஏற்படும் சவால்கள்:

  • பாத்தியில் விதைக்கப்பட்டுள்ள விதைகளில் முளைப்புத்திறன் குறைபாடு, வேர் அழுகல், தண்டு அழுகல், பேன் மற்றும் வண்டுகளால் ஏற்படும் அறிகுறிகள் காணப்படலாம். 
  • நன்கு உயரமான மேட்டுப்பாத்தி அமைத்து அதில் போதுமான அளவு மக்கிய தொழு உரம், டிரைக்கோடெர்மா, பாஸ்போபாக்டீரியா மற்றும்   ஹீயூமிக் அமிலம் இட வேண்டும்.
  • விதைகளை சற்று ஆழமாக விதைக்க  வேண்டும். 
  • மேட்டுபபாத்தி மழையால் பாதிக்கப்படாத அளவு தார்ப்பாய் உரிய உயரத்தில் கட்ட வேண்டும். இல்லையெனில் மேட்டுப்பாத்தியில் மக்கிய வைக்கோல்கள் 1இன்ச்  உயரத்திற்கு இட வேண்டும்.
  • விதைகள் முளைக்கும் போதும் முளைத்த பிறகும் வேர் மற்றும் கழுத்து அழுகல் நோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் வாரம் ஒருமுறை  டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை தலா 50 மில்லி நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.
  • பேன் மற்றும் வண்டு தாக்குதல் காணப்படும் பொழுது மெட்டாரைசியம் நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.

வயலில் ஏற்படும் சவால்கள்:
பயிர் வளர்ச்சி: 

  • தொடர்ச்சியான மழை அல்லது மண் ஈரப்பதத்தினால் வேர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாமல் குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • போதுமான பகல் வெப்பநிலை இல்லாத காரணத்தால் இலைகளினால் உணவு உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டு காணப்படாலாம்.
  • இதனால் தக்காளி பயிரில் பிரதானமாக தழைச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், போரான் மற்றும் கால்சியம் பற்றாக்குறை காணப்படும்.
  • எனவே, மழைத் தருணத்தில் கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி இலை வழியாக பேரூட்ட  மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை இட வேண்டும்.
  • பயிர்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு நொதிகளால் நடைபெறுகிறது.
  • வெப்பநிலை பற்றாக்குறை ஏற்படும் பொழுது பயிர்களில் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி தடைபடுவதால் அதனையும் நாம் இலை வழியாக கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் வாரம் ஒரு முறை இலை வழியாக ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கி  தெளிப்பது சிறந்தது.

பூ பூத்தல் மற்றும் காய் பிடித்தல்:
  • தக்காளி வயலில் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நின்றால் அல்லது தொடர்ச்சியான ஈரப்பதம்  இருந்தால் வேர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாமல் ஊட்டச்சத்துக்களை கிரகித்து பயிர்களுக்கு எடுத்து தருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பூ பிடித்தல் 27 முதல் 25% வரை குறையும். 
  • பகல் மற்றும் இரவு நேரத்தில் திகழும் குறைந்த வெப்பநிலை காரணமாக பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் பூ உதிர்வு அதிகம் காணப்படும். 
  • பூக்கள் விரிந்த உடன் அதில் ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும் தருணத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோயினால் பூக்கள் சற்று கருகி அதிக அளவு உதிரும்.
  • இவை அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய பூக்கள் காயாக மாற வாய்ப்புகள் உள்ளது. தக்காளி பூக்கள் தன் மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் நடைபெறுவதால் பூச்சி அல்லது காற்றுகள் பெரிய அளவு தேவைப்படாது.
  • அதே போன்று வெப்பநிலை குறைபாடு பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி தடை படுவதால் அதை நாம் செயற்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே பூப்பிடித்தலை அதிகப்படுத்த இயலும்.
  • மண்ணில் அதிக ஈரப்பதம் திகழும் பொழுது தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவ்வாறு நாம் இடம் குறைந்தபட்ச உரம் கூட பயிரின் இலை வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் பூ பூத்தலை தாமதப்படுத்தும்.

நோய்கள்:
வேர் மற்றும் கழுத்து அழுகல்:

  • இறுக்கமான மற்றும் வடிகால் வசதி இல்லாத வயலில் இந்த நோய் தொடர்ச்சியாக காணப்படும்.
  • மண்ணின் கிடைமட்டத்தில் உள்ள தண்டுப்பகுதியில் நீர்த்த புண்கள் தோன்றி நாளடைவில் செடிகள் முறிந்து இறந்து விடும்.
  • இந்த நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயிர்கள் துவண்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதலையும் காண இயலும்.

பாக்டீரியா வாடல் நோய்:

  • அதிக மழைப்பொழிவு மற்றும் காற்று ஈரப்பதம் திகழும் பொழுது இந்த பாக்டீரியா வாடல் நோய் அதிகம் தென்படும்.
  • நன்கு வளர்ந்த பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் மொத்த பயிலும் துவண்டு காணப்படும். 

  • இரண்டு மூன்று தினங்களில் பயிர்கள் பச்சையாக இருக்கும் பொழுது வாடி இறந்துவிடும். 
  • இந்த நோய் நீர் வழியாக பரவும் அபாயம் உள்ளதால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு தண்ணீர் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிட்டு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பேசில்லஸ் சப்டில்லிஸ் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

  • வாடல் நோய்: 

  • பாக்டீரியா வாடல் நோய் போன்றே பூஞ்சைகளாலும் வாடல் நோய் தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஏற்படும். இந்த நோய் தாக்குதல் பரவாமல் இருக்க ட்ரைகோடெர்மா விரிடி தெளிப்பு வாயிலாகவும் பாசன நீர் வாயிலாகவும் கொடுக்க வேண்டும். 

  • இலைப்புள்ளி நோய்கள்: 

  • பருவ மழையின் போது இலை புள்ளி நோய்களும் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதில் பல வகைகள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • காய் அல்லது பழங்களில் ஏற்படும் மாற்றங்கள்:

  • பழம் அல்லது காய்களில் மழைக்காலங்களில் பாக்டீரியா தாக்குதலால்  புள்ளிகள் காணப்படும்.

  • வேர்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததாலும் அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களால் காய்கள் ஒழுங்கற்ற முறையில் பழுக்கும். 

  • ஒழுங்கற்ற வடிவில் காய்கள் தென்படும். 

  • காய் அல்லது பழங்களில் வெடிப்புகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் காணப்படும் இது தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பாகும். 
    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 19 செப்டம்பர், 2024

பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை....

  • பருவ மழைக்கு முன்னதாக சட்டி கலப்பை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்வதன் மூலம் நிலத்தின் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை கொத்து கலப்பை பயன்படுத்தி உழவு செய்து கட்டிகளை நன்றாக தூளாக்கி பின்னர் தேவையின் அடிப்படையில் ரோட்டாவேட்டர் பயன்படுத்தலாம்.
  • நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யும் பொழுது மேட்டுப்பாத்தி அல்லது தகுந்த இடைவெளியில் பார்கள் அமைத்து விதைப்பு மேற்கொள்ளலாம். 
  • கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் /ஒரு டன் மண்புழு உரம், தேவையின் அடிப்படையில் அதனுடன் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகள் கலந்து கொள்ளலாம்.
  • ரசாயன உரங்கள் இடவேண்டும் என்றால் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி, பொட்டாஸ் 15 முதல் 20 கிலோ, பருத்தி நுண்ணூட்ட உரம் 5-8 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
  • நாம் பொதுவாக B.t வகை வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்வதால் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படும்  உர அளவான தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 60 கிலோ முதலியவற்றை ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு  இடலாம். 
  • மண்ணில் நல்ல ஈரப்பதம் இருக்கும் பொழுது 60-90 X 30-45 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளலாம். பருத்தி ரகங்களின் முளைப்பு திறன் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 
  • நீர் வசதி இல்லாமல் காய்ச்சலில் விதைப்பு மேற்கொள்ளும் பொழுது மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கண்டிப்பாக இடவேண்டும். 
  • பருத்தியில் களை மேலாண்மை மிகவும் சவாலானதாக திகழ்வதால், இதில் அதிக கவனம் தேவை. விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளியில் களை முளைப்பதற்கு முன்னதாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்து விடவும். உதாரணத்திற்கு Butachlor, Pendimethalin, Alachlor போன்றவற்றை பரிந்துரைக்கப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிரில் தெளிக்க கூடிய களைக்கொல்லிகள் பல இருந்தாலும் அதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட சில களைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக திகழ்கிறது எனவே அதனை முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். 
  • விதைத்த ஏழாம் நாள் முளைப்புத் தவறிய இடங்களில் மீண்டும் விதையை விதைக்கலாம். 
  • நீர் நிர்வாகத்தை பொறுத்தவரையில் உயிர் தண்ணீர், அதைத் தாண்டி பூக்கும் தருணத்திலும், காய்க்கும் மற்றும் காய்கள் பெருக்குமடையும் தருணத்தில் நல்ல ஈரப்பதம் வேர்களுக்கு கிடைத்தால் மகசூலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சலாம். 
  • மண்ணின் அமைப்பு மற்றும் தன்மையை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச நீர் பாய்ச்சினால் பருத்தியில் அதிக அளவு மகசூல் எதிர்பார்க்கலாம். 
  • பயிரின் 40 ஆம் நாள் நுனிப்பகுதியை கிள்ளிவிட்டு தேவையான வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் அதிக கிளை பிரிவதை காணலாம். வீரிய ஒட்டு ரகம் என்பதால் நல்ல கிளை பிரியும் திறன் எதிர்பார்க்கலாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுத்தால். 
  • நுனியை கிள்ளிவிட்டு NAA/Cytocyme போன்ற வளர்ச்சி ஊக்கியை பரிந்துரை செய்த அளவில் ஏழு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் அதிக காய்ப்பு திறன் எதிர்பார்க்கலாம் இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும். 
  • பூக்கும் தருணத்தில் பயிரில் வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் பராமரிப்பது இன்றி அமையாததாகும். இந்த தருணத்தில் பொதுவாக மெக்னீசியம் குறைபாடு காணப்படும். இதனால் இலைகள் விறைப்புத் தன்மையுடனும், இலையின் விளிம்புகள் சிகப்பு நிறத்தில் மாற்றம் அடைவதையும் காண இயலும். பொதுவாக அதிக அளவு பொட்டாசியம் சத்து கொடுக்கும் பொழுது இதை நாம் எதிர்பார்க்கலாம். இது கடந்த சில வருடங்களாக தென்படுகிறது எனவே அடி உரமாகவோ அல்லது இடைவெளியாகவோ போதுமான அளவு மெக்னீசியம் தெளிக்கலாம். 

  • அதேபோன்று போரான் மற்றும் துத்தநாகம் பற்றாக்குறைகள் தென்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு உரிய தருணத்தில் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இழை வழியாக நாம் தெளிக்கும் பொழுது வளர்ச்சி ஊகிகள் கலந்து தெளிப்பதால் பூ /சப்பைகள் உதிர்வதை வெகுவாக குறைக்கலாம். 
  • முதல் அடி உரம் 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் செடிக்கு அருகில் வைத்து நீர் விட வேண்டும். அப்பொழுது மணிச்சத்தும் பொட்டாசியம் சத்தும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஏக்கருக்கு தலா 40 கிலோ இடலாம். இடைப்பட்ட காலத்தில் நீர் வசதி இருந்தால் அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் NPK consortia வேர்ப்பகுதிகளுக்கு கொடுத்தால் அடியில் இடப்பட்ட உரங்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும். 
  • அடுத்த கட்ட மேலூரம் 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.அப்பொழுது தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடலாம். 
  • பூச்சி தாக்குதலை பொருத்தவரையில் தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், காய்ப்புழு, அஸ்வினி போன்ற பூச்சிகள் பிரதானமாக பயிரை தாக்கும். 
  • நோயைப் பொருத்தமட்டில் வேர் வாடல் நோய், அழுகல் நோய், இலை கருகல் மற்றும் பாக்டீரிய கருங்கல் நோய் எதிர்பார்க்கலாம்.

மேலும் சந்தேகம் மற்றும் தகவல்களுக்கு இணைப்பில் கலந்துள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.. https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 15 ஆகஸ்ட், 2024

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்...

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்:

  • தேசிய அளவில் தென்னை சாகுபடி என்பது பிரதான பயிராக திகழ்கிறது. இந்தியா உலக அளவில் தென்னை சாகுபடியில் மூன்றாவது இடத்தினை எட்டியுள்ளது அதேபோன்று தமிழ்நாடு இந்திய அளவில் தென்னை சாகுபடியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து பயிர் காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்கள்.
  • எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாகுபடியில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தென்னை பனை காப்பீடு திட்டம் (CPIS)

ஆங்கிலத்தில் Coconut Palm Insurance Scheme எனப்படும் இந்தத் திட்டமானது தென்னை மரங்களை இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் பல இதர உடனடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமாகும்.

  • இத்திட்டத்தில் வளமான மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். 
  • சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்ய இயலாது தனிப்பட்ட மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
  • காய்ப்பில் உள்ள மரங்கள் குறைந்தது ஐந்து வளமான காய்களை காய்க்க வேண்டும். 
  • காப்பீடு நிறுவனங்களுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 
  • 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்து தொகையாக Rs. 9 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 60 வயது உடைய மரங்களுக்கு Rs. 14 ஆகும்.
  • ஒருவேளை மரங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது முழுவதும் காய்க்கும் திறனை இழந்து விட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.900 எனவும் 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.1750 எனவும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

Kera Suraksha Insurance Scheme:

இளநீர் அல்லது தென்னங் காய்களை அறுவடை செய்தல், மரத்தை சுத்தப்படுத்துதல், மற்றும் பல பணிகளுக்காக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீடு செய்வதே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆண்டிற்கு ரூபாய் 99 செலுத்த வேண்டும் மீதமுள்ள செலுத்து தொகையான ரூபாய் 299.55 ஐ தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும். 18 முதல் 65 வயது உடைய தென்னை மரம் ஏறுபவர்கள் மட்டுமே இதில் பயனடைய இயலும். காப்பீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். ஊனம் அடைந்தால் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

சனி, 20 ஜூலை, 2024

தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.

முன்னுரை:

தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.

ஏன் செய்ய வேண்டும்: 

  • மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில் இருக்கும் பன்னாடைகள் மரத்தோடு சேர்த்து கட்டியது போல் காணப்படும். இதனால் இது எந்த இடையூறும் விளைவிக்காது. 
  • ஆனால் மரத்தின் அடிப்பாகத்தில் தாறுமாறாக தொங்கும் காய்ந்த பன்னாடைகள் காற்றில் உள்ள தூசிகளையும் பறந்து வரும் வேறு மரத்தின் இலை பாகங்களையும் தடுத்து மட்டை இடுக்குகளில் தேக்கி வைப்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. 
  • இந்தப் பகுதிகள் பாம்பு, தேள், குளவி போன்றவை இனப்பெருக்க இடங்களாக பயன்படுத்துவதால் மரத்தை சுத்தம் செய்பவர்களுக்கு இடையூறாக திகழும்.
  • இங்கு கூராஞ்சிகள் எனப்படுவது தென்னங் காய்கள் அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள குலை ஆகும். கிராமங்களில் நன்கு காய்ந்த கூராஞ்சியை சுற்றி கட்டி கூட்டும் விளக்குமாறாக பயன்படுத்துவார்கள்.
  • காய்ந்த கூராஞ்சிகள் மரத்திலேயே விட்டு விட்டால் அதில் சிலந்தி அல்லது குளவி கூடு கட்டும். இந்த சிலந்தி கூட்டினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பெண் பூக்களை அடைய முடியாமல் வலையில் சிக்கி இறந்து விடுகிறது. 
  • இது மட்டும் இன்றி கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை இதனால் வேர்கள் மூலம் கிடைக்க பெறும் நீர் மற்றும் ஊட்டச்சத்தை இதுவும் பங்கு போட்டுக் கொள்கிறது. 
  • கூராஞ்சிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் மரத்தில் அதிக அளவு பொய் பாளைகள் மற்றும் சூரிய வெளிச்சம் போதுமான அளவு குறித்து பகுதிக்கு கிடைப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது. 
  • மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மட்டை இடுக்குகளில் அதிக அளவு கழிவுகள் தங்கி இருப்பதால் அங்கு குடும்பம் நடத்தும் எலி மற்றும் அணில்கள் பூ மற்றும் இளநீரை சுவைப்பதால் மகசூல் தரம் பாதிக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி சில நேரங்களில் எலிகள் மரத்தின் குருத்துப் பகுதி அல்லது பாலையின் அடிப்பகுதியை ஓட்டை இடுவதால் மகசூல் இழப்பு சில நேரங்களில் செடிகளும் இறக்க நேரிடுகிறது.
  • அதேபோன்று மட்டைகள் நெருக்கமாக உள்ள மரங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மட்டைகளில் சுமார் அரை அடி முதல் ஒரு அடி வரை ஓலைகளை எடுக்கலாம்.

மரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது:

  • மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக மரத்தின் நுனிப்பகுதியில் பாம்பு அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.
  • அனுபவம் உள்ள மரம் சுத்தம் செய்பவர்களை ஏறச் செய்து காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சிகள் மற்றும் இதர பகுதிகளை அகற்ற வேண்டும். 
  • மரத்தின் நுனி பகுதியில் இருக்கும் பன்னாடைகளை பெரிய அளவு எடுக்க வேண்டாம். 
  • மரம் ஏறுபவர்கள் பாலை அல்லது தென்னங் கொலைகளில் உட்காராமல் தேவையற்ற பகுதியை அகற்ற வேண்டும்.
  • மரம் சுத்தம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை: 
  • எக்காரணத்தை கொண்டும் பன்னாடைகளை அருளால் அகற்றக்கூடாது. இது தேவையற்ற காயங்களை ஏற்படுத்தும். 
  • மர இடுக்குகளில் காணப்படும் குப்பைகளை கையாள அகற்றக் கூடாது ஏனெனில் அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேன் அல்லது குழுவில் ஏதேனும் கூடு கட்டி உள்ளதா என்பதை அறிய சிறிய கற்களை எரிந்து சோதித்து விட்டு பின்பு மரம் ஏறலாம். 
  • நன்கு விளைச்சல் தரும் மரம் மற்றும் மட்டைகள் சாய்ந்துள்ள மரங்களில் ஓலைகளை அகற்ற வேண்டாம்.
  • ஓரிரு பிஞ்சுகள் இருக்கும் கொலைகளில் உள்ள இதர கூராஞ்சிகளை அகற்றலாம் தவறில்லை. 
  • சில நேரங்களில் மட்டைகள் பாதியாக உடைந்து தொங்கும் அதை முழுமையாக அகற்றாமல் ஒடிந்த பகுதி வரை மட்டும் அகற்றவும். 
  • காற்றாடி காலத்திலும் கோடை பருவத்திலும் மரம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது மரத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான விளைச்சலுக்கு அடித்தளமாக திகழும். 
  • முற்றிய தேங்காய்கள் பறிக்கும் பொழுது காய்கறி மட்டும் பறிக்காமல் குலையோடு வெட்டி எடுப்பது சால சிறந்தது. 

இதுபோன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

காரணங்கள்: 
மண்ணின் கார அமிலத்தன்மை: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும். 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை: 

  • போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.

நீர் மேலாண்மை: 

  • கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

மண் மேலாண்மை: 

மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாடு:

  • பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
  • போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.

மகரந்த சேர்க்கை: 

  • தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது. 
  • அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது. 

தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்: 

  • ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:

  • இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 

எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618

Recent Posts

Popular Posts