google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 23 அக்டோபர், 2025

தற்சமயம் (பருவமழை) மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

தற்சமயம் (பருவமழை) மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...

முன்னுரை:

    சாகுபடியில் உள்ள மஞ்சள் பயிரில் பருவமழை காரணமாக பல்வேறு ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பயிர் வளர்ச்சி பாதிப்படைந்து பயிர்கள் இறக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. இவற்றை கவனமுடன் கையாண்டு பயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனேக இடங்களில் பயிரில் காணப்படும் பிரச்சனைகள்...

  • தழைச்சத்து பற்றாக்குறை 
  • மெக்னீசியம் பற்றாக்குறை 
  • இரும்பு சத்து பற்றாக்குறை 
  • வேர், கிழங்கு மற்றும் தண்டு அழுகல் நோய் 
  • இலைப்புள்ளி நோய்
  • இலை கருகல் நோய்

பிரச்சனைகளுக்கான காரணங்கள்:

1. தொடர்ச்சியான மழை 

2. அதிக மண் ஈரப்பதம் 

3. மிதமான காற்று ஈரப்பதம்

இது போன்ற காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சத்துக்கள் கிடைப்பதை தடை செய்வதோடு நோய் தாக்குதலை ஊக்குவிக்கிறது.

சரி செய்யும் வழிமுறைகள்:

சத்துக்கள் பற்றாக்குறை:

  • தற்சமயம் மஞ்சள் பயிரில் அநேக இடங்களில் தழைச்சத்து, சாம்பல் சத்து,மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது.
  • அதிக மண் ஈரப்பதம் காரணமாக வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை இதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை தொய்வு ஏற்படுகிறது. 
  • அதிக மழைப்பொழிவு காரணமாக மண்ணில் இருக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் கரைந்து பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணுக்கு அடியில் அல்லது வயலை விட்டு வெளியே சென்றிருக்கலாம்.
  • எனவே வடிகால் வசதியை முறைப்படுத்தி விட்டு ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுத்து வருவது சால சிறந்தது.
  • மழைக்காலம் முடியும் தருணத்தில் மண்ணில் உரம் இடுவது சிறந்தது.
  • போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படவில்லை எனில் கண்டிப்பாக மகசூல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேர், கிழங்கு மற்றும் தண்டு அழுகல் நோய்:

  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக கிழங்கு, வேர் மற்றும் தண்டு பகுதியில் அழுகல் நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை மண்ணில் உருவாகலாம். 
  • Pythium, Phytophthora மற்றும் Fusarium போன்ற நோய் காரணிகள் பயிரை தாக்கி அழுகல் நோயை ஏற்படுகிறது. 
  • நோய் தாக்குதலால் பாதிப்படைந்த பயிரின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கருகி இறந்துவிடும். தீவிர நோய் தாக்குதலின் பொழுது கிழங்கு முழுவதும் அழுகும் அபாயம் உள்ளது.
  • இதனை சரி செய்ய வடிகால் வசதியை சீர் செய்து வயலில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீரில் தலா 100 மில்லி Trichoderma, Bacillus, Metarhizium (அழுகிய பகுதியில் புழுக்கள் இருந்தால் மட்டும்) மீன் அமிலம் மற்றும் Humic அமிலம் ஆகியவற்றை கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். Carbendazim + Mancozeb / Metalaxyl+ Mancozeb/ Copper Oxychloride / Copper hydroxide 

இலைப்புள்ளி மற்றும் கருகல் நோய்:

  • தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி மற்றும் கருகல் நோய் காணப்படுகிறது. 
  • இந்த நோய்கள் Colletotrichum மற்றும் Taphrina போன்ற நோய் காரணிகளால் ஏற்படக் கூடியதாகும். 
  • இந்த நோயை கட்டுப்படுத்த வடிகால் வசதியை சீர் செய்தல், வயலை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தீவிரமாக பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் இலை வழியாக Pseudomonas 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும். இதனுடன் மீன் அமிலம் அல்லது இ எம் கரைசல் அல்லது பஞ்சகாவியா அல்லது கடல்பாசி கலந்து தெளிக்கலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Mancozeb அல்லது Copper Oxychloride பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


புதன், 22 அக்டோபர், 2025

தென்னை சாகுபடியில் இலை கருகல் நோய் மேலாண்மை

முன்னுரை:

  • தென்னை சாகுபடி செய்யப்படும் அநேக இடங்களில் காணப்படும் ஒரு பொதுவான நோயாக கருதப்படும் இந்த இலை கருகல் நோய் Lasiodiplodia theobromae எனப்படும் பூஞ்சை தாக்குதலால் ஏற்படுவதாகும்.
  • வருடம் முழுவதும் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய இந்த பூஞ்சை தாக்குதலால் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலை மற்றும் காய்களில் நோய் தாக்குதல் அறிகுறி காணப்படும். 
  • சிறு கன்றுகள் முதல் காய்ப்பில் உள்ள பெரிய மரங்கள் வரை அனைத்து வயதுடைய தென்னை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் ஒழுங்கற்ற வட்ட வடிவில் சிறிய இலை புள்ளிகள் காணப்படும். நாளடைவில் இது ஒன்றோடு ஒன்று இணைந்து கருகல் நோயாக மாறும்.
  • மரத்தின் அடி இலைகள் ஆரம்பத்தில் அறிகுறிகளை தோற்றுவிக்கும். நாளடைவில் மேல்நோக்கி அடுத்தடுத்த இலைகளுக்கு அறிகுறிகள் பரவுவதை காண இயலும். 
  • கருகல் நோயின் விளிம்புகளில் தெளிவான கோடுகள் தெரிவதை காண இயலும். 
  • ஓலைகள் நுனியில் இருந்து மேலோக்கி கருக ஆரம்பித்து இலை பரவி முழுவதும் கருகி காணப்படும்.
  • பூங்கொத்து மற்றும் காய்களிலும் இலை கருகல் நோயின் அறிகுறி காணப்படும்.
  • காய்களின் நுனிப்பகுதியில் பழுப்பு நிறத்தில் நிறம் மாற்றம் காணப்படுவதுடன் அதன் விளிம்புகள் வளைந்து நெளிந்து காணப்படும்.
  • இந்த வழியாக பூஞ்சை காயின் உள் நுழைந்து அழுகல் நோயை ஏற்படுத்தும். 
  • இவ்வாறு பாதிப்படைந்த காய்கள் சில நேரங்களில் சுருங்கி, வளைந்து நெளிந்து காணப்படுவதுடன் முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • நோயால் பாதித்த மரத்தின் இரண்டு அல்லது மூன்று அடி இலைகளை தண்டுப் பகுதியிலிருந்து சுமார் இரண்டு அடி தள்ளி வெட்டி வயலை விட்டு  அப்புறப்படுத்தவும். 
  • அதேபோன்று நோய் தாக்கி உதிர்ந்த காய்கள் மற்றும் பூங்கொத்துகளை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு காற்று வழியாக இந்த பூஞ்சைகள் பரவும் தன்மை உடையது.
  • போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும் ஏனெனில் பராமரிப்பு அல்லாத மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மிக எளிதில் நோய் தாக்குதலுக்கு உட்படும்.
  • நோயால் பாதிப்படைந்த மரங்களுக்கு தலா 200 கிராம் Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை 25 கிலோ நன்கு முக்கிய தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இடவும். 
  • மரத்தின் வயதிற்கு ஏற்ப தலா 20 முதல் 50 மில்லி Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீரில் கலந்து மரம் ஒன்றிற்கு நன்கு தெளிக்க வேண்டும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது Copper Oxychloride பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். 
  • பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். தேவையின் அடிப்படையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக தரலாம்.
  • வேர் வழியாக மருந்துகளை  செலுத்த விரும்பினால் Hexaconazole இரண்டு முதல் ஐந்து மில்லி வரை பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கொடுக்கலாம்.

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரானது இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் பழப்பயிரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. வாழை மரங்கள் மென்மையான வேர் அமைப்புடையதாக திகழ்வதால் பருவமழை காலங்களில் தொடர் மழை அல்லது அதிக காற்று காரணமாக மரங்கள் சாய நேரிடலாம். குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மரங்கள் சாய்வதை சற்று குறைக்கலாம்.

  • வடிகால் வசதியை மேம்படுத்தி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். 
  • வாழைக் கன்றுகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதன் மூலம் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொண்டு அதிக காற்று நேரத்தில் சாயாமல் இருக்க உதவி புரியும்.
  • மேட்டுப்பாத்தியில் நடவு செய்திருந்தால் அதன் உயரத்தை சற்று அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எளிதில் நீர் ஓடி வழிந்து விடும். 
  • நோய் அல்லது பூச்சி தாக்கல் பாதிக்கப்பட்ட அடி இலைகளில் ஒன்று அல்லது இரண்டினை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மேல் இலைகளை அப்புறப்படுத்தவே தவிர்க்க வேண்டும். 
  • கன்றுகளின் உச்சிப் பகுதியில் உள்ள இலைகளை சற்று கிழித்து விடலாம் இது காற்று எளிதில் நுழைந்து வர உதவி புரியும். இதனால் பயிர்கள் சாய்வதை தவிர்க்கலாம். 
  • தார் தள்ளிய  மரங்களுக்கு கண்டிப்பாக மூங்கில் கலிகளை பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் காய்ந்த இலை அல்லது தண்டு பகுதி வயலில் அழுகுவதை தவிர்க்க வேண்டும். 
  • தற்சமயம் திகழும் தட்பவெப்ப சூழ்நிலை வேர் அழுகல், வாடல் நோய், தண்டு அழுகல் நோய், மஞ்சள் மற்றும் கருப்பு இலை புள்ளி நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது கிடைக்கப்பெறும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூஞ்சான  மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்த வேண்டும். 
  • இது பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தடுக்க உதவி புரியும் மேலும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும். 
  • கண்டிப்பாக தற்போது மண்ணைக் கிளறி ரசாயன அல்லது இயற்கை உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ரசாயன உரங்கள் இடுவதால் மிக எளிதில் கரைந்து வயலை விட்டு வெளியேறலாம் அல்லது மண்ணில் ஆழமாக சென்று பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலத்தடி நீருடன் கலக்கும். 
  • மண்ணைக் கிளறுவதால் வேர்களின் பிடிப்பு திறன் சற்று குறையும். இந்த மரங்கள் அதிக காற்று வீசும் போது எளிதில் சாயலாம். 
  • மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உதாரணத்திற்கு வரப்புகளை உயர்த்துதல், மூடாக்கு இடுதல் மற்றும் இதர. 
  • இதை அனைத்தும் பின்பற்றிய பிறகும் அதிக காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தால் உடனடியாக தங்களது பகுதி தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • இதன் மூலம் சாய்ந்த மரங்களுக்கு இழப்பீடு பெற வாய்ப்புள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மண்ணில் அமோனியம் சல்பேட் இடலாம். இது ஊட்டச்சத்து ஆகவும், நோய் பரவலை தடுக்கவும், காற்றில் உள்ள வெப்பநிலையை எடுத்து பயிர்களுக்கு கொடுக்கும் உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy?mode=wwc


புதன், 15 அக்டோபர், 2025

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

  • தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பருவ மழை காலங்களில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் நோய் போன்ற காட்சி அளிக்கும் பூஞ்சை - பாசி வளர்ச்சியை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 
  • லிச்சென் (Lichen) என்பது பூஞ்சை மற்றும் பாசிகள் இணைந்து வளரும் அமைப்பாகும். இந்த உயிரினம் அடர் காடுகளில் மரத்தின் தண்டு பகுதி, பாறைகள், மண் மற்றும் இதர பொருட்களில் வளர்வதை நாம் காண இயலும்.
  • இதில் காணப்படும் பூஞ்சை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து வளரும். பாசிகள் இதில் வளர்ந்து கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு கொடுத்து வாழும்.
  • பல நூறு வகையான லிச்சென்கள் உள்ளன அவற்றில் குறிப்பிட்ட சில வகை குடும்பத்தில் காணப்படும் பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் மட்டுமே இந்தியாவில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன Graphina, Leptogium, Lecanora, Pyxine, Myriotrema, Porina. லிச்சென்கள் பல்வேறு நிறம் மற்றும் வடிவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லிச்சென் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • அளவுக்கு அதிகமான நிழல்
  • போதிய காற்றோட்டம் இன்மை 
  • அடர் நடவு 
  • பராமரிப்பு இல்லாத தோப்புகள்

லிச்சென் வளர்ச்சி காரணமாக ஏற்படும் பாதிப்புகள்:

  • லிச்சென்கள் நேரடியாக மரங்களை பாதிப்பதில்லை ஏனெனில் இதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தென்னை மரங்களை கிடைப்பதில்லை. 
  • நேரடியாக பயிர்களை பாதிக்காவிட்டாலும் கவனிக்கப்படவில்லை எனில் இந்த பூஞ்சை பாசி வளர்ச்சி படிப்படியாக பரவி மரத்தின் இலை பகுதியை தாக்கினால் பயிர் வளர்ச்சி தடைபடுவதுடன் மகசூல் இழப்பீடும் ஏற்படும். 
  • மேலும் இது இதர பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • மரங்களுக்கு உரிய நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும். 
  • ஒன்று அல்லது இரண்டு ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் போதிய வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் மரத்தின் தண்டு பகுதிக்கு கிடைக்கும்.
  • பாதிக்கப்பட்ட தோப்புகளில் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
  • ஆரம்ப நிலை வளர்ச்சியின் பொழுது தண்ணீரைப் பீச்சி அடித்து இதனை அப்புறப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சை பாசிகளை கண்டிப்பாக சுரண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • சுரண்டி எடுத்த பிறகு இந்த பகுதியில் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு உடன் ஓட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் இந்த தெளிப்பை இரண்டாவது முறை தெளிக்க வேண்டும். 
  • பிறகு தண்டு பகுதியில் சுண்ணாம்பு பூச வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    பருவமழை காலங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவே திகழ்கின்ற மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மழை, நீர்த்தேக்கம், காற்று, தொடர்ச்சியான மண் ஈரப்பதம் ஆகியவை பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதற்கு உதாரணமே"தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்" என்ற பழமொழி ஆகும்.

தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சால சிறந்தது. 

  • வடிகால் வசதியை சீரமைத்து நீர் தேங்குவதை தவிர்க்கவும். 
  • தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் அதாவது கழுத்துப் பகுதியில் கண்டிப்பாக நீர் தேங்கா கூடாது. 
  • எனவே அடித்தண்டு பகுதியில் மிதமான அளவில் மண் அணைப்பது உகந்தது. 
  • தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி மற்றும் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்படலாம் இதன் மூலம் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • வட்டப்பாதையில் மூடாக்கு அமைத்து கிடைக்கப்பெறும் நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். 
  • மூடாக்கிற்கு காய்ந்த மட்டைகள், தூளாக்கப்பட்டு மக்க வைத்த மட்டை தூள்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் அரிப்பை தடுக்கலாம். 
  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம். இது நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும். 
  • பருவமழை காலங்களில் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் ரசாயன உரங்கள் எளிதில் கரைந்து வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் ஆழமாக செல்லலாம். 
  • அல்லது அதிக மழைப்பொழிவு காரணமாக வயலில் இருந்து வெளியே அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளன. 
  • ரசாயன உரம் இட முன் பருவ அல்லது பின் பருவ மழை காலங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் நமக்கு தேவையான மண் ஈரப்பதம் இருக்கும் 
  • பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்தலாம் இது மண்ணில் பல்கி பெருகும். 
  • பருவமழை முடிந்த பிறகு மண்ணின் கார அமிலத்தன்மையை ஆய்வு செய்து அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அதிக மழை பெய்தால் ஊட்டச்சத்துக்கள் கரைந்து வெளியேறும் இதனால் அமில காரத் தன்மையில் கண்டிப்பாக மாற்றம் காணப்படலாம். 
  • இளம் தென்னங்கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும். 
  • பருவமழை காலங்களில் மரத்திற்கு அருகாமையில் ஆழமாக உழவு செய்வதை தவிர்க்கலாம். இது வேர்களை காயப்படுத்தும் இதனால் நோய் தாக்குதல் மிக எளிதில் ஏற்படலாம். 
  • மேலும் இதன் காரணமாக வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் சூழல் குறையும். இது போன்ற நேரங்களில் அதிக காற்று அடித்தால் மரங்கள் சாய் வாய்ப்புள்ளது. 
  • தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் காணப்பட்டால் பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை காண இயலும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு சுண்ணாம்பு அடித்து விடவும். 
  • காய்ந்த நிலையில் இருக்கும் அடி இலைகளை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி வெட்டி அப்புறப்படுத்தலாம். 
  • மரத்தின் கொண்டைப் பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் மற்றும் குரும்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தலாம். ஏனெனில் இது குருத்துப் பகுதியில் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்தலாம்.
  • தோப்பில் காணப்படும் மட்டைகளை சேகரித்து வரப்பில் அடுக்கி வைக்க வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகள் நிலத்தில் அழுகினால் நோய் மற்றும் வண்டு தாக்குதல் வர வாய்ப்புள்ளது. 
  • ஆனா வரி தோப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை வெட்டி மழை நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். 
  • வானிலை அறிக்கையை பின்பற்றி அதற்கு ஏற்றவாறு அறுவடை பணியை செய்ய வேண்டும். அதிக காற்று அல்லது மழை பெய்யக்கூடும் என கருதப்படும் நேரத்தில் மரம் ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • மரங்களுக்கு காப்பீடு செய்து வைப்பது மிக மிக சிறந்தது.
  • வட்டப்பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடைக்க பெறும் மழை நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும்.
  • தஞ்சாவூர் வாடல், வேர் வாடல் மற்றும் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன் அறிகுறிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

திங்கள், 13 அக்டோபர், 2025

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

    தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அதாவது மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம்,  அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் மேக மூட்டமான சூழ்நிலை தென்னையில் குருத்தழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. 

    பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த குருத்தழுகல் நோய் இளம் வயது கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத மரங்களை வெகுவாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். நோய் தாக்குதலால் பயிர்கள் இறந்து விடுவதை விட, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.

    நோய் தாக்குதலால் இளம் கன்றுகள் இறப்பதும், காய்ப்பில் உள்ள மரத்தில் ஏற்படும் நோய் தொற்றால் அதிக அளவு காய்கள் உதிர்வதை காண இயலும். பருவமழை காலங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் அழுகல் ஏற்படுவதால் இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறி வெளுத்து காணப்படும்.
  • நாளடைவில் இந்த இலைகள் கருகியது போன்ற காட்சியளிக்கும்.
  • பாதிப்படைந்த குருத்து இலைகளை  இழுத்தால் கையோடு வந்துவிடும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் சிதைந்து நிறம் மாறி இளம் சிகப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். 
  • பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் தொடர்ச்சியாக அழுகுவதால் படிப்படியாக அடுத்தடுத்த இலைகள் மேல்புறத்தில் இருந்து அழுகி இறந்துவிடும். 
  • தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி சாய்ந்து விடும்.  

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக நோயின் தாக்குதல் தென்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வர வேண்டும்.
  • குறிப்பாக நோய் தாக்குதல் பிரதானமாக காணப்படும் காலமான ஜூலை முதல் நவம்பர் வரை.
  • போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இலை, பன்னாடை, மட்டை அல்லது மரத்தின் இதரப் பகுதிகள் வயலில் ஆங்காங்கே இட்டு அழுகுவதை தவிர்க்க வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாரம் ஒரு முறை Bacillus மற்றும் pseudomonas தலா 10 கிராம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை கலந்து குருத்துப் பகுதியில் நன்கு தெளிக்கவும்.
  • முழுமையாக பாதிப்படைந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட குருத்து இலைகளில் வயலில் இடக்கூடாது. இது மேலும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்.
  • நோய் தாக்குதல் காரணமாக குருத்துப் பகுதியில் காண்டாமிருக வண்டு அல்லது சிகப்பு கூன் வண்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • நோய் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து இரசாயன மருந்தை வேர் வழியாக செலுத்தி நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வாழை பயிருக்கு என்ன உரம் எப்போது இடலாம்...

வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொன்டு அதற்கேற்றவாறு மகசூலை கொடுக்கவல்லது. வாழை பயிர் கிடைக்கப்பெறும் சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்சியை துரிதப்படுத்தி அதிக அளவு மகசூலை தரும். மண்ணின் தன்மை மற்றும் வளத்திற்கு ஏற்றவாறு மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித முறையில் ஊட்டச்சத்து இடுவது மகசூலை மேம்படுத்துவதுடன் மண் வளத்தை பாதுகாக்கும்.

வாழை பயிர் அதிக அளவு எடுத்துக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வரிசையில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், போரான், மாங்கனிசு மற்றும் இதர ஊட்டச்சத்துகள் திகழ்கின்றன.

  • நடவு செய்யும்பொழுது குழி ஒன்றிற்கு நன்கு மட்கிய தொழுஉரம் 10 கிலோ மற்றும் 250 கிராம் வேப்பம்புன்னாக்கு ஆகியவற்றை மேல்மண்னுடன் கலந்து இடவேண்டும்.
  • கண்டிப்பாக மட்காத தொழு உரத்தை(குப்பை) பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மட்காத குப்பை வேர்வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • ஊடுபயிர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் கடைசி உழவின் போது அடிஉரமாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மட்கிய தொழுஉரம் இடவேண்டும்.
  • நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு இரசாயன உரங்கள் இடக்கூடாது. இந்த நேரத்தில் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிழங்கிலிருந்து கிடைக்கும்.
  • போதிய வேர்வளர்ச்சி காணப்படும் 3 ம் மாதத்திலிருந்து இரசாயன உரம் இடலாம்.
  • வருடத்திற்கு ஒரு மரத்திற்கு சராசரியாக 180-210 கிராம் தழைச்சத்து (இலைக்காக சாகுபடி செய்யப்படும் இடத்தில் தேவையின் அடிப்படையில் சன்று கூடுதலாக கொடுக்கலாம்), மணிச்சத்து 40-50 கிராம் மற்றும் பொட்டாசியம் சத்து 600-800 கிராம் இடவேண்டும்.
  • இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னிசியம் , சல்பர் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 100-150 கிராம், 30-50 கிராம் மற்றும் 15-20 கிராம் முறையே இட வேண்டும்.
  • நுண்ணுட்டச்சத்துக்களை தேவையின் அடிப்படையில்  கண்டிப்பாக இட வேண்டும்.

உரங்கள் (கிராம் /மரம்)

3 ம் மாதம்

5 ம் மாதம்

7 ம் மாதம்

யுரியா

100

200

150

சூப்பர் பாஸ்பேட்

200

100

-

மூரிஏட் ஆப் பொட்டாஷ்

250

350

350

டி.எ.பி

50

-

-

(ஒரு வருடத்திறகு ஒரு மரத்திற்கு தேவையான உத்தேச அளவு)

  • உரமிடும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரங்களுடன் தேவையான அளவு தொழுஉரம் கலந்து இட்டு தண்டு பகுதியிலிருந்து சுமார் 2 அடி தள்ளி இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். 
  • 2,4 மற்றும் 6ம்  மாதங்களில் உயிர் உரங்கள் அல்லது கடல்பாசி உரங்கள் அல்லது ஹீயுமிக் அமிலத்தை வேர் வழியாக கொடுப்பதன் மூலம் மண்ணிலிருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு ஏற்ற வடிவில் கிடைக்க உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

சனி, 11 அக்டோபர், 2025

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல் - Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை:

   பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி என்பது மிக லாபகரமான விவசாய தொழிலாக திகழ்கிறது. ஏனெனில் இதில் நிலப்பரப்பு மட்டுமில்லாமல் செங்குத்தாக பயிர்களை சாகுபடி செய்கிறோம் மேலும் இதில் அதிக வெப்பநிலை திகழ்வதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது. 

 உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் 30 முதல் 50% கூடுதல் மகசூல் பெற இயலும். இங்கு உயர் தொழில்நுட்பம் என்பது தட்பவெட்ப சூழலை தேவைக்கேற்ப மாற்றுதல், சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், உயர் அடர் நடவு, Fogger, என் நிலப் போர்வை மற்றும் பல்வேறு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 

பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • அதிக வெப்பநிலை 
  • மிதமானது முதல் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு 
  • போதிய காற்றோட்டமின்மை 
  • உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக இடுபொருள் இடுதல் (உரங்கள்)
  • மஞ்சள் நிற பூக்களின் நிறம் (பேன் எளிதில் கவரும்

பேன் தாக்குதலின் அறிகுறிகள்: 
இலைகள்:

  • இலைகளின் அடிப்புரத்தில் இருந்து சாற்றை உறிஞ்சும். 
  • இதனால் இலை மேற்பரப்பில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 
  • தீவிர தாக்குதல் என்பது இலைகள் உருக்குலைந்து, இலை விளிம்புகள் கருகி காட்சியளிக்கும்.

பூக்கள்: 

  • மஞ்சள் நிற பூக்களை நோக்கி பேன்கள் எளிதில் சென்று தாக்கும். 
  • பூ இதழ்களில் சாற்றை உறிஞ்சும் இதனால் இதழ்களில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும்.
  • மேலும் மகரந்த பகுதிகளை சேதமடைய செய்வதால் காய் பிடிப்பு திறன் குறையும்.

காய்கள்:

  • பேன்கள் காய்களில் சாற்றை முயற்சி செய்வதால் வெளிர் நிற தழும்புகள் காய்களின் மேல் பரப்பில் காணப்படும். 
  • இது மட்டும் இன்றி பல்வேறு வகையான வைரஸ் நோய் தொற்றை இந்த வகை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • அடி உரம் இடும் பொழுது வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடவும். 
  • போதுமான பயிர் இடைவெளி அவசியம் 
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க காலை மற்றும் மாலை நேரத்தில் பசுமை குடிலின் இரு புறத்தில் உள்ள Side wall/Curtain wall பகுதியில் உள்ள பாலிதீன் சீட்டை சுருட்டி வைக்கவும். 
  • அந்தப் பகுதி வழியாக பூச்சிகள் உள் நுழைவதை தடுக்கும் வலை கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
  • அதிக வெப்பநிலையை குறைக்க Foggers பொருத்தலாம். அல்லது பசுமை குடிலின் மேல் பகுதியில் தெளிப்பு நீர் நிறுவி அதை உபயோகிக்கலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் போன்ற ஏதேனும் பூச்சி விரட்டி திரவத்தை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • தேவையின் அடிப்படையில் உயிரியல் பூச்சிக்கொல்லி திரவமான Verticillium lecanii மற்றும் Beauveria bassiana கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் தவிர்க்கலாம். 
  • 1000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பசுமை குடிலுக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறி பயன்படுத்த வேண்டும்.
  • மிக கவனமாக இரசாயனம் மருந்துகளை தேர்வு செய்து தெளிக்க வேண்டும். உதாரணத்திற்கு Fibronil/Thiamethoxam/Spinosad/imidacloprid/Flonicamid/Cyantraniliprole.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன்பெற...

வெள்ளி, 10 அக்டோபர், 2025

மக்காச்சோள பயிரில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதன் மேலாண்மை...

முன்னுரை:

 மக்காச்சோளம் குறைந்த நாட்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு விளைச்சல் தரக்கூடிய ஒரு பயிராக திகழ்கிறது. தற்சமயம் சாகுபடியில் உள்ள பயிரில் ஒரு சில இடங்களில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகிறது. 

  பயிரில் போதுமான அளவு பச்சையத்தை உற்பத்தி செய்து பயிருக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் உணவை கிரகித்து ஆற்றலை பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பவும் வேலையை செய்கிறது.

மெக்னீசியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது 
  • போதுமான அளவு மெக்னீசியம் இடாமல் இருத்தல் 
  • அளவுக்கு அதிகமான பொட்டாசியம், கால்சியம் மற்றும் தழைச்சத்து இடுதல். இது மெக்னீசியம் பயிர்களுக்கு கிடைப்பதை தடை செய்கிறது
  • அதிக அமிலத்தன்மை மற்றும் மணல் பாங்கான மண்ணில் மெக்னீசியம் குறைபாடு காணப்படும்.
  • தொடர்ச்சியான மழை, அதிகமான மண் ஈரப்பதம் போன்ற காரணங்கள் சத்துக்கள் எளிதில் களைந்து மண்ணுக்கு அடியில் செல்லலாம் அல்லது பயிர்களால் சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். 

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • ஆரம்பகால அறிகுறியாக பயிரின் அடி இலைகளில் வெளிர் பச்சை நிற கோடுகள் காணப்படும். 
  • நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது இலை நரம்புகளும் வெளிர் பச்சை நிறமாக மாறும்.
  • இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிரின் உணவு உற்பத்தி திறன் குறைந்து குன்றிய வளர்ச்சி காணப்படும். 
  • நாள்பட்ட மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை கண்டிப்பாக மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • பயிர் சுழற்சி மிக அவசியம். இல்லை எனில் ஒரே விதமான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து  பயிர்களால் எடுத்துக்கொள்ளப்படுவதால் மண் வளம் குறையும்.
  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அளிக்க வேண்டும். 
  • எனவே மண்ணை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் போதுமான அளவு தொழு உரம் மற்றும் ரசாயன உரம் இடவேண்டும்.
  • அளவுக்கு அதிகமான தழைச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீர் தேக்கம் அல்லது தொடர்ச்சியான மண் ஈரப்பதம் பயிர் வளர்ச்சியை பாதிக்கும்.
  • மழை காலங்களில் தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அல்லது இடைவெளி தெளிப்பு சால சிறந்தது. 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் ஊட்டச்சத்தை மீன் அமிலம், எலும்பு உரம், கடல்பாசி உரம் மற்றும் முட்டை எலுமிச்சை கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி கொடுக்கலாம்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் சல்பேட், பாலி சல்பேட், கீர்த்தி சி எம் எஸ் போன்ற உரங்கள் கிடைக்கப்பெறுகிறது இதனை இடலாம். 
  • உடனடி தீர்வுக்கு நீரில் கரையும் வடிவில் மெக்னீசியம் ஊட்டச்சத்தை பெற்று அதை இலை வழியாக தெளித்து வரலாம்.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன் பெற...

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்

    வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பூச்சி நோய் தாக்குதல்,  ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்,  நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை,  பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது. 

    இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:

  • வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும். 
  • இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
  • இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும். 
  • அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும். 
  • இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
  • இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை. 
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும். 
  • இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும். 

பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல். 
  • பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல். 
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும். 
  • அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
  • பராமரிப்பு குறைபாடு 
  • போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்: 

  • சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது. 
  • போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
  • உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
  • வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
  • நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
  • சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

கத்தரி பயிரில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    தற்சமயம் சாகுபடிகள் உள்ள கத்தரி பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக இலை உண்ணும் வண்டு,  பூ வண்டு, கொப்புள வண்டு, அஸ்வினி, குருத்து மற்றும் காய் புழு, தத்துப்பூச்சி மற்றும் தேமல் வைரஸ் நோய் காணப்படுகிறது. 

    தற்சமயம் கத்தரி மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு சராசரி விலை கிடைப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைந்த செலவில் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் வைரஸ் தாக்குதலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலைகளில் பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இலைகள் சிதைந்து ஒழுங்கற்ற வடிவிலும், பார்ப்பதற்கு தோல் போன்று காணப்படும். 
  • குருத்துப் பகுதியில் இருந்து வெளியேறும் இளம் இலைகள் சிறுத்து காணப்படும். 
  • இதனால் பயிர்களில் பச்சையத்தின் அளவு குறைந்து, பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • இந்த தேமல் நச்சுயிரி நோய் அஸ்வினி மூலம் பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • தங்களது பகுதிக்கு ஏற்ற உகந்த ரகத்தினை தேர்வு செய்தல் அல்லது நோய் தொற்று இல்லாத நாட்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • தேமல் நோயால் பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் மீண்டும் கத்தரி நடவு செய்யாமல் இருக்கலாம்.
  • இந்த வைரஸ் தொற்று கத்தரி, உருளை, வெள்ளரி போன்ற சில பயிர்களில் பிரதானமாக காணப்போவதால், சாகுபடி பயலுக்கு அருகாமையில் இந்த பயிர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.
  • வயலை களைகள் இன்றி பராமரிக்க வேண்டும். ஏனெனில் சார் உறிஞ்சும் பூச்சான அஸ்வினி களை செடியில் இருந்து கொண்டு நோயை பரப்பும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கசாயம், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம் போன்ற இயற்கை வழியில் தயாரித்த இடுபொருட்களை தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.
  • உயிரியல் முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை Verticillium lecanii திரவத்தை இலை வழியாக தெளித்து வரலாம்.
  • ரசாயன முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி Imidacloprid கலந்து தெளிக்க வேண்டும். அல்லது Fibronil/ Thiamethoxam/ Flonicamid போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்படும் அளவில் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


நெல் சாகுபடியில் பாக்டீரியா கதிர் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நெல் சாகுபடியில் தற்போது நிலவு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக நெல் கதிர் அல்லது மணிகளில் நிற மாற்றம் காணப்படுகிறது. இது பாக்டீரியா நோய் தொற்றால் ஏற்படும் ஒரு விதமான அறிகுறி ஆகும். இதனை பாக்டீரியா கதிர் கருகல் நோய் என கூறலாம். இதைப் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

    நெல் பயிரில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இரண்டு விதமான பாக்டீரியா நோய்கள் காணப்படுகிறது. அதில் ஒன்று பாக்டீரியா இலை கருகல் மற்றொன்று பாக்டீரியா கதிர் கருகல் நோயாகும்.

  • பாக்டீரியா இலை கருகல் நோய் Xanthomonas எனப்படும் பாக்டீரியா நோய் தொற்று காரணமாகவும், கதிர் கருகல் Burkholderia எனப்படும் பாக்டீரியா காரணமாகவும் ஏற்படுகிறது. 
  • பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி- இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் இருந்து பச்சை முதல் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும் பின்பு இந்த பகுதி கருகியது போன்ற காட்சி அளிக்கும். 

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான பகல் வெப்பநிலை 

  • பகல் மற்றும் இரவு நேரத்தில் காற்று ஈரப்பதம் அதிகமாக காணப்படுதல் 
  • நெருங்கிய பயிர் நடவு 
  • அதிக அளவிலான தழைச்சத்து உர பயன்பாடு 
  • மேக மூட்டமான சூழ்நிலை மற்றும் பயிர்கள் நிழற்பாங்கான இடத்தில் வளருதல்.

பாக்டீரியா கதிர் கருகல் நோயின் அறிகுறிகள்:

  • தானியங்களில் மிதமான பழுப்பு நிற மாற்றம் காணப்படும். 
  • ஆரம்பத்தில் வயலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும். 
  • பின்பு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக பரவும். 
  • நெல் மணியில் நிற மாற்றம் காணப்படுவதால், இதில் பல்வேறு பூஞ்சைகள் இரண்டாம் நிலை நோய் தொற்றாக காணப்படும். 
  • நோய் தொற்று காரணமாக கதிர்கள் அனைத்தும் கருப்பு நிறமாக காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கதிர்களில் உள்ள நெல் மணிகள் முழுமையாக பால் பிடிக்காமல் இருப்பதால், நெல் கதிர் செங்குத்தாகவே நிற்கும்.
  • நெல் மணியில் கதிர் நாவாய் பூச்சி சாற்றை உறிஞ்சுவதாலும் நிறமாற்றம் காணப்படும். ஆனால் அவற்றை நெல் கதிரில் உள்ள ஏதேனும் ஒரு சில மணிகளில் மட்டுமே நிறமாற்றம் காணப்படும். 
  • மேலும் கதிர் நாவாய் பூச்சி தாக்கிய வயலில் அதிக அளவு வெண்ணிற நெல் பணிகள் காணப்படும்.
  • சரியாக கவனிக்கப்படவில்லை எனில் இந்த நோய் தொற்று காரணமாக சுமார் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
  • இந்த நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து பயன்படுத்தப்படும் நெல்லின் முளைப்பு திறன் மிக மிக குறைவாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறை: 

  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது நோயை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து விதைகளை தேர்வு செய்யாமல் தரமான விதையை தேர்வு செய்ய வேண்டும். 
  • பருவத்திற்கு ஏற்றவாறு போதுமான அளவு பயிர் இடைவெளி அவசியம். 
  • குறிப்பாக பருவ மழை மற்றும் பனிப்பொழிவு காலங்களில் சற்று கூடுதலாக இடைவெளி விடுவது சால சிறந்தது. 
  • நெல் வயலில் இதர பயிர்களின் நிழல் நிழல் விழுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக பொட்டாசியம் சத்து இடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். 

  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • நெல் கதிர் வெளிவரும் நேரத்தில் நோய் தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வர வேண்டும்.
  • நெல் கதிர்கள் வெளிவரும்  பேசில்லஸ் சப்டிலிஸ் உயிரியல் திரவத்தை வாரம் ஒரு முறை தெளித்து வருவது மிக சிறந்தது.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் காப்பர் ஹைட்ராக்சைடு நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தெளிக்கலாம்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட வயலில் நோயை கட்டுப்படுத்துவது சற்று கடினமாகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

Recent Posts

Popular Posts