google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 20 ஜூலை, 2024

சாமந்தி பயிரை நூற்புழு தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை.


1. சாமந்தி பயிரில் வணிக ரீதியாக இரண்டு வகைகளும் பல்வேறு ரகங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இவை அனைத்துமே நூற்புழுவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

2. நூற் புழுக்களில் பல்வேறு வகைகள் உள்ளது... இந்த அனைத்து வகைகளையும் சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை.

3. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இருக்கக்கூடிய நூற்புழு வகைகளில் 3 அல்லது 4 வகைகளை மட்டுமே சாமந்தி பயிரால் கட்டுப்படுத்த இயலும் என்பதை பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. அந்த நான்கு நூற்புழு வகைகளுக்கு ஏற்றவாறு சாமந்தி பயிரின் செயல்பாட்டுத் திறன் வேறுபடுகிறது.

5. சாமந்தி பயிரை வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிர்/கலப்பு பயிராகவோ பயிரிட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

6. சாமந்தி பயிரின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் Alpha terthienyl எனப்படும் ஒரு வகை வேதிப்பொருள் நூற்புழுக்களின் முட்டைகளை பொறிக்க விடாமல் தடுத்து படிப்படியாக தாக்குதலை குறைக்கிறது. 

7. இது மட்டும் இன்றி பல்வேறு வகையான பூஞ்சான, பாக்டீரியா, பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் நோய்க்கு எதிராகவும் இந்த வேதிப்பொருள் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8. சாமந்தி பயிர்கள் நன்கு வளர்ந்து தரையில் இருந்து சற்று ஆழமாக இருக்கக்கூடிய வேர்களில் இருந்து சுரக்கக்கூடிய வேதி பொருள் மட்டுமே நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது. 

9. எனவே பயிர் சாகுபடிக்கு சுமார் 50 முதல் 60 நாட்களுக்கு முன்னதாக சாமந்தி பயிரை நடவு செய்ய வேண்டும் அப்போதுதான் இது செயல்படும்.

10. சாமந்தி பயிர் ஒருபோதும் நூற்புழுக்களை அழிக்காது.. இனப்பெருக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்தும் அதுவும் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்...

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.

முன்னுரை:

தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.

ஏன் செய்ய வேண்டும்: 

  • மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில் இருக்கும் பன்னாடைகள் மரத்தோடு சேர்த்து கட்டியது போல் காணப்படும். இதனால் இது எந்த இடையூறும் விளைவிக்காது. 
  • ஆனால் மரத்தின் அடிப்பாகத்தில் தாறுமாறாக தொங்கும் காய்ந்த பன்னாடைகள் காற்றில் உள்ள தூசிகளையும் பறந்து வரும் வேறு மரத்தின் இலை பாகங்களையும் தடுத்து மட்டை இடுக்குகளில் தேக்கி வைப்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. 
  • இந்தப் பகுதிகள் பாம்பு, தேள், குளவி போன்றவை இனப்பெருக்க இடங்களாக பயன்படுத்துவதால் மரத்தை சுத்தம் செய்பவர்களுக்கு இடையூறாக திகழும்.
  • இங்கு கூராஞ்சிகள் எனப்படுவது தென்னங் காய்கள் அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள குலை ஆகும். கிராமங்களில் நன்கு காய்ந்த கூராஞ்சியை சுற்றி கட்டி கூட்டும் விளக்குமாறாக பயன்படுத்துவார்கள்.
  • காய்ந்த கூராஞ்சிகள் மரத்திலேயே விட்டு விட்டால் அதில் சிலந்தி அல்லது குளவி கூடு கட்டும். இந்த சிலந்தி கூட்டினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பெண் பூக்களை அடைய முடியாமல் வலையில் சிக்கி இறந்து விடுகிறது. 
  • இது மட்டும் இன்றி கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை இதனால் வேர்கள் மூலம் கிடைக்க பெறும் நீர் மற்றும் ஊட்டச்சத்தை இதுவும் பங்கு போட்டுக் கொள்கிறது. 
  • கூராஞ்சிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் மரத்தில் அதிக அளவு பொய் பாளைகள் மற்றும் சூரிய வெளிச்சம் போதுமான அளவு குறித்து பகுதிக்கு கிடைப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது. 
  • மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மட்டை இடுக்குகளில் அதிக அளவு கழிவுகள் தங்கி இருப்பதால் அங்கு குடும்பம் நடத்தும் எலி மற்றும் அணில்கள் பூ மற்றும் இளநீரை சுவைப்பதால் மகசூல் தரம் பாதிக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி சில நேரங்களில் எலிகள் மரத்தின் குருத்துப் பகுதி அல்லது பாலையின் அடிப்பகுதியை ஓட்டை இடுவதால் மகசூல் இழப்பு சில நேரங்களில் செடிகளும் இறக்க நேரிடுகிறது.
  • அதேபோன்று மட்டைகள் நெருக்கமாக உள்ள மரங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மட்டைகளில் சுமார் அரை அடி முதல் ஒரு அடி வரை ஓலைகளை எடுக்கலாம்.

மரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது:

  • மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக மரத்தின் நுனிப்பகுதியில் பாம்பு அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.
  • அனுபவம் உள்ள மரம் சுத்தம் செய்பவர்களை ஏறச் செய்து காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சிகள் மற்றும் இதர பகுதிகளை அகற்ற வேண்டும். 
  • மரத்தின் நுனி பகுதியில் இருக்கும் பன்னாடைகளை பெரிய அளவு எடுக்க வேண்டாம். 
  • மரம் ஏறுபவர்கள் பாலை அல்லது தென்னங் கொலைகளில் உட்காராமல் தேவையற்ற பகுதியை அகற்ற வேண்டும்.
  • மரம் சுத்தம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை: 
  • எக்காரணத்தை கொண்டும் பன்னாடைகளை அருளால் அகற்றக்கூடாது. இது தேவையற்ற காயங்களை ஏற்படுத்தும். 
  • மர இடுக்குகளில் காணப்படும் குப்பைகளை கையாள அகற்றக் கூடாது ஏனெனில் அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேன் அல்லது குழுவில் ஏதேனும் கூடு கட்டி உள்ளதா என்பதை அறிய சிறிய கற்களை எரிந்து சோதித்து விட்டு பின்பு மரம் ஏறலாம். 
  • நன்கு விளைச்சல் தரும் மரம் மற்றும் மட்டைகள் சாய்ந்துள்ள மரங்களில் ஓலைகளை அகற்ற வேண்டாம்.
  • ஓரிரு பிஞ்சுகள் இருக்கும் கொலைகளில் உள்ள இதர கூராஞ்சிகளை அகற்றலாம் தவறில்லை. 
  • சில நேரங்களில் மட்டைகள் பாதியாக உடைந்து தொங்கும் அதை முழுமையாக அகற்றாமல் ஒடிந்த பகுதி வரை மட்டும் அகற்றவும். 
  • காற்றாடி காலத்திலும் கோடை பருவத்திலும் மரம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது மரத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான விளைச்சலுக்கு அடித்தளமாக திகழும். 
  • முற்றிய தேங்காய்கள் பறிக்கும் பொழுது காய்கறி மட்டும் பறிக்காமல் குலையோடு வெட்டி எடுப்பது சால சிறந்தது. 

இதுபோன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


வெள்ளி, 19 ஜூலை, 2024

இளநீர்/தேங்காய் தண்ணீர் ஏன் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்பட வேண்டும்

  • நாம் ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சிக்காக குடிக்கக்கூடிய இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் தென்னங்காய்கள் வளர்வதற்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
  • இதில் நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஒன்று இளநீர் மற்றொன்று முற்றிய/விளைந்த தென்னை காய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர். இளநீர் பொதுவாக பருகுவதற்கும் மற்றும் பல பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் விளைந்த காய்களில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் பெரும்பான்மையாக  பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • இளநீரில் அதிக அளவு நோய் எதிர்ப்பு காரணிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால் பாக்கெட் மட்டும் பாட்டில்களில் நிரப்பி விற்கப்பட்டு வருகிறது.
  • ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தான் அதிக அளவு தாது உப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வேதியல் பொருட்கள் மற்றும் சர்க்கரை சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த தண்ணீரில் தான் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • இந்தப் பண்பை அடிப்படையாகக் கொண்டு இளநீரை பல்வேறு மருத்துவ மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தேங்காய் தண்ணீரில் பல்வேறு வளர்ச்சி ஊக்கிகள் (உதாரணத்திற்கு சைட்டோகைன், ஜிப்ரலிக் ஆசிட், ஆக்ஸின் மற்றும் இதர), வேதிப்பொருட்கள்,ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. 
  • இது மட்டுமின்றி பல்வேறு விதமான வகைப்படுத்தப்படாத வளர்ச்சி ஊக்கிகள் இதில் நிறைந்துள்ளதால் இதன் முழுமையான பயனை நாம் எட்ட இயலவில்லை. 

  • பன்முகத் தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கிய கருதப்படும் Brassinostroid, jasmonates மற்றும் சில வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வு கட்டுரைகள் குறிப்பிடுகிறது.
  • எனவே நாம் இளநீரை விவசாய பணிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
  • இயக்க வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், துளசி தேங்காய் கரைசல் எந்த வகை கரைசலாக இருந்தாலும் அதனை தயார் செய்வதில் இளநீரை கலந்து பயன்படுத்தலாம். 
  • இதில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஊக்கிகள் ஆய்வுக்கூடங்களில் திசு வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதால் தற்போது இளநீர் திசு வளர்ப்பு செடிகளுக்கு வேர் மற்றும் தளிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • களைக்கொல்லி அல்லது தவறான மருந்துகள் அடித்து பயிர்களில் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து மீள பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் இளநீர் கலந்து தெளிப்பதால் உடனடியாக பயிர் புத்துணர்ச்சி பெறும். 
  • இளநீரில் இருக்கும் தாது பொருட்கள் உடனடியாக பயிர்களால் எடுத்துக் கொள்ளக் கூடியதால் தொடர்ச்சியாக பயிர்களுக்கும் தெளித்து வருவதால் உர பயன்பாட்டை குறைக்க வழி வகை செய்யும்.
  • USDA ஊட்டச்சத்து தகவலின் படி 100 மில்லி லிட்டர் தேங்காய் தண்ணீரில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  • இளநீரில் இருக்கும் பல்வேறு வேதிய பொருட்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களை வறட்சி, அதிக தண்ணீர் தேங்குதல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து காத்து உதவி புரிகிறது.
  • இது மட்டும் இன்றி ஒவ்வொரு பகுதியிலிருந்து வரக்கூடிய இளநீர் ஒவ்வொரு விதமான வளர்ச்சி ஊக்கி மற்றும் வேதிய பொருட்களைக் கொண்டுள்ளதால் எந்தெந்த பகுதியிலேயே பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
  • பயிர்களில் பூ பிடித்தலை ஊக்கப்படுத்துகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடை செய்கிறது. 
  • மகசூலின் தரம், நிறம் மற்றும் சுவையை மாற்றி அமைத்து மேம்படுத்துகிறது தருகிறது. 
  • காய்கறி பயிர்களில் இதனை தவிப்பதால் அதிக அளவு காய் பிடிப்பதை காண இயலுகிறது எனவே இதன் எண்ணற்ற பயனை நம்மால் முழுமையாக கூற இயலாது. 

  • இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

சாமந்தி பயிரில் பூ கருகல் (Botrytis blight) நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • ஆடி மாதத்தில் நடவு செய்யப்படும் காய்கள் மற்றும் பூக்களுக்கு அறுவடை தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்பது பொதுவான கருத்து அதனால் தமிழ்நாட்டில் பரவலாக காய்கறிகள் மற்றும் பூ பயிர்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தற்போது சாகுபடியில் இருக்கும் சாமந்தி பூக்களில் பல்வேறு விதமான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய நோயாக Botrytis எனப்படும் பூ கருகல் நோய். ஏனெனில் இது நேரடியாக பூக்களை பாதித்து உடனடியாக பூக்களின் தரத்தை குறைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
  • Botrytis எனப்படும் பூஞசானத்தால் ஏற்படக்கூடிய இந்த நோயானது கிரே மோல்ட் (Gray mold) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோயானது பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பூ பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. உதாரணத்திற்கு செவ்வந்தி, சாமந்தி, ரோஸ், துளிப் மற்றும் பல பூ பயிர்களின் வணிக ரீதியாக தேவைப்படும் பகுதியை பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்: 


  • பூ இதழ்களில் பழுப்பு/ காவி நிற புள்ளிகள் ஆரம்பத்தில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் விரிவடைந்து கருகல் போன்று காணப்படும்.
  • இதன் அறிகுறி மற்ற இதழ்களுக்கும் பரவி பூக்களை முழுவதும் பாதித்துவிடும். 
  • பின்னாளில் அழுகல் ஏற்பட்டு உருமாற்றம் ஏற்பட்டு இதழ்கள் உதிரும்.
  • தீவிர தாக்குதலின் போது இதன் அறிகுறிகள் மொட்டுகள், இலை மற்றும் தண்டுப் பகுதியிலும் காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாம்பல் நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான மழைப்பொழிவு, தூறல், பனிப்பொழிவு மற்றும் மேக மூட்டமான தட்பவெப்ப சூழ்நிலை.
  • அதிகளவு நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி இல்லாமல் இருத்தல். 
  • நெருங்கிய நடவு 
  • பூக்கும் தருணத்தில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பூக்கும் தருணம் பருவ மழைக்கு இணையாக வராத அளவிற்கு நடவு மேற்கொள்ளும்.
  • மேட்டுப் பாத்தி அமைத்து நல்ல வடிகால் வசதியுடன் சாகுபடி செய்ய வேண்டும். 
  • அடி உரமாக பயன்படுத்தும் தொழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 1.5 கிலோ Trichoderma மற்றும் Pseudomonas கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • போதுமான பயிர் இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
  • மாதம் ஒருமுறை அல்லது மழைப்பொழிவு காலத்தில் மாதம் இருமுறை என ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Trichoderma vridae பாசன நீர் வழியாக கொடுக்க வேண்டும். 
  • வாரம் ஒரு முறை Bacillus subtilis/ Pseudomonas fluorescence இலை வழியாக நன்கு தெளிக்க வேண்டும்.
  • மழைப்பொழிவு காலத்தில் ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து மண்ணில் இட வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட பூக்கள் அல்லது செடிகளை முழுமையாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து தெளிப்பு நீர் பாசன வழியாக நீர் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் தருணத்தில் வயலில் எவ்வித பணியையும் மேற்கொள்ளக்கூடாது.
  • வயலில் களைகள் அல்லது இதர குப்பைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரம் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம், போரான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் ஊட்டச்சத்துக்கள் சரிவிகித அளவில் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்.
  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு நேரத்தில் பயிர்களுக்கு வெப்பநிலையை ஏற்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளை தெளிக்கலாம்.
  • மாலை நேரத்தில் மருந்துகளோ அல்லது நீரில் கரையும் உரத்தினையோ தெளிக்க கூடாது. ஏனெனில் இது இரவு முழுவதும் ஈரப்பதத்தை ஏற்படுத்தி நோய் தாக்குதலை ஊக்குவிக்கும். காலை நேரத்தில் தெளிப்பதால் வெப்பநிலை காரணமாக ஈரப்பதம் நீங்கிவிடும்.
  • நாற்றுகளை இயற்கை வழி பூஞ்சான கொல்லி மற்றும் உயிர் உரம் பயன்படுத்தி நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது Carbendazim+ Mancozeb என்ற ரசாயன மருந்தை பயன்படுத்தியும் நேர்த்தி செய்யலாம்.
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாக காணப்படும் தருணத்தில் இது கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். (கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு)

Captan -25 கிராம் 

Zineb- 25 கிராம்

Carbendazim+ Mancozeb- 25 கிராம்

Chlorothaonil- 15 கிராம்

Thiophenate methyl - 15-20 கிராம்

Azoxystrobin+Mancozeb - 10 மில்லி

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 18 ஜூலை, 2024

பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள்

முன்னுரை:

  • நாம் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி முதல் மகசூலின் தரம் மற்றும் அளவு வரை வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். 
  • நாம் பயன்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகளின் அடிப்படை செயல் திறனை தெரிந்து கொண்டால் போதுமானது அதுவே பெரிய அளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். இந்தப் பதிவில் ஒரு சில வளர்ச்சி ஊக்கிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

  • பெரும்பான்மையான வளர்ச்சி ஊக்கிகள் இயற்கையாகவே தாவரங்களின் வேர், தளிர், விதை என பல்வேறு பாகங்களில் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் செயல்பாடுகளை கண்டறிந்து ஆய்வுக் கூடங்களில் உற்பத்தி செய்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • வளர்ச்சி ஊக்கிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மற்றொன்று வளர்ச்சியை தடை செய்து பூ அல்லது பழங்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது என இரண்டாக வகைப்படுத்தலாம்.

Brassinosteroid:

  • இது ஒரு பன்முக தன்மை வாய்ந்த வளர்ச்சி ஊக்கியாக கருதப்படுகிறது.
  • செல்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு இதர வளர்ச்சி ஊக்கியுடன் இணைந்து செயல்பட்டு பயிர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 
  • செல் சுவர்களின் தடிமனை அதிகப்படுத்துகிறது. 
  • விதை முளைப்புத்திறன், இளம் தளிர் மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
  • பயிர்களில் மகரந்தங்களின் செயல் திறனை நீட்டித்து அதிக அளவு கருவறுதலை உறுதிப்படுத்தும். 
  • இதனால் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. 
  • காய்களின் அளவு, எடை, சுவை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • இது மட்டும் இன்றி உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து செடிகளை சற்று விடுவிக்கிறது.
  • பெரும்பான்மையாக அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வளர்ச்சி ஊக்கி Double என்ற பெயரில் வணிகரீதியாக கிடைக்கப் பெறுகிறது.
  • பயிர்களின் வளர்ச்சியை பொறுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 5 முதல் 10  மில்லி வரை பயன்படுத்தலாம்.

Gibberlic acid:(GA3)

  • பயிர்களில் செல் பிரிதல் மற்றும் நீளமாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சிக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. 
  • பயிர்களில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது உதாரணத்திற்கு கரும்பு
  • உறக்க நிலையில் உள்ள விதைகளை முளைக்க வைக்க இதனை பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம். 
  • கொடி வகை காய்கறி பயிர்களில் ஆண் பூக்களை அதிகரித்து விளைச்சலை மேம்படுத்துகிறது. 
  • வாழையில் காய்கள் திரட்சியாக வளர துணை புரிகிறது. 
  • திராட்சையில் மலர் கொத்துகளை விரிவடையச் செய்வதோடு பழங்களின் எண்ணிக்கை, எடை மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 
  • வணிக ரீதியாக paushak, progibb என பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

Mepiquat Chloride:


  • இது ஒரு வளர்ச்சி தடை செய்யும் மருந்தாக செயல்படுகிறது. 
  • அதாவது ஒரு சில நேரங்களில் பயிர்களால் எடுத்துக் கொள்ளக்கூடிய மொத்த ஊட்டச்சத்து பயிரின் இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு செல்லும். 
  • அதை தடை செய்து ஊட்டச்சத்துக்களை கிழங்கு பகுதிக்கு அல்லது பழங்களுக்கு மாற்றி கொடுப்பதால் விவசாயிகளுக்கு  உதவியாக திகழ்கிறது.
  • அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 
  • Chamatkar என்ற வணிக பெயரில் இது கிடைக்கப்பெறுகிறது. 
  • உதாரணத்திற்கு சின்ன வெங்காயம் அல்லது நிலக்கடலையில் அதிக அளவு தாள்/இலை வளர்ச்சி காணப்படும் பொழுது கிழங்கு பகுதிக்கு கூட்டம் பெரியளவு செல்லாமல் காய்கள் சிறிதாக காணப்படும். இது போன்ற தருணத்தில் இதை பயன்படுத்தினால் காய்கள் திரட்சியாக உருவாக துணை புரியும்.

Cytokinins:

  • பயிர்களில் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதால் பயிர்கள் அதிக அளவு ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளர்கிறது. 
  • செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் வளர்ச்சியை தூண்டுகிறது. 
  • பயிர்களின் அதிக அளவு கிளைகள் அல்லது மொட்டுக்கள் பிரிய உதவி புரிகிறது. 
  • இலைகளுக்கு போதுமான அளவு பச்சயத்தை பெற்று தருகிறது. இதனால் பயிர் வளர்ச்சி திடகார்த்தமாக இருக்கும்.
  • நாம் அறுவடை செய்யும் பொருட்களின் அறுவடைக்குப் பின் இருக்கும் காலத்தை அதிகப்படுத்துகிறது. 
  • பயிரில் தூர்களின் எண்ணிக்கை, பக்க கிளை பிரிதல் என பல்வேறு பணிகளை செய்து அதிக உற்பத்தியை கொடுக்க உதவி புரிகிறது.
  • வணிக ரீதியாக Spic Cytocyme, Dhanzyme Gold என்ன பல பெயர்களில் கிடைக்கப்பெறுகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA



புதன், 10 ஜூலை, 2024

பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் உயிர் பூச்சிக்கொல்லி செயல்படும் விதம்

முன்னுரை:

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் என்பது ஒருவகை பாக்டீரியா ஆகும். இது மண், தண்ணீர், இறந்த பயிர் மற்றும் பூச்சிகளின் பாகங்கள், பல்வேறு விலங்கினங்கள் மற்றும் சில நேரங்களில் மனிதர்களில் கூட இயற்கையாகவே இருக்க கூடியது. 
  • இந்த பாக்டீரியா வித்துக்களை(spores) அதன்மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இதில் பல்வேறு வகையான தீமை செய்யக்கூடிய புரதங்கள் உள்ளன இதனை நச்சு புரதம் என அழைக்கலாம். இந்த புரதங்கள் அடங்கிய வித்து பகுதியை புழுக்கள் உண்ணுவதால் புழுக்கள் இறக்கும் அபாயம் உள்ளது எனவே தான் இதனை உயிர் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகிறோம். 
  • Bacillus thuringiensis (Bt.) பாக்டீரியா இயற்கையாகவே கிடைப்பதால் இதனை இயற்கை பூச்சிக்கொல்லி என்று அழைக்கிறோம்.  புழுக்களை கொள்ளும் திறன் உடைய இதன் பண்புகளைப் பிரித்து எடுத்து B.t ரக பயிர்களை உருவாக்கி புழு தாக்குதலுக்கு எதிராக செயல்பட வைக்கிறார்கள்.

Bt. செயல்படும் விதம்: 

  • பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா தனது இனப் பெருக்கத்திற்காக உற்பத்தி செய்யும் வித்துக்களில், பல்வேறு வகை தீங்கு செய்யக்கூடிய புரதங்கள் நிறைந்திருக்கும்.
  • உதாரணத்திற்கு Cry, Cyt, Vip, Sip போன்ற நச்சு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான புழுக்களுக்கு எதிராக செயல்படும் திறன் படைத்தது. இதில் Cry பல்வேறு வகையான புழுக்களுக்கு எதிராக செயல்படுவதால் இதை வணிகரீதியாக நாம் பயன்படுத்துகிறோம். புழுக்கள் இதனை உண்ணும் பொழுது இந்த புரதங்கள் அடங்கிய வித்துக்கள் புழுக்களின் குடல் பகுதியை சென்றடைகிறது. 
  • புழுக்களின் குடல் பகுதி 8 முதல் 10 இருக்கும் மேல் கார அமிலத்தன்மை உடையதால் தான் உண்ணக்கூடிய தீங்கு விளைவிக்கக் கூடிய புரதங்களை அதன் வயிற்று பகுதியில் protease எனப்படும் என்சைம் உதவியுடன் கரைக்கிறது. இதனால் புழுக்களின் குடல் பாகங்கள் சிதைந்து, பசி மற்றும் நோய் தொற்றால் அதிகபட்சமாக 5-7 நாட்களில் இறந்து விடுகிறது.
  • இளம் புழுக்கள் இதில் அதிக அளவு பாதிக்க கூடியது. எனவே பயிர் சாகுபடியில் இதனை பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.
  • பேசில்லஸ் பேரினத்தில் பல்வேறு வகையான சிற்றினங்கள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பதால் பயிர்களுக்கு ஏற்றவாறு இதனை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.

மனிதன்/விலங்குகளில் பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் செயல்படும் விதம்:

  • பாக்டீரியா வித்துக்களில் உள்ள நச்சு புரதங்கள் மனிதர்களையும் அல்லது விலங்குகளையும் பாதிப்பதில்லை.
  • ஏனெனில் நச்சு புரதம் மனிதர்கள் அல்லது விலங்குகளின் குடல்களை சென்றடையும் பொழுது நமது உடலில் இருக்கும் அமிலத்தன்மை என்றால் நச்சு புரதம் சிதைக்கப்பட்டு செயல் இழக்கிறது.
  • இது மட்டும் இன்றி நச்சு புரதங்களை தூண்டி செயல்பட வைக்கக்கூடிய நொதிகள் மனிதர்கள் அல்லது விலங்குகள் உடலில் இல்லை. எனவே இது மனிதர்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

இதன் இதர பயன்கள்: 

  • மரபணு மாற்ற பயிர்- Bt. பாக்டீரியாவால் உருவாக்கப்படும் நச்சு புரதத்தை உருவாக்கக்கூடிய மரபணு பிரித்து எடுக்கப்பட்ட அதிக அளவு புழு தாக்குதல் இருக்கும் வணிகப் பயிர்களுக்கு செலுத்தி புழு இல்லாதவாறு வடிவமைக்கப்படுகிறது உதாரணத்திற்கு பருத்தி... மேலை நாடுகளில் 10 மேற்பட்ட மரபணு மாற்ற பயிர் சாகுபடியில் உள்ளது.
  • வளர்ச்சி ஊக்கியாக செயல்படுதல்- பேசில்லஸ் துரிஞ்சியன்யிஸ் பாக்டீரியா மறைமுகமாக வேர் வளர்ச்சியை தூண்டுதல், மண்ணில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருக்கும் மணிச்சத்து & இரும்புச்சத்தை கிடைக்கச் செய்தல், பயிறு வகை பயிர்களில் வேர் முடிச்சுகளை அதிகப்படுத்துதல் என பல்வேறு பணிகளையும் செய்கிறது.

பயன்படுத்து கவனிக்கப்பட வேண்டியவை: 

  • காய், குருத்து, தளிர், இலை, தண்டு பயிர்களில் மறைந்திருந்து பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து வகையான புழுக்களுக்கு எதிராக இதை பயன்படுத்தலாம்.
  • Bt. உயிர் பூச்சிக்கொல்லி நேரடியாக புழுக்கள் மீது பட வேண்டிய அவசியமில்லை. 
  • மிதமான வெப்பநிலை குறிப்பாக 30 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும் தருணத்தில் பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். எனவே மாலை வேளையில் தெளிப்பது சால சிறந்தது. 
  • மனிதர்களுக்கு இது தீங்கு விளைவிக்காத என்றாலும் இதன் தயாரிப்பில் துணைப் பொருளாக பயன்படுத்தப்படும் பல்வேறு கன உலோகங்கள் மனிதர்களுக்கு தீங்கானது எனவே பயன்படுத்தும் போது கை உறை அணிவது நல்லது.
  • இதைத் தெளித்த மூன்று நாட்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிக்க கூடாது. 
  • இந்த பூச்சிக்கொல்லி புழுக்களை சென்றடைந்து செயல்பட போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் 5 முதல் 7 நாட்கள் வரை இதன் செயல்பாடுகளுக்கு காத்திருக்கலாம்.
  • தனிப்பட்ட முறையில் இதை பயன்படுத்தும் போது பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் வரை தெளிக்கலாம். இரண்டு தெளிப்புகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி ஏழு நாட்கள் வரை இருக்கலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

காரணங்கள்: 
மண்ணின் கார அமிலத்தன்மை: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும். 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை: 

  • போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.

நீர் மேலாண்மை: 

  • கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

மண் மேலாண்மை: 

மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாடு:

  • பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
  • போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.

மகரந்த சேர்க்கை: 

  • தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது. 
  • அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது. 

தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்: 

  • ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:

  • இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 

எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618

ஞாயிறு, 7 ஜூலை, 2024

வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் இலைப் பகுதியை பாதிக்க கூடிய பல்வேறு நோய்களில் பிரதான நோயாக சிகடோகா இலைப்புள்ளி நோய் திகழ்கிறது. இந்த நோய் பூஞ்சானம் இரண்டு வகையான அறிகுறிகளை பயிர்களில் தோற்றுவிக்கிறது. 
  • நோய் அறிகுறியை அடிப்படையாகக் கொண்டு இதனை மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா என்று கூறுவார்கள். பாதிப்பின் தன்மையை பொறுத்து சராசரியாக 50% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டும் இன்றி வாழைத் தார்களின் தரத்தில் குறைபாடு ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்: 
மஞ்சள் சிகடோகா:

  • வெளிர் மஞ்சள் முதல் பச்சை நிற புள்ளி அல்லது கோடுகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். 
  • படிப்படியாக இந்தப் புள்ளி அல்லது கோடுகளின் அகலம் மற்றும் நீளம் பெரிதாகி புண்கள் போன்று கருப்பு முதல் பழுப்பு நிற நடுப்பகுதியை கொண்டிருக்கும் அதனைச் சுற்றி மஞ்சள் வளையம் காணப்படும்.
  • பின்பு புண்களின் நடுப்பகுதியில் உள்ள திசுக்கள் காய்ந்து பழுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து கருப்பு நிற வளையத்துடன் காணப்படும்.

கருப்பு சிகடோகா:

  • வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கோடுகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். 
  • நாளடைவில் இதன் நிலம் மற்றும் அகலம் அதிகரித்து புண்களாக மாறும். 
  • பின்னர் புண்களின் நடுப்பகுதி கருப்பு நிறத்துடனும் அதனைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும்.
  • தீவிர நிலையில் புண்களின் நடுப்பகுதி வெள்ளை முதல் வெளிர் நிறத்திலும் அதனை சுற்றி மஞ்சள் நிறமும் காணப்படும்.

அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்தில் இளம் இலைகளில் இருந்து பின்னர் முதிர்ந்த இலைகளுக்கு பரவும்.மஞ்சள் நிற சிகடோகா இலைப்புள்ளி நோயை விட கருப்பு நிற சிகடோகா நோய் மிக தீவிரமானது. இதனால் செடிகளின் உணவு உற்பத்தி தரும் குறைந்து மகசூல் இழப்பீடு கண்டிப்பாக ஏற்படும்.

காய்கள் முதிர்ச்சி அடையும் முன்னரே பழுக்க ஆரம்பிக்கும் இதனால் காய்களின் தரம் குறைகிறது. வாழை தார்களில் உள்ள காய்கள் சீரற்ற முறையில் பழுப்பதால் தாரை விற்பனை செய்வதில் பின்னடைவு ஏற்படும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான ஈரப்பதம் பனிப்பொழிவு, அதிக வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம், இலைகளில் தொடர்ச்சியான ஈரப்பதம் இருத்தல்.
  • முறையான பராமரிப்பு இல்லாதது 
  • போதுமான வடிகால் வசதி இன்மை 
  • ஊட்டச்சத்தை பற்றாக்குறை குறிப்பாக பொட்டாசியம் 
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களை சாகுபடி செய்தல் உதாரணத்திற்கு கேவண்டிஸ் மற்றும் ரோபஸ்டா

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி உடைய மண் மற்றும் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அடர் நடவு மேற்கொள்வதை தவிர்க்கவும் ஏனெனில் இது நோய் தாக்குதலுக்கு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை உருவாக்கும். 
  • பக்கக் கன்றுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பக்கக் கன்றுகள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய் தாக்குதல் எளிதில் ஏற்படும்.
  • வயலில் முந்தைய பயிர்களின் எச்சம் மற்றும் களைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். குறிப்பாக தழைச்சத்து, பொட்டாசியம், போரான், மாங்கனீஸ் மற்றும் இரும்பு.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப் படுத்தலாம். அதாவது 20 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட இலையை முழுமையாக அகற்றலாம்.
  • அதற்கும் குறைவான தாக்குதல் இருக்கும் குறிப்பிட்ட இலை பகுதியை மட்டும் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • காற்று ஈரப்பதம் நோய் தாக்குதல் மற்றும் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை குறைக்க சொட்டு நீர் பாசனம் அமைத்தல், இரு வரிசைகளில் உள்ள மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று தொடாமல் இருக்கும்படி இலைகளை அறுத்து விடுதல் மற்றும் களைகள் இல்லாமல் பராமரித்தல் அவசியமாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது 10 லிட்டர் தண்ணீருக்கு Pseudomonas fluorescence மற்றும் bacillus subtillis ஆகியவற்றைத் தலா 50 மில்லி கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.
  • அதே போன்று 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 75 மில்லி Trichoderma viride மற்றும் bacillus subtillis கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை வாரம் ஒரு முறை என நோயின் தீவிரம் குறையும் வரை பின்பற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

  • Copper oxychloride -25 கிராம் 
  • Copper hydroxide- 10 கிராம் 
  • Chlorothaonil- 25 கிராம்
  • Propiconazole - 10 மில்லி
  • Merriam+ pyroclostrobin - 30-40 கிராம் 
  • Hexaconazole+ captan- 20 கிராம்
  • Tebuconazole Trifloxystrobin - 10 கிராம் 
  • Tebuconazole+sulphur -25 கிராம்
  • Fluopyram+Tebuconazole - 10-12 மில்லி
  • Fluxapyraxad + pyroclostrobin - 4 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.



வெள்ளி, 5 ஜூலை, 2024

எலுமிச்சையில் சூனியக்காரர்களின்(Witchesbroom) துடைப்பம் நோய் மேலாண்மை

முன்னுரை:

  • ஆங்கிலத்தில் Witches broom என்று அழைக்கப்படும் நோயினை தமிழில் சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைப்பார்கள். இந்த நோயானது பைட்டோபிளாஸ்மா எனப்படும் உயிரினத்தால் ஏற்படுகிறது. 
  • பிரதானமாக எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பரவலாக இதன் தாக்குதல் தற்பொழுதும் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளை பகுதியின் நுனியில் அதிக பக்க கிளைகள் காணப்படும். 
  • இந்த பக்க கிளைகளில் தோன்றக்கூடிய இலைகள் வெளிர் பச்சை முதல் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். 
  • இந்த பகுதியில் காணப்படும் பக்க கிளைகள் குறைந்த கணு இடைவெளி கொண்டிருக்கும். 
  • இந்தக் கிளையின் அடி புரத்தில் உள்ள இலை மற்றும் கிளை பகுதியில் காய்ந்து காணப்படும். 
  • இதனை பார்க்கும் பொழுது துடைப்பம் போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்த நோயை சூனியக்காரர்களின் துடைப்பம் என்று அழைக்கிறார்கள்.
  • நாளடைவில் இந்த பகுதியில் காணப்படும் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உதிர்ந்து, பின் கருகல் நோயாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.
  • இவ்வாறாக அறிகுறிகளை தோற்றுவிக்கும் கிளைப் பகுதியில் எந்த வித பூ அல்லது காய்கள் தோன்றாது.
  • நோயின் அறிகுறிகள் தென்படும் மரங்கள் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இறந்துவிடும் அபாயமும் இதில் உள்ளது. 

பரவும் விதம்: 

இந்த நோயானது ஒட்டு செடிகளில் அதிகம் காணப்படுவதற்கு காரணம் பிரதானமாக ஒட்டுக்கட்டுதல் மூலம் பரவுகிறது. அதாவது உணவு பாதை வழியாக பரவுகிறது. 

இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சான பச்சை ஈக்கள் மற்றும் சில்லிட் மூலமும் பரவும் தன்மை உடையது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • எலுமிச்சை செடிகளில் ஒட்டுக்கட்டி பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 
  • ஒட்டுக் கட்டுதலுக்கு பயன்படுத்தப்படும் தாய் மற்றும் வேர் செடிகளை நன்கு ஆய்வு செய்து ஃபைட்டோபிளாஸ்மா நோய் தாக்காத மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் ஏனெனில் வயலில் இருக்கும் வயதான/ பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் களைகள், நோய் அல்லது வைரஸ் நோயை பரப்பும் பூச்சிகளின் வாழ்விடமாக இருக்கலாம்.
  • நோயைப் பரப்ப கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை வழி திரவங்கள் அல்லது ரசாயன திரவங்களை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
  • மரங்களைப் பராமரிப்பதில் அதிக கவனம் தேவை எனவே பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த நாம் எடுக்கும் நடவடிக்கை இதற்கும் பின்பற்ற வேண்டும் அதைப் படிப்பதற்கு கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2024/07/blog-post_4.html
  • பூச்சிகளின் ஆரம்ப நிலை தாக்குதல் போது இயற்கை வழி பூச்சிக் கொல்லியான Verticillum lecanii ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என கலந்து வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும். 
  • அல்லது கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பச்சை ஈக்களை கட்டுப்படுத்த தெளிக்கலாம்.
  • Imidacloprid, Acetamaprid, spiromesifen, phenthoate, broflonilide, flonicamid etc...

வியாழன், 4 ஜூலை, 2024

தோட்டக்கலைப் பயிர்களில் பழ ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக பழ பயிர்களில் பழ ஈ தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பீடு மற்றும் தரத்தில் ஏற்படும் பாதிப்பு கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, பல்வேறு சூழ்நிலைகளை தாங்கி வளரும் பூச்சிகளின் தகவமைப்பு, வேகமான இனப்பெருக்க திறன் மற்றும் பல்வேறு பயிர்களை உண்டு வாழும் திறன் என பல காரணங்களால் பழ ஈக்களை கட்டுப்படுத்துவது சற்று சவாலாக இருக்கிறது. 
  • தோட்டக்கலை பயிர்களில் பழ ஈக்கள் தாக்குதலால் 40 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடும், தரத்தில் குறைவும் ஏற்படுகிறது. 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பழ தோட்டம் மற்றும் மரங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் இதனால் பழ ஈக்களின் வாழ்க்கை சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம். 
  • மரத்திலிருந்து உதிர்ந்த பழங்கள் அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். இதனால் இதில் இருக்கும் முட்டை மற்றும் இளம் புழுக்களை முற்றிலும் அழிக்கலாம். அதாவது பாதிக்கப்பட்ட பழங்களை அரைத்து குழி தோண்டி புதைக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக முட்டை மற்றும் இளம் புழுக்கள் அழியும். 
  • அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை பிளாஸ்டிக் பையில் இறுக்கமாக கட்டி வைப்பதால் நாளடைவில் அது அழிந்துவிடும். 
  • அல்லது இந்த பழங்களை தோட்டத்திலிருந்து சற்று தொலைவில் நன்கு காய வைத்து மற்ற கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 
  • பழ தோட்டத்தில் குப்பைகள், களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைப்பதுடன் பழ ஈக்கள் தாக்காத பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம். 
  • பழ ஈக்களின் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய பழ செடிகள் அல்லது ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். ஈக்கள் பழங்களில் முட்டை இடுவதை தவிர்க்க சிறு காயக இருக்கும்போது அதனை பிளாஸ்டிக் பை/காகிதம் பயன்படுத்தி சுற்றிக் கட்டி விடலாம். இந்த முறை சற்று அதிக செலவினம் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பயனளிக்க கூடியதாகும். எனவே குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனை பின்பற்றலாம். 
  • சாகுபடி செய்யும் பழ மரங்களை தாக்கும் ஈக்கள் இனத்தைப் பொறுத்து ஒட்டுண்ணி குளவி மற்றும் பூஞ்சைகளை பயன்படுத்தி பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம். இந்த முறை ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 
  • இயற்கை பூச்சிக்கொல்லி திரவங்களான Beauveria bassiana, Metarhizium anisopliae, Isaria fumosorosa முதலியவற்றை தெளிப்பதால் 55 முதல் 70% வரை பழ ஈக்களை கட்டுப்படுத்த முடியும். 
  • மரங்களில் காய்கள் பழுக்கும் முன்னதாக அதாவது 100% பச்சை நிறத்தில் இருக்கும் பொழுது அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இளம் புழுக்கள் கூட்டுக் புழுவாக மாறாமல் தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். காய்கள் நிறம் மாறும் பொழுது அதில் இருக்கக்கூடிய இளம் புழுக்கள் பழத்தின் உட்பகுதி மற்றும் தோல் பகுதியை உண்டு துளையிட்டு வெளிவந்து தரையில் விழுந்து கூட்டு புழுவாக மாறுகிறது. இதனால் முதிர்ந்த பழ ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே தோப்பில் பழங்களை பழுக்க விடாமல் முன்னதாக அறுவடை செய்ய வேண்டும். 
  • அதேபோன்று காய்களின் செல் சுவர்களை கடினப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கான கால்சியம், மெக்னீசியம், சிலிகான், மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்துக்களை முறையாக கொடுக்க வேண்டும். 
  • நாம் தேர்வு செய்யும் ரகங்களின் செல் சுவர்கள் அதிக கடினத் தன்மை கொண்ட ரகமாக இருந்தால் பழ ஈக்கள் அதில் முட்டை இட வாய்ப்புகள் குறைகிறது. முதிர்ந்த பழ ஈக்களை அதிக அளவில் கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தலாம். 
  • நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறி கிடைக்கப்பெறுகிறது. அதேபோன்று கவர்ச்சி பொறிகளை தயார் செய்து வயலில் அங்கங்கே வைத்து முதிர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். 
  • கோடை பருவத்தில் இரண்டு மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உழவு செய்வதால் மண்ணில் இருக்கும் கூட்டுப் புழுக்களை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சீர்குலைக்கலாம். வயலில் கவர்ச்சி பொறி அல்லது பொறி பயிர்களை சாகுபடி செய்யலாம். 
  • அறுவடை செய்த பழங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வெப்பநிலை கொண்ட நீரில் நேர்த்தி செய்து பின்பு சேமித்து வைக்க வேண்டும். 
  • ஆரம்ப நிலை தாக்குதல் அல்லது தாக்குதலுக்கு முன்னதாக தொடர்ச்சியாக வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வருவதால் இதன் தாக்குதலை தவிர்க்கலாம் என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
  • தாய் அந்தப் பூச்சிகளை அதிக அளவு கவர்ந்து அழிக்க Fish meal trap எனப்படும் கருவாட்டு பொறியையும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சிறிய டப்பாவில் கருவாட்டு உடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் பூச்சி மருந்து கலந்து வயலில் ஆங்காங்கே கட்டி வைப்பதால் பூச்சிகள் கவர்ந்து இறந்துவிடும். இதனை ஏக்கருக்கு 20 முதல் 25 எண்கள் பயன்படுத்த வேண்டும் மேலும் அவ்வப்போது கருவாட்டை மாற்றி கட்ட வேண்டும். 
  • ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இரண்டுமே சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். (10 லிட்டர் தண்ணீருக்கு) 
  • Imidacloprid - 10 மில்லி 
  • Emamectin+ imidacloprid- 5 கிராம்+ 10 மில்லி 
  • Imidacloprid+ acetamaprid - 10 மில்லி+ 10 கிராம் 
  • Phenthoate - 15-25 மில்லி 
  • Spirotetramet+imidacloprid - 10-20 மில்லி
  • Spinosad - 5-8 மில்லி
  • இவை அனைத்தும் ஆரம்ப நிலை தாக்குதலின் போது பயன்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளாகும் தீவிரமாகும் போது அதற்கு ஏற்றவாறு மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


எலுமிச்சையில் நுனி கருகல்/ பின் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • தமிழகத்தில் நாளுக்கு நாள் எலுமிச்சை சாகுபடி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதான காரணமாக மாறுபட்ட தட்பவெப்ப நிலை மற்றும் புளிப்பு வகை சார்ந்த இதர பழ சாகுபடி குறைந்து வருவதே ஆகும். 
  • எலுமிச்சை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் அறிந்த பிரதான நோயாக நுனி கருகல் நோய் திகழ்கிறது. இதை ஆங்கிலத்தில் Die back/ Wither dip/Anthracnose/ Citrus Decline நோய் என்று அழைப்பார்கள். 
  • இந்த நோயானது பூஞ்சை தாக்குதல்,பூச்சி தாக்குதல், முறையற்ற பராமரிப்பு, மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை, ஊட்டச்சத்து பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு வகை நோய் அல்லது சீர்குலைவு எனலாம்.
  • இந்த நோயினால் சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரத்தின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு கிளைகளில் உள்ள நுனி இலைகள் வாடி பழுப்பு நிறம் அடைந்து பின்னர் உதிர ஆரம்பிக்கும்.
  • அடுத்த கட்டமாக இலை உதிர்வு நுனியில் இருந்து கிளையின் அடிப்புரத்தை நோக்கி பரவும். எனவே தான் இதனை பின் கருகல் நோய் என்றும் கூறுவார்கள்.
  • தண்டுப் பகுதியில் மரப்பட்டைகள் உதிர்தல் பிசின் வெளி வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கிளையில் கருப்பு நிற பூஞ்சான வளர்ச்சியை காண இயலும். 

  • நாளடைவில் பாதிக்கப்பட்ட கிளைகள் முற்றிலும் காய்ந்து விடும்.
  • நோய் தாக்குதலினால் செடிகள் அல்லது மரங்கள் இறப்பது மிகவும் அரிது. ஆனால் ஒரு சில கிளைகள் காய்ந்து வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • இதனால் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
  • இந்த வகை நோய் இளம் மரங்களில் வேகமாக பரவும் தன்மை உடையது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • காய்ந்து போன கிளைப் பகுதியை அகற்ற வேண்டும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குறிப்பிட்ட கிளை பகுதி முற்றிலும் காய்ந்து இருக்க வேண்டும். கிளையின் தண்டுப் பகுதியில் பச்சையம் இருக்கும் போது அதை அகற்றினால் நோய் பரவுதல் காணப்படும்.

  • இது செடியின் காய்ப்பு திறனை பெரிய அளவில் பாதிக்கும். 
  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.

  • மற்ற நோய் மற்றும் பூஞ்சை தாக்குதலுக்கு செடிகள் ஏதுவாக அமையும். எனவே குறிப்பிட்ட கிளை பகுதியை அகற்றிய பிறகு அதில் நோய் பரவாமல் இருப்பதற்கு காப்பராக்சி குளோரைடு என்ற மருந்தை தடவி விட வேண்டும். 
  • மரங்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். 
  • மரம் ஒன்றிற்கு 15 முதல் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், 100 கிராம் Trichoderma, 100 கிராம் VAM மற்றும் 100 கிராம் Humic அமிலம் ஆகியவற்றை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இட்டு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். 
  • ரசாயன உரங்களாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 250:150:200 கிராம் என்ற அளவில் வருடத்திற்கு நான்கு முறை கொடுக்க வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மாதம் ஒரு முறை வேர் வழியாகவும் இலை வழியாகவும் ஊட்டச்சத்துக் கொடுக்க வேண்டும்.
  • நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் கண்டிப்பாக வட்டப்பாத்தி இட்டு அதன் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • அளவுக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். 
  • நாம் பாய்ச்சும் நீர் தண்டுப் பகுதியை தொடாமல் இருக்க மண் அணைக்க வேண்டும்.
  • இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாதவாறு செடிகளை பராமரிக்க வேண்டும்.
  • மரங்களுக்கு தேவையான அளவு நுண்ணூட்ட சத்து கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக காப்பர், துத்தநாகம், மாங்கனிசு, இரும்பு மற்றும் மாலிப்டினம். 
  • நுண்ணூட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் வருடம் இரண்டு முறை இடவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாதம் ஒரு முறை காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 அல்லது 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இயற்கை வழி திரவங்களை பயன்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus ஆகியவற்றைக் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


செவ்வாய், 2 ஜூலை, 2024

இலாபம் தரும் சவுக்கு மரம் சாகுபடி

முன்னுரை:

குறைந்த நாட்களில் செலவில்லாமல் மர பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு சவுக்கு மரம் சாகுபடி செய்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. காகிதம் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், விறகு, மரக்கட்டை என பல்வேறு பயன்களை கொண்டுள்ள சவுக்கு மர சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் சாகுபடிக்கு உகந்தது: 

  • அனைத்து மண் வகைகளிலும் வளரும் 
  • குறைந்த சாகுபடி செலவினம் 
  • வேலையாட்கள் பெரிய அளவில் தேவையில்லை 
  • நீர் தேவை மிகவும் குறைவு 
  • எளிதில் விற்பனை செய்ய இயலும் 
  • வனவிலங்குகள் தொல்லை இல்லை 
  • நோய் அல்லது பூச்சி தாக்குதல் இல்லை 
  • சராசரி விலை கிடைக்கப் பெறுகிறது.

ரகம் தேர்வு செய்தல்: 

  • பல்வேறு நாட்டு, ஒட்டு  மற்றும் கலப்பின ரகங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து முழு விலையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. நாட்டு சவுக்கு மற்றும் இந்தோனேசிய வகை ரகங்கள் கொண்டு கலப்பினம் அல்லது ஒட்டுக் கட்டிய ரகங்களை முறையாக தேர்வு செய்து பயிரிடுவதால் நல்ல விளைச்சல் பெற இயலும்.
  • குறிப்பாக TNPL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் கலப்பின ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கக் கூடியதாக திகழ்கிறது எனவே இதனையும் தேர்வு செய்து நடவு செய்யலாம். 

நிலம் தயார் செய்தல்: 

இரண்டு முறை கலப்பை உழவு செய்து பின்னர் ரோட்டா வேட்டர் பயன்படுத்தி மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி: 

இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி ஐந்து முதல் ஆறு அடி எனவும் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மூன்று முதல் மூன்று அடி வரை இருக்கலாம். இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 2500 மரங்கள் பெற இயலும்.

குழி எடுத்தல்: 

30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உடைய குழிகளை தயார் செய்து 15 நாட்கள் ஆற விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள், VAM மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இடவேண்டும்.

நடவு செய்தல்: 

போதுமான நீர் வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மன வரி பூமியில் நடவு செய்ய விரும்பினால் பருவ மழை காலத்தில் நடவு மேற்கொள்ளலாம்.

களை மேலாண்மை:

ஆரம்ப காலத்தில் களை மேலாண்மை மிகவும் அவசியம். அதாவது முதல் வருடம் சுமார் 4 முறையாவது களையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உர மேலாண்மை: 

இந்த மரம் வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது அதற்கேற்றவாறு உரமிடுதலை திட்டமிடலாம். வருடத்திற்கு இரண்டு முறை போதுமான அளவு ஊட்டச்சத்து பருவமழை தருணத்தில் கொடுக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்: 

சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால் வேலையாட்கள் குறைக்கப்படுகிறது, களைகள் அதிகம் வளர்வதில்லை, நீர் தேவையும் குறைவு, அனைத்து வகையான நிலங்களுக்கும் உகந்தது, நீரில் கரையும் உரங்களை கொடுக்க இயலும். இதனால் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

இதில் பெரிய அளவு நோய் அல்லது பூச்சி தாக்குதல் இருப்பதில்லை அவ்வாறு இருந்தால் அதனை எளிதில் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி விடலாம்.

ஊடுபயிர் இடுதல்: 

அனைத்து வகையான காய்கறி பயிர்கள், நிலக்கடலை,உளுந்து, எள், பயிறு வகை பயிர்கள் என குறைந்த வாழ்நாள் கொண்ட அனைத்து பயிர்களையும் முதல் ஒரு வருடம் சாகுபடி செய்யலாம்.

அறுவடை மற்றும் விளைச்சல்: 

அதிக வாழ்நாள் திறன் கொண்ட பயிராக இருந்தாலும் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்களில் நாம் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். கலப்பின கன்றுகளை பயன்படுத்தும் பொழுது ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வரை நிகர லாபம் எடுக்க இயலும். 

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


Recent Posts

Popular Posts