மணல் சார்ந்த மண் பூமியில் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை
ஜூன் 25, 2025
In மற்றவைகள் |
|
- அதிக மணல் தன்மையுடைய மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வது கடினமாகும். இது மட்டுமின்றி மண்ணில் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் மண்ணுக்கு அடியில் சென்று பயிர்களுக்கு எட்டாத வண்ணம் சென்றுவிடும்.
- தண்ணீரும் அதே போன்று தான் ஆழமாக சென்று விடுவதால் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது இதனால் மீண்டும் மீண்டும் அதாவது குறுகிய இடைவெளியில் நாம் நீர் பாய்ச்சல் வேண்டிய தேவை இருக்கும். எனவே இந்த மண்ணை மேம்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வர கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
வழிமுறைகள்:
மக்கிய உரங்களை இடுதல்:
- இங்கு மக்கிய உரங்கள் என்பது கால்நடை தொழு உரம், பண்ணை கழிவு உரம், மண்புழு உரம் மற்றும் கிடைக்கப்பெறும் மட்கு பொருளை பயன்படுத்தலாம்.
- இவ்வாறு இடும் பொழுது மணல் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைவதால் இவை எளிதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்கிறது.
- இதன் மூலம் பயிர்களுக்கு போதுமான அளவு சத்துக்களும் நீரும் கிடைக்கப் பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்பட்டு வேர்கள் மண்ணை இறுக பற்றி நன்கு வளரும்.
- இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பயிர்களின் வேர் அமைப்புக்கு ஏற்றவாறு தொழு உரங்களை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக இடவேண்டும்.
இயற்கை நிலப் போர்வை அமைத்தல்:
- பண்ணையில் கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் நிலப் போர்வை அமைக்கலாம். உதாரணத்திற்கு வைக்கோல், பயிர் கழிவுகள், தீவனக் கழிவுகள், களைகள் மற்றும் இதர.
- இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆவியாகி வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவர் தடுக்கப்படும் பொழுது பயிர்கள் இதனை எடுத்துக் கொள்ளப் போதிய நேரம் இருக்கும்.
- இது மட்டுமின்றி மண் அரிப்பு தடுக்கப்படும் மற்றும் களைகள் முளைப்பது வெகுவாக குறையும்.
- நாளடைவில் இந்த இயற்கை வழி நிலப் போர்வை படிப்படியாக மக்கும் பொழுது ஊட்டச்சத்துக்கள் மண்ணில் அதிகரிக்கும்.
இதர மண்ணை இடுதல்:
- மணல் பாங்கான மண் தன்மையை மேம்படுத்த மிதமான அளவு கருப்பு மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு உழவு செய்ய வேண்டும்.
- இதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.
- அளவுக்கு அதிகமாக இடக்கூடாது இது மண்ணை மேலும் இறுக செய்துவிடும்.
பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்தல்:
- பசுந்தாள் பயிர்களை மிக நெருக்கமாக சாகுபடி செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.
- இதன் வேர்கள் மேல் மண்ணை மிக இறுக்கமாக பிடித்து வைத்து இருப்பதுடன் தழைச்சத்து உரத்தை நிலை நிறுத்திக் கொடுக்கும்.
- இவற்றை மடக்கி உழவு செய்வதால் அதிக அளவு பயிர் கழிவுகள் மண்ணில் மக்குவதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் மேம்படும்.
உர மேலாண்மை:
- நீரில் கரையும் உரங்களை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுக்கலாம்.
- அல்லது ஊட்டச்சத்துக்களை பொறுமையாக கரையை செய்து பயிர்களுக்கு கொடுக்கும் உரங்களை பயன்படுத்தலாம்.
- தேவைக்கு ஏற்ப இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளித்து வர வேண்டும்.
நீர் மேலாண்மை:
- வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்க்க வேண்டும். இது நீர் தேவையை அதிகரிக்கும்.
- சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக