google-site-verification: googled5cb964f606e7b2f.html ஆகஸ்ட் 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

    தலைக்கொத்து நோய் என்பது ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படக் கூடியதாகும். இந்த நோய் அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் அடுத்த அடுத்த செடிகளுக்கு பரப்பப்படுகிறது. இது மட்டுமின்றி பாதிப்படைந்த மரத்திலிருந்து விதை கருணைகளை தேர்வு செய்து நடவு செய்தாலும் நோய் பரவும் தன்மையுடையது.

இதன் அறிகுறிகள்:

  • இந்த வைரஸ் நோய் பாதிப்பின் அறிகுறிகள் மிகத் தெளிவாக இளம் வயது பக்க கன்றுகளில் காண இயலும். 
  • பாதிப்படைந்த பக்கக்கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு குன்றி காணப்படும். 
  • தண்டுப் பகுதியின் நுனியில் வரக்கூடிய இலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து காணப்படும்.
  • நுனியில் வரக்கூடிய இலைகள் நன்றாக விரியாமலும் அகலம் குறைந்தும் நீள்வாக்கில் காணப்படும். 
  • இலையின் விளிம்புகளில் மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். 
  • அதேபோன்று இலை விளிம்புகள் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக வளமுமாக பலமாக இருப்பது போன்ற அமைப்பு காணப்படும். 
  • இளம் செடிகளில் இலைகள் வளைந்தும் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும். அது மட்டும் இன்றி இலை காம்பு மற்றும் இலையின் அடி புறத்தில் மெல்லிய சீரற்ற கோடுகள் காணப்படும். 

முதிர்ந்த மரங்களில் காணப்படும் அறிகுறிகள்...

  • நன்கு வளர்ந்த மரங்களில் தலைக்கொத்து நோய் அறிகுறி தெளிவாக தெரியாது. 
  • இலையின் நடுநரம்பு மற்றும் அடிப்பகுதியில் புள்ளி மற்றும் கோடுகள் சீரற்ற பரவலாக காணப்படும்.
  • நடு நரம்பிற்கும் இலை விளிம்புகளும் இணையும் இடத்தில் J வடிவத்தில் கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படும். 
  • அதேபோன்று இலை காம்பு மற்றும் பூங்கொத்து போன்ற பகுதிகளிலும் கோடுகள் காணப்படும் நாளடைவில் இந்த கோடுகள் சிகப்பு நிறமாக மாற்றம் அடையலாம்.
  • முதிர்ந்த மரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாழை பூ மற்றும் தார் மிக மிக சிறிதாகவும் வளைந்து நெளிந்தும் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். 
  • சில நேரங்களில் பாதிப்படைந்த மரங்கள் பூ அல்லது காய்கள் விடாமலேயே இறந்து விடுகிறது. 

இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தலைக்கொத்து நோய் தாக்குதல் காணப்படும் வாழை தோப்புகளில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் விதை கட்டைகள் தேர்வு செய்ய வேண்டாம். 
  • வயலை சுத்தமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். 
  • ஊடுபயிராக சாறு உறிஞ்சி பூச்சிகள் அதிகம் தாக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். 
  • அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த மரத்தை முழுமையாக அகற்றி வயலில் இருந்து வெளியேற்றவும். 
  • அஸ்வினி போன்ற மற்ற வகை சாறு உறிஞ்சி பூச்சிகள் தாக்காத வண்ணம் பயிரை பராமரிக்க வேண்டும்.
  • ஒருவேளை சார் உறிஞ்சி பூச்சிகள் இருந்தால் உடனடியாக இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த Verticillum lecanii தெளித்து வர வேண்டும்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் நேரத்தில் கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 
  1. Imidacloprid - 10 மில்லி 
  2. Fibronil -15-25 மில்லி 
  3. Thiamethaxam- 10 கிராம்
  4. Dimethoate -15-25 மில்லி 
  5. Acephate-10 கிராம்
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

டிஏபி (DAP) உரத்தை ஏன் அடி உரமாக பயன்படுத்த வேண்டும்...

முன்னுரை:

பயிர் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது இன்றியமையாதது. குறைந்த வாழ்நாள் உடைய பயிர் சாகுபடியில் அடி உரத்தின் பங்கு அளப்பரியது. அதாவது குறைந்த வாழ்நாளில் பயிர்களை போதுமான அளவு வளர செய்து நல்ல மகசூல் கொடுக்க ஆதாரமாக அடி உரம் இடுதல் திகழ்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட பொதுவாக டிஏபி அடி உரமாக இட  ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

டி ஏ பி உரத்தை அடி உரமாக இடுதல்:

  • டி ஏ பி என்பதை ஆங்கிலத்தில் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) என்பார்கள். இவற்றில் 18 % தழைச்சத்து மற்றும் 46 % மணிச்சத்து நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 
  • இதில் இருக்கக்கூடிய மணிச்சத்து பாஸ்பேட் உள்ளதால் இதன் கரைதிறன் மிகவும் அதிகம். அதாவது மண்ணில் இட்டு போதுமான அளவு நீர் கிடைக்கப் பெற்றால் விரைந்து செடிகளுக்கு தேவையான வடிவத்தில் கிடைக்கப்பெறுகிறது.
  • எந்த ஒரு பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்வது மணிச்சத்து ஊட்டச்சத்து ஆகும். DAP -ல் இருக்கக்கூடிய மணிச்சத்து பயிர்களுக்கு விரைந்து கிடைப்பதால் தான் இதனை அடி உரமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி இதில் இருக்கக்கூடிய தழைச்சத்து படிப்படியாக கரைந்து பயிர்களுக்கு தேவையான பொழுது தேவையான அளவு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. 
  • இந்த உரத்தை பயன்படுத்துவதால் பயிர்களில் நல்ல வேர் வளர்ச்சி கிடைக்கப்பெறுகிறது. நல்ல வேர் அமைப்பு உடைய பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 
  • டிஏபி உரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது வேர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்தலும் அதன் பின்பு தண்டு இலை போன்றவற்றின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை கொடுத்து உதவி புரிகிறது. 

இதன் இதர பயன்கள்: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை தான் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை செடிக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அமிலத்தன்மை அதிகமானால் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை, அதே போன்று மண்ணின் காரத்தன்மை அதிகமானால் ஊட்டச்சத்து மிகைப் பாட்டினால் ஏற்படும் அறிகுறி காணப்படும். இந்த வகையில் டிஏபி உரம் இடுவதால் மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து சராசரியாக பராமரிக்க உதவி புரிகிறது.
  • டி ஏ பி இருக்கக்கூடிய மணிச்சத்து எளிதில் பயிர்களுக்கு கிடைப்பதால் வேர் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் வறட்சி, சத்து பற்றாக்குறை, நாற்றுகள் இறத்தல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். 
  • இது மட்டுமின்றி நல்ல வேர் அமைப்புடைய நாற்றுகள் தனக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீரை தேடி எடுத்துக் கொண்டும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து எதிர்ப்பு திறன் புரிகிறது.
  • மேலும் டி ஏ பி உரம் மற்ற உரங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் உரம் வீணாவதை வெகுவாக குறைக்கலாம்.
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களுக்கும் பி ஏ பி பயன்படுத்தலாம் இதில் எந்தவித அச்சமும் தேவையில்லை. 
  • அது மட்டுமின்றி டி ஏ பி இடுதல் மண் வளம் மற்றும் அதன் அமைப்பை மேம்படுத்தி மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உதவியாக தான் திகழ்கிறது என பல்வேறு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்...

முன்னுரை: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள பயிர் நடப்பு பருவத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மானாவாரி மற்றும் இறவையில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பெரும்பான்மையான விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் இதனை பயிர் செய்து செய்து வருகிறார்கள் இதில் சாகுபடி செலவை அதிகப்படுத்தி மகசூலை குறைக்கும் பிரதான பூச்சியாக படைப் புழு காணப்படுகிறது. 
  • இதன் தாக்குதலால் சராசரியாக 10 முதல் 35% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. பராமரிப்பு அற்ற நிலத்தில் 100% வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை விரிவாக பார்ப்போம். 

புழு தாக்குதலின் அறிகுறிகள்:

இந்தப் புழு தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதை முளைத்த பத்து நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  • இளம் புழுக்கள் அதாவது பச்சை நிற புழுக்கள் இலையின் ஒரு புறத்தில் உள்ள திசுக்களை உண்டு சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தும் ஆனால் மறுபுறத்தில் பச்சையம் காணப்படும். 
  • இரண்டு மற்றும் மூன்றாம் தோல் உரித்தல் நிகழ்வின்போது பயிரை கடித்து உண்டு துளைகளை ஏற்படுத்தும்.
  • நடுப் பகுதியில் இருக்கும் குருத்துப் பகுதியை உண்டு காயம் ஏற்படுத்துவதால் இலைகள் விரிந்த பிறகு பரவலாக துளைகள் காணப்படும்.
  • பெரிய புழுக்கள் சிறிய புழுக்களை உண்ணும் திறன் உடையதால் பயிரில் இரண்டு முதல் மூன்று புழுக்கள் மட்டுமே காணப்படும்.
  • முதிர்ந்த புழுக்கள் இலைகளை கடித்து உண்ணுவதால் மைய நரம்பு மற்றும் இலை காம்பு மட்டுமே மீதம் இருக்கும்.
  • உண்ட இலைப் பகுதியின் எச்சங்களை பயிர்கள் மற்றும் தரையில் காண இயலும்.
  • பயிரின் குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் குருத்துகள் வளராமல் வளர்ச்சி தடைப்படும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரில் குருத்துப் பகுதி இல்லாமல் தண்டுப் பகுதியிலிருந்து கிளை உருவாகும் ஆனால் இதில் மகசூல் கிடைப்பது மிகவும் அரிது. 
  • பூ மற்றும் கதிர் பகுதியையும் இந்த புழுக்கள் உண்ணும் 

புழுவின் வாழ்க்கை சுழற்சி:

இந்தப் படைப்பு புழு கோடைகாலத்தில் 30 நாட்களிலும் மற்ற பருவத்தில் 60 முதல் 90 நாட்கள் வரையும் வாழும் தன்மை படைத்தது. 


முட்டை: 

தாய் அந்துப் பூச்சிகள் சுமார் 150 முதல் 200 முட்டைகளை கொத்தாக இலை மற்றும் பயிரின் குருத்துப் பகுதியில் இடுகிறது. இதன் வாழ்நாள் சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஒரு தாய் அந்து பூச்சி அதன் வாழ்நாளில் சுமார் 1500 முதல் 2000 முட்டைகளை இடும் திறன் படைத்தது.

இளம் புழுக்கள்: 

முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6 தோல் உரித்தல் நிகழ்வை மேற்கொள்ளும். ஆரம்ப நிலையில் பிச்சை நிற உடம்பையும் கருப்பு நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும். இரண்டாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது இதன் தலை சற்று ஆரஞ்சு நிறத்தில் மாற்றமடையும். மூன்றாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது உடம்பு காவி நிறமாக மாறும். நான்கு முதல் ஆறாவது நிகழ்வின் போது தலைப்பகுதி சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் மாறும் உடம்பு பகுதியில் கோடுகள் மற்றும் புள்ளிகள் உருவாகும். இதன் வாழ்நாள் சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.

கூட்டுப்புழு: 

சிகப்பு நிற கூட்டு புழு பெரும்பான்மையாக மண்ணில் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் வரை காணப்படும். இதன் வாழ்நாள் கோடை பருவத்தில் 8 முதல் 10 நாட்களும் இதர பருவத்தில் 20 முதல் 30 நாட்களும் இருக்கலாம். 

தாய் அந்து பூச்சி:

இது பத்து முதல் 20 நாட்கள் வரை வாழும் தன்மை உடையது.தாய் அந்தப் பூச்சி இரவு நேரத்தில் மட்டுமே முட்டையிடும் இது பழுப்பு நிறத்தில் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக ஒரே வயலில் மக்காச்சோளம்  பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். 
  • கோடை உழவு கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் படைப் புழுவின் முட்டை மற்றும் கூட்டு புழுக்களை அதிக வெப்பநிலை மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி அழிக்கலாம்.
  • குறைந்தது 18 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு ஆற விட வேண்டும்.
  • கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பம் கொட்டைகள் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
  • விதைகள் நடவு செய்வதற்கும் முன்னதாக வரப்பு பயிராக அல்லது பாதுகாப்பு பயிராக ஆமணக்கு, துவரை அவரை, சூரியகாந்தி, தட்டப்பயிறு அல்லது தங்கள் பகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு  மூன்று வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
  • விதை விதைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பரப்பு பயிர் சாகுபடி செய்வது சாலச் சிறந்தது. 
  • விதைகளை Cyantraniliprole என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் இதனால் 25 நாட்கள் வரை புழு தாக்குதல் வராமல் தடுக்கலாம். 
  • ஏக்கருக்கு ஐந்து முதல் 8 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்தி புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிவதுடன் கவர்ந்து அழிக்கலாம்.
  • கண்டிப்பாக விளக்கு பொறி ஏக்கருக்கு ஒரு எண் விதம் வாங்கி பயன்படுத்த வேண்டும். தாய் அந்த பூச்சிகள் இரவில் மட்டுமே முட்டையிடும். 
  • வயலை சுற்றி சிறிதாக குழி வெட்டி அதில் தண்ணீர் மற்றும் மருந்து ஊற்றி வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து புழுக்கள் வயலுக்குள் நுழைவதை தவிர்க்கலாம். 
  • அதேபோன்று ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு எண்கள் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தலாம்.
  • ஒரே நேரத்தில் சாகுபடி செய்ய இருக்கும் மொத்த நிலத்திலும் விதைகளை விதைக்க வேண்டும் இதனால் முழு தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். 
  • பயிரின் குருத்துப் பகுதியில் மணல் அல்லது அடுப்பு சாம்பல் தூவி விடுவதால் ஓரளவிற்கு பூச்சி கடிப்பதை தவிர்க்கலாம்.
  • மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற சதவீதத்தில் கலந்து குருத்துப் பகுதியில் இடலாம்.
  • ஆரம்ப காலத்தில் வயலில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு வைப்பதால் அதில் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும்.
  • பயிர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து தொடர்ச்சியாக Metarhizium anisopliae மற்றும் Beauveria bassiana ஆகியவற்றை லிட்டருக்கு தலா 5 கிராம் கலந்து வாரம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். 
  • தாக்குதல் இல்லாத போது வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், 3 G கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கரைசல் அல்லது கிடைக்க பெறும் இயற்கை வழி தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை தவிர்க்கலாம். 
  • இவை அனைத்தையும் முயற்சி செய்து வர வேண்டும் முடியாத பட்சத்தில் மட்டுமே ரசாயன மருந்து தெளிக்கலாம்... தெளிக்கும் பொழுது தேர்வு செய்யப்படும் மருந்து, நிறுவனம் மற்றும் அதன் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும். 
  • கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். 
  • Emammectin benzoate - 8 கிராம்
  • Novuluron- 10 மில்லி
  • Thiamethaxam+ Lambada cychlothrin - 10 மில்லி 
  • Tetraniprole - 10 மில்லி
  • Chloratranliniprole - 6 மில்லி
  • Thiodicarb - 10 கிராம்
  • Spinotorom - 10 மில்லி
  • Spinosad -5 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 15 ஆகஸ்ட், 2024

பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பப்பாளி இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய பயிராக சாகுபடியில் உள்ளது. பப்பாளி பயிரின் மகசூலை பாதிக்க கூடிய பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் இருந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பீடு மற்றும் பயிர் இறத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதில் பப்பாளி வளைப்புள்ளி வைரஸ் நோய் மிக முக்கியமானது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • பயிரின் வயது, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வைரஸின் வீரிய தன்மை ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 
  • ஆரம்ப நிலையில் இலைகளில் கரும்பு பச்சை நிறத்தில் கொப்புளங்கள் பரவலாக காணப்படும்.
  • நாளடைவில் இலைகளில் பல வண்ண நிறத்தில் புள்ளிகள் காணப்படும். 
  • இலைப் பகுதியில் வளர்ச்சி தடைப்பட்டு, இலைகள் அகற்ற அமைப்புடன் இல்லாமல் நீள்வாக்கில் வளரும். 
  • இலை காம்புகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீண்டு காணப்படும்.
  • இலைகளில் தேமல் அறிகுறிகள் அதிகமாக தென்படும், நாளடைவில் இதில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • இதனால் ஒட்டுமொத்த பயிரின் வளர்ச்சி தடைப்பட்டு குன்றி காணப்படும். 
  • பயிரின் தண்டுப் பகுதி மற்றும் இலை காம்புகளில் நீர்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். 
  • காய்களில் நீர்த்த  வளையங்கள் காணப்படும்.
  • தீவிர நிலையின் போது இலைகள் மற்றும் பழங்கள் ஒழுங்கற்ற வடிவில் மாற்றம் அடைவதை காண இயலும்.

பரவும் விதம்: 

  • அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இளம் செடிகளில் சாற்றை உறிஞ்சி நொடிப்பொழுதில் மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. 
  • தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி மற்றும் பரங்கி வகை பயிர்களிலும் இந்த வகை வைரஸ் நோய் தாக்குதலை காண இயலும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த வகை வைரஸ் விதை மூலமாக பரவும் அபாயம் உள்ளதால் நோய் தாக்குதல் அல்லாத விதைகளை தேர்வு செய்வது மிக முக்கியம். 
  • வளைப்புள்ளி வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்கள் அல்லது வீரிய ஓட்டு ரகங்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்யலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • வெள்ளரி குடும்பத்தில் இருக்கும் மற்ற பயிர்களை பயிர் செய்த வயலில் பப்பாளி நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • நடவு செய்வதற்கு முன்பதாக வயலை சுற்றி இரண்டு அல்லது மூன்று வரிசையில் சோளம் பயிரிடலாம்.
  • அஸ்வினி அதிகம் தென்படும் பருவத்தில் நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • களை மேலாண்மை மிகவும் முக்கியம் ஏனெனில் அஸ்வினி களைச் செடிகளில் உயிர் வாழ்ந்து பயிரைத்தாக்கும்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து நோய் தாக்குதல் உள்ளதா என்பதை காணவும். தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் தருணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தழைச்சத்து அதிகம் கொடுப்பதை தவிர்த்து இதர ஊட்டச்சத்துக்களை இயற்கை வழி முறையில் கொடுத்து பயிர்களை எதிர்ப்பு திறன் உடையதாக மாற்றலாம்.
  • ஆரம்ப நிலையில் இருந்தே சாறு உறிஞ்சி பூச்சியை கட்டுப்படுத்தும் Verticillum lecanii மற்றும் தேமோர் கரைசல், வேப்ப எண்ணெய், அக்னி அஸ்திரம், வசம்பு கரைசல், 3g போன்றவற்றை தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். 
  • ரசாயன முறையில் அஸ்வினியை கட்டுப்படுத்த கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்.
  • Imidacloprid - 10 மில்லி.
  • Thiamethaxam - 10 கிராம்.
  • Monocrotophos- 30-40 மில்லி
  • Profenaphos - 30-40 மில்லி
  • Lambada cychlothrin - 25 milli
  • Dimethoate - 25 மில்லி.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்...

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்:

  • தேசிய அளவில் தென்னை சாகுபடி என்பது பிரதான பயிராக திகழ்கிறது. இந்தியா உலக அளவில் தென்னை சாகுபடியில் மூன்றாவது இடத்தினை எட்டியுள்ளது அதேபோன்று தமிழ்நாடு இந்திய அளவில் தென்னை சாகுபடியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து பயிர் காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்கள்.
  • எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாகுபடியில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தென்னை பனை காப்பீடு திட்டம் (CPIS)

ஆங்கிலத்தில் Coconut Palm Insurance Scheme எனப்படும் இந்தத் திட்டமானது தென்னை மரங்களை இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் பல இதர உடனடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமாகும்.

  • இத்திட்டத்தில் வளமான மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். 
  • சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்ய இயலாது தனிப்பட்ட மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
  • காய்ப்பில் உள்ள மரங்கள் குறைந்தது ஐந்து வளமான காய்களை காய்க்க வேண்டும். 
  • காப்பீடு நிறுவனங்களுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 
  • 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்து தொகையாக Rs. 9 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 60 வயது உடைய மரங்களுக்கு Rs. 14 ஆகும்.
  • ஒருவேளை மரங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது முழுவதும் காய்க்கும் திறனை இழந்து விட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.900 எனவும் 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.1750 எனவும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

Kera Suraksha Insurance Scheme:

இளநீர் அல்லது தென்னங் காய்களை அறுவடை செய்தல், மரத்தை சுத்தப்படுத்துதல், மற்றும் பல பணிகளுக்காக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீடு செய்வதே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆண்டிற்கு ரூபாய் 99 செலுத்த வேண்டும் மீதமுள்ள செலுத்து தொகையான ரூபாய் 299.55 ஐ தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும். 18 முதல் 65 வயது உடைய தென்னை மரம் ஏறுபவர்கள் மட்டுமே இதில் பயனடைய இயலும். காப்பீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். ஊனம் அடைந்தால் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

தென்னையில் சிகப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • தென்னை சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் காணப்பட்டாலும், பூச்சி தாக்குதலினால் மகசூல் மற்றும் பயிர்/மரம் இழப்பீடு காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டு தாக்குதலால் பெரிய அளவில் காணப்படுகிறது.
  • தென்னை, எண்ணெய் பனை, பாக்கு, பேரிச்சை, அலங்கார தாவரங்கள் என 25 மேற்பட்ட பனை வகை பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது. 
  • சிகப்பு கூன் வண்டு இளம் மரங்களில் அதாவது 20 வருடங்களுக்கு குறைவான வாழ்நாள் கொண்ட மரங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
  • இந்தியாவில் தென்னை மற்றும் பாக்கு பயிரில் பிரதான பூச்சியாகவும் அரேபிய நாடுகளில் பேரிச்சை மற்றும் அழகு தாவரங்களில் தாக்கும் பிரதான பூச்சியாக திகழ்கிறது.
  • தாக்குதலின் தீவிரம் மற்றும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொறுத்து சராசரியாக 50% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது.

தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலை: 

  • பராமரிப்பு அல்லாத தோப்புகள் 
  • பாதித்த மரம் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருத்தல்.
  • இளம் மரங்களில் ஏற்படும் காயங்கள். மரத்தின் காயங்களில் இருந்து வெளிவரும் திரவம் பெண் வண்டுக்களை இனப்பெருக்கத்திற்காக கவர்வது போன்று இருப்பதால் பெண் வண்டுக்கள் மரத்தின் பாதித்த இடத்தில் முட்டைகளை இடுகிறது. அது அடித்தண்டு பகுதியாக இருந்தாலும் சரி அல்லது தண்டு அல்லது குருத்துப் பகுதியாக இருந்தாலும் சரி.
  • அடித்தண்டு அல்லது வேர் பகுதியில் ஊடுபயிர் அல்லது களை எடுத்தலின் போது ஏற்படும் காயங்கள் வழியாக.
  • காண்டாமிருக வண்டால் தென்னையில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும்,
  • மேலோட்டமாக அல்லது ஆழம் இல்லாமல் தென்னங் கன்றுகளை நடவு செய்வதால்.
  • சில நேரங்களில் இயற்கையாகவே தண்டுப் பகுதியில் பிளவுகள் காணப்படும் இதன் வழியாகவும் தாக்குதல் அல்லது முட்டை இடுதல் நிகழ்வு நடைபெறலாம்.
  • பொதுவாக சிகப்பு கூன் வண்டுகள் முட்டையிடவோ அல்லது தாக்குதலை ஏற்படுத்தவோ பயிர்களில் காயங்களை உண்டாக்குவதில்லை.

பூச்சி தாக்குதல் பரவும் விதம்:

பாதிக்கப்பட்ட மரங்கள் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருப்பது இதன் பரவுவதற்கான பிரதான காரணமாகும்.

கூன் வண்டு தாக்குதல் இல்லாத தோப்புகளில் இனக்கவர்ச்சி பொறியை வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து நமது தோப்பிற்கு வண்டு தாக்குதல் ஏற்படுகிறது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

முட்டை: 

பெண் வண்டுகள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள், வெடிப்புகள்,பிளவுகள், இலைக் காம்பு மற்றும் குருத்து போன்ற இடத்தில் 200-300 நீள் வட்ட வடிவ வெள்ளை நிற மூட்டைகளை இடுகிறது.

இளம் புழுக்கள்:

சுமார் 3-5 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் பொரித்து இளம் புழுவாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிரப்(Grub) என்று கூறுவார்கள். கால்கள் இல்லாத இளம் புழுக்கள் மரத்தின் மென்மையான திசுக்களை உண்டு சக்கையை வெளியேற்றுகிறது. சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் வரை வளரும்.பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சாறு வடிதல் மற்றும் சக்கை வெளியேறுதலை காண இயலும்.வெள்ளை நிற உடம்பு பகுதியையும் காவி நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும்.

கூட்டு புழு: 

சுமார் 1-3 மாத வயதுடைய இளம் கூட்டு புழுவாக மாறுகிறது. இந்த கூட்டுப் புழுக்கள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தென்படும். 

முதிர்ந்த புழுக்கள்:

15 முதல் 25 நாட்கள் வயதுடைய கூட்டுப் புழுவில் இருந்து பண்டு வெளியேறும்.சிகப்பு நிறத்தில் நீண்ட மூக்குடன் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 6 புள்ளிகள் இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்:


  • மரத்தின் அடித் தண்டு, தண்டுப் பகுதி, இலை காம்பின் அடிப்பகுதி மற்றும் குருத்துப் பகுதியில் சிறிய துவாரங்கள் காணப்படும்.
  • துளைகள் காணப்படும் பகுதியில் இருந்து சாறு  வடிதலை காண இயலும்.
  • இளம் புழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ச்சியாக உண்ணுவதால் துளைகள் வழியாக சக்கை வெளியேறுவதை காணலாம்.
  • தண்டுப் பகுதியை உண்ணுவதால் பயிருக்கு செல்ல வேண்டிய உணவு மற்றும் தண்ணீர் தடைபடுவதால் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை காண இயலும்.
  • குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் கொண்டைப் பகுதி பலம் இழந்து சாய்ந்து விடுகிறது.இலையின் காம்பு பகுதியில் துளையிட்டு உண்பதால் இலைகள் உதிர்வதையும் காணலாம்.
  • அடித்தண்டு பகுதியில் நம் கண்ணிற்கு புலப்படாதவாறு புழுக்கள் உண்ணுவதால் மரம் சாய்ந்து விடுகிறது.
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இதன் தாக்குதல் காணப்பட்டால் புழுக்கள் இறையும் சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னை மரங்களின் அடித் தண்டு, தண்டு பகுதி மற்றும் குருத்து பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • மரங்களின் இளம் பருவத்தில் அதாவது குறைந்தது 10 வருடங்கள் வரை கூன்  வண்டு தாக்குதலில் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • மரத்தில் ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக தார் அல்லது பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய்யை தடவி விட வேண்டும்.
  • மரத்தின் அடித் தண்டு அல்லது தண்டுப் பகுதியில் சாறு வடிதல் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் பூஞ்சான மருந்தை தடவி விடலாம் அல்லது தெளிக்க வேண்டும். 
  • காண்டாமிருக வண்டு தாக்காத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் ஏனெனில் இந்த வண்டு தாக்கிய பகுதிகளில் சிகப்பு கூன் வண்டு முட்டை இட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட மரத்தை வேர்ப்பகுதியோடு முழுமையாக அப்புறப்படுத்தி வெட்டி கொளுத்தி விட வேண்டும் ஏனெனில் வண்டுகளின் இளம் புழுக்கள் அதில் இருக்க வாய்ப்புகள் உண்டு.
  • மேலும் கூன் வண்டு உணவுக்காக மற்றும் இனப் பெருக்கத்திற்காக பாதிக்கப்பட்ட மரத்தையே தேர்வு செய்யும். 
  • தென்னந்தோப்பை களைகள், குப்பைகள் அல்லது காய்ந்த மட்டையில் அதிகம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது புழுக்கள் மறைந்து வாழ வழிவகை செய்யவும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் அல்லது கால்நடைகள் மரங்களை காயப்படுத்தாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
  • தென்னை மரங்களின் அடித் தண்டு பகுதியில் மண், தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை இடாமல் தெளிவாக இருக்கும் படி வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வண்டு தாக்குதலை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
  • காண்டாமிருக வண்டு, குருத்து அழுகல்,வேர் வாடல் போன்ற நோய் அல்லது பூச்சிகள் தாக்காதவாறு பராமரிக்க வேண்டும் இவை அனைத்தும் மறைமுகமாக கூன் வண்டு தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • வண்டு தாக்குதல் ஏற்படாத வண்ணம் பயிரை பாதுகாக்க மாதம் ஒரு முறை இலையின் குருத்து பகுதியில் இடித்த வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு உடன் சம அளவு மணல் கலந்து மரம் ஒன்று இருக்கு அரை கிலோ விதம் இடவேண்டும். 
  • அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலை இடுக்குகளில் நாப்தலின் உருண்டைகளை இட்டு அதன் மேல் கைப்பிடி அளவு மணல் இடவேண்டும்.
  • அல்லது மாதம் ஒருமுறை 1:40 என்ற அளவில் Chlorantraniliprole மருந்தையும் மணலையும் கலந்து மரம் ஒன்று இருக்கு 200 முதல் 300 கிராம் இட வேண்டும்.
  • கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி Imidacloprid என்ற மருந்தை வேர் அல்லது தண்டு வழியாக செலுத்தலாம் இல்லையெனில் குருத்து பகுதியில் உற்ற வேண்டும்.
  • குருத்துப் பகுதியை பாதுகாக்க இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேபோன்று அடித்தண்டு பகுதியை பாதுகாக்க மாதம் ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி Chlorpyriphos கலந்து தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • அல்லது Imidacloprid/Chlorpyriphos/Spinosad மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்டுப் பகுதியில் ஊசியை பயன்படுத்தி செலுத்தலாம்.
  • ஏக்கருக்கு ஒரு எண் சிவப்பு கூன் வண்டு இனக்கவர்ச்சி பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • அதேபோன்று தென்னை ஓலை பொறி தயார் செய்து ஏக்கருக்கு 20 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வாழையில் மொகோ/பாக்டீரியல் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய பணமா வாடல் நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதே போன்று சில அறிகுறிகளை பாக்டீரியா வாடல் நோயும் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வாழை மரங்கள் இறக்கவும் காரணமாக திகழ்கிறது.
  • இந்த பாக்டீரியல் நோயானது வாழை மற்றும் வாழை குடும்பத்தைச் சார்ந்த இதர பயிர்களையும் பொதுவாக தாக்குகிறது.பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டாலும் இளம் பருவ வாழை மரங்களை அதிகம் தாக்குகிறது.

பரவும் விதம்: 

இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் வாயிலாக இதர பயிர், மண் மற்றும் சென்றடைகிறது. அங்கிருந்து வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் அன்றாட பண்ணைப் பணிகள் வாயிலாக இதர பயிர்களுக்கு பரவுகிறது.

நோயின் பிரதான அறிகுறிகள்:


  • அடி இலைகள் வெளிர் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறம் மாறாமலும் இருக்கும்.
  • இலைகளின் காம்பு பகுதியில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்பட்டு செடியை ஒட்டி தொங்கும். நாளடைவில் அடுத்தடுத்த இலைகளுக்கு இவ்விதமான அறிகுறிகள் பரவ ஆரம்பிக்கும்.
  • வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டுக்கள் காணப்படலாம்.வாழை மரத்தின் தண்டுப் பகுதி அல்லது கிழங்கு பகுதியை குறுக்கு நெடுக்காக வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருக்கும். 
  • அதாவது பயிர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துச் செல்லக் கூடிய திசுக்கள் பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுகிறது.
  • ஆண் மலர் பாகங்கள் திடீரென கருப்பு நிறமாக மாறி உதிர ஆரம்பிக்கும். வாழைத்தாரின் காம்பு பகுதியை வெட்டி பார்த்தாலும் கருப்பு நிற மாற்றத்தை காணலாம்.
  • பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய காய்கள் வளைந்து நெளிந்து வெம்பியது போன்ற காட்சி அளிக்கும். 
  • இந்த காய்கள் அல்லது பழங்களை உடைத்துப் பார்த்தால் அழுகிய நிறமாற்றம் இருக்கும். தாரில் உள்ள காய்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்க ஆரம்பிக்கும் 
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் பொழுது செடிகள் இறந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தேர்வு செய்யப்படும் விதைக் கிழங்குகள் தரமானதாகவும் நோயால் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
  • பாக்டீரியல் வாடல் நோய்க்கு எதிராக வளரும் தன்மை கொண்ட பூவன், மோந்தன் போன்ற ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது இரசாயன மருந்துகளை பயன்படுத்தி கிழங்குகளை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக நீர் விட வேண்டும். 
  • பெரும்பான்மையாக இந்த நோயானது நீர்ப்பாசனம் வழியாக பரவுவதால் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 
  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது வயலில் அல்லது பயிர் கழிவுகளில் சுமார் 18 மாதம் முதல் 20 மாதங்கள் வரை உயிருடன் இருப்பதால் பயிர் சுழற்சி அதற்கேற்றவாறு பின்பற்றலாம்.
  • பயிர்களில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அடித் தண்டு மற்றும் தண்டுப் பகுதிகளில்.
  • நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயன மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

உளுந்து சாகுபடியில் தேமல் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • உளுந்து சாகுபடியில் பிரதான நோயாக தேமல் நோய் திகழ்கிறது. கோடை பருவத்தில் அதிகமாக காணப்பட்ட வந்த இந்த தேமல் நோயின் அறிகுறிகள் தற்போது அனைத்து பருவத்திலும் காணப்படுவதால் உளுந்து சாகுபடி கேள்விக்குறியாகிறது.
  • வெள்ளை ஈக்கள் எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சியினால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு இந்த நோயானது பரப்பப்படுகிறது. 
  • பராமரிப்பு இல்லாத உளுந்து பயிரில் சுமார் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனை 

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்:

  • இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட உளுந்து இரகங்களான வம்பன் 8, ஆடுதுறை 5 மற்றும் LBG 904 போன்ற ரகங்களை கோடை பருவத்தில் சாகுபடி செய்யலாம். 
  • நோயை தாங்கி வளரக்கூடிய இதர வம்பன் உளுந்து ரகங்களை மற்ற பருவங்களில் சாகுபடி செய்ய முயற்சி செய்யலாம்.
  • தேமல் நோய் விதை மூலம் பரவாது என பல்வேறு ஆய்வுகள் கூறினாலும் தற்போது இருக்கும் நிலைமையை பார்க்கும் பொழுது விதை மூலமாக பரவுகிறதா என்று அச்சம் எழுகிறது.
  • ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி imidacloprid என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து சிறிது நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்கலாம்.
  • வரப்பு பயிராக மக்காச்சோளம், பருத்தி அல்லது சோளம் போன்ற பயிரை தேர்வு செய்து நடவு செய்யலாம் இது தாக்குதலை மட்டுப்படுத்தும்.
  • ஊடு பயிராக சூரியகாந்தி அல்லது மக்காச்சோளம் போன்ற பயிர்களை உளுந்து நடவு செய்வதற்கு 30 முதல் 40 நாட்களுக்கு முன்னதாக விதைக்க வேண்டும்.
  • பருவத்திற்கு முன்னதாக அல்லது பிந்தைய பருவத்தில் விதைப்பு செய்வதால் 15 சதவீதம் வரை இந்த நோயை கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
  • வயலில் களைகள் அதிகம் வளராமல் அவ்வப்போது களை மேலாண்மை யுக்திகளை பின்பற்ற வேண்டும்.
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் இடும் பொழுது அதனுடன் ஏக்கருக்கு தலா ஒரு கிலோ Bacillus மற்றும் Metarhizium கலந்து ஊட்டமேற்றி இட வேண்டும்.
  • விதைகள் முளைத்த ஏழு நாட்களுக்கு பிறகு வாரம் ஒரு முறை சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தக்கூடிய உயிர் பூச்சிக்கொல்லி அல்லது இயற்கை வழி தயாரிப்பு திரவங்களை பயன்படுத்தி வர வேண்டும். உதாரணத்திற்கு Verticillum lecanii, 3G கரைசல், புகையிலை கரைசல், பத்தில் கரைசல், தேமோர் கரைசல், அரப்பு மோர் கரைசல் மற்றும் பல...
  • வேப்பிலை, புங்கம் அல்லது நொச்சி இலை சாறுகள் வெள்ளை ஈக்கள் பயிர்களை சாற்றை உறிஞ்சுவதை தவிர்ப்பதால் இதனை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அங்கமாக பயன்படுத்தலாம். 
  • அல்லது 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து வர வேண்டும்.
  • சுமார் 40 நாட்கள் வயதுடைய பயிரில் தீவிரமாக தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடியை முழுமையாக அகற்ற வேண்டும்.
  • ஏக்கருக்கு எட்டு எண்கள் மஞ்சள் ஒட்டு பொறி பயிர்களின் கிடை மட்டத்திற்கு கட்ட வேண்டும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மையை பொறுத்தவரையில் தழைச்சத்து மிகவும் குறைத்தும், மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான் மற்றும் மெக்னீசியம் அதிகம் இட வேண்டும் இது நோய் தாக்குதல் பரவுதல் மட்டுப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துகிறது. 
  • போரான் மற்றும் மெக்னீசியம் ஏக்கருக்கு தலா 1 முதல் 1.50 கிலோ வரை அடி உரமாக இடலாம்.
  • வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக தென்படும் தருணத்தில் கீழ்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

  • Acephate
  • Fibronil
  • Acetamaprid 
  • Flonicamid 
  • Afidopyrofen
  • Spirotetramet 
  • Acetamaprid+imidacloprid 
  • Thiamethaxam

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


Recent Posts

Popular Posts