மழைக்காலத்தில் ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை
|தொடர்ச்சியான மழையினால் ஏற்படும் மிகைப்படியான மண் ஈரப்பதம் காரணமாக சாகுபடியில் இருக்கும் பெரும்பான்மையான பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதை நம் குழுவில் உள்ள விவசாயிகளின் பதிவுகளை வைத்தே நாம் காண இயல்கிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள்:
1. ஆக்சிஜன் பற்றாக்குறை:
அதிகப்படியான மண் ஈரப்பதத்தினால் போதுமான காற்றோட்டம் இல்லாததால் வேர்கள் சுவாசிக்க இயலாமல் அழுத்தத்திற்கு உட்பட்டு அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் திறன் குறைவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இது தீவிரமடையும் பொழுது வேர்கள் படிப்படியாக இறக்கவும் நேரிடும். இதனால் பயிர்கள் முற்றிலும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை.
2. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத வண்ணம் மாறுதல்:
மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மண்ணில் காணப்படும் ஊட்டச்சத்துக்களில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உயிர் வாழ்வதால் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மாறும் நிலை ஏற்படுகிறது.
3. ஊட்டச்சத்து இழப்பீடு ஏற்படுதல்:
தொடர்ச்சியான மழை மற்றும் மண் ஈரப்பதத்தினால் சத்துக்கள் அதிகம் இருக்கக்கூடிய மேல் மண் ஒரு இடங்களில் இருந்து மற்றொரு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாலும், தண்ணீர் மண்ணின் ஆழமான பகுதிக்கு செல்லும் பொழுது உடன் ஊட்டச்சத்துக்களையும் எடுத்து செல்வதால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் வீணாகிறது.
4. சல்லி வேர் உற்பத்தி தடை படுதல்:
ஏற்கனவே வேர்கள் சுவாசிக்க காற்று இல்லாத நிலையில் இருப்பதால் அதன் வளர்ச்சியையும், சல்லி வேர்கள் உருவாவதையும் பெரும்பான்மையாக தடை செய்வதால் ஊட்டச்சத்துக்களையும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சல்லி வேர்கள் உற்பத்தி தடைபட்டு அதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்படுகிறது.
5. பயிர்கள் உணவு உற்பத்தியை தடை செய்தல்:
மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் பயிர்களை ஏற்படும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள பயிர்கள் உணவு உற்பத்தி செய்வதை தடை செய்கிறது இதனால் குன்றிய பயிர் வளர்ச்சி, போதுமான பூக்கள் எடுக்காமல் இருத்தல், காய்ப்பு திறன் குறைதல் என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.
6. மண்ணின் கார அமிலத்தன்மை மாறுதல்:
தொடர்ச்சியான மண் ஈரப்பதத்தினால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பினால் மண்ணின் கார அமிலத்தன்மை மாற வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாற்றமடையும் பொழுது ஒரு சில ஊட்டச்சத்துக்கள் மிகப்படியாகவும் மற்ற ஊட்டச்சத்துக்கள் முற்றிலும் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணில் நிலை நிறுத்தப்படும் . இதன் காரணமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் பயிர்களில் அதிகமாக காணப்படும்.
7. மண் இறுக்கம் அடைதல்:
தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது மண் இருக்கும் அடைவதால் வேறு வளர்ச்சி தடைப்படும் மேலும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு மண்ணிலிருந்து வேர்களுக்கு இடம் மாற முடியாமல் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறி காணப்படும்.
ஊட்டச்சத்து பராமரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை:
- முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியாக குறிப்பிட்ட இடைவெளியில் கொடுத்து வர வேண்டும். பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் நீங்கும் வரை.
- பயிர்களில் பனித் தண்ணீர் அல்லது மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காணப்படும் பொழுது இலை வழி தெளிப்பு மேற்கொள்ளக் கூடாது.
- ஊட்டச்சத்துக்களை தெளிக்கும் பொழுது உடன் ஒட்டுப் பசை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தெளித்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இருக்கக் கூடாது. ஒருவேளை மழை பெய்து விட்டால் நாம் தெளித்த ஊட்டச்சத்துக்கள் பயனளிக்காது.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக வாரம் ஒருமுறை ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்துக்காக மீன் அமிலம், பஞ்சகாவியம், ஈயம் கரைசல், கடல்பாசி உரங்கள், தேமோர் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- வேர் பகுதியில் பூஞ்சான தொற்று மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் வேம் அல்லது ஹுமிக் அமிலம் போன்றவற்றை வேர் பகுதியில் கொடுத்து வர வேண்டும்.
- ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டு காரணமாக பயிர்களின் நோய் /பூச்சி எதிர்ப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாத வண்ணம் பயிர்களை பாதுகாக்க வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
undefined 202 undefined
0 Comments:
கருத்துரையிடுக