தக்காளியில் இலை சுருட்டு வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- இலை சுருட்டு நோய் என்று விவசாயிகளால் அழைக்கப்படும் இந்த நோய் வைரஸ் பாதிப்பினால் ஏற்படக் கூடியதாகும். இதனை மஞ்சள் இலை சுருட்டு நோய் என்றும் கூறுவார்கள்.
- கோடை பருவத்தில் தக்காளி பயிரை தாக்கும் பல்வேறு வகை சார்ந்த பூச்சிகளின் மிகவும் முக்கியமானதாக வெள்ளை ஈக்கள் கருதப்படுகிறது.
- வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சாரை உறிஞ்சுவதால் பல்வேறு அறிகுறிகள் தென்படுகிறது அதனுடன் இலை சுருட்டு வைரஸ் நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு விரைந்து கடத்துகிறது.
வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகளின் நிறங்கள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் பச்சை நிறமாக மாற்றம் அடைதல்.
- இலை விளிம்புகள் வெளி மஞ்சள் நிறமாக மாறுதல். இலைகள் தடித்தும், இலை நரம்புகளுக்கு இடையே பச்சை மற்றும் மஞ்சள் நிற மாறுதலும் காணப்படும்.
- இலைகளின் வளர்ச்சி குன்றி இலை சிறிதாக காணப்படுதல்.
- ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மேல்புறம் சுருண்டு காணப்படும்.
- இளம் பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் செடிகள் அதிக பக்க கிளைகளுடன் புதர் போன்று காணப்படும்.
- இதனால் பூ பிடித்தல் மிகவும் குறைந்தும் பூக்கள் உதிர்வதையும் காண இயலும். காய்களின் எண்ணிக்கை குறைவதுடன் அதன் அளவு சிறிதாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- ஒரு சில தனியார் நிறுவன ரகங்கள் வெள்ளை ஈக்களை தாங்கி வளரும் தன்மை உடையது அதை தேர்வு செய்து பயிரிடலாம்.
- வெள்ளை நிற நிலப் போர்வையை பயன்படுத்தி சாகுபடி செய்வதால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.
- கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
- வழக்கத்திற்கு மாறாக பயிர் இடைவெளியை சற்று அதிகப்படுத்த வேண்டும் அப்போதுதான் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை குறைக்கலாம்.
- தக்காளி நாற்றுகள் வாங்கும் போது வைரஸ் தாக்குதல் இல்லை என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.
- ஏக்கருக்கு 12 எண்கள் மஞ்சள் ஒட்டு பொறியை செடிகளின் கிடை மட்டத்திற்கு கட்டுவதால் வெள்ளை ஈக்களை வெகுவாக கவர்ந்து அழிக்கலாம்.
- வெள்ளை ஈக்கள் பாதிக்காத கீரை வகைகள், பயிறு வகைகள் மற்றும் கொடி வகை காய்கறிகள் போன்றவற்றை ஊடு பயிராகவும் வரப்பு பயிராகவும் பயிரிடலாம்.
- நிலத்தைச் சுற்றி அல்லது வயலை சுற்றி பச்சை நிற வலையை பயன்படுத்தி தடுப்புகள் ஏற்படுத்தலாம்.
- ஒருவேளை செடிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு விட்டால் அந்த செடிகளை கண்டிப்பாக நிலத்திலிருந்து அகற்ற வேண்டும்.
- பூச்சி தாக்குதலுக்கு முன்னதாக மீன் அமிலம் தெளித்தல், வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்தல், வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்துதல், தேர்மோர் கரைசல்,3G கரைசல் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.
- வெள்ளை ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்திட இணைப்பில் கண்டுள்ள கட்டுரையில் உள்ள ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.
https://www.xn--2023-usl0k8ahcj0im72acc.com/2023/12/blog-post_14.html
0 Comments:
கருத்துரையிடுக