கத்தரியில் ஃபோமோப்சிஸ்(Phomopsis) கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|நாம் பிரதானமாக சாகுபடி செய்யும் கத்தரி பயிரில் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகிறது. அதில் மிகவும் முக்கியமான பூஞ்சான நோயான ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. உலகம் முழுவதும் காணப்படும் இந்த நோய் சுமார் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இந்த நோய் பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கும் என்பதால் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:
- தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு.
- அதிக காற்று ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை.
- பிரதானமாக மழைப்பொழிவு மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்:
நாற்றங்கால் அறிகுறிகள்:
- இந்த நோய் விதை மூலம் பரவும் என்பதால் விதை முளைக்கும் போதே அறிகுறிகளை ஏற்படுத்தும்.
- இந்த Phomopsis நோய் நாற்றுகளின் தண்டுப் பகுதியை பாதிப்பதால் தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
- இதனால் தரைக்கு மேலே உள்ள பகுதியில் நாற்றுகள் முறிந்து இறக்கும்.
- அதேபோன்று நாற்றுகளின் இலையில் சிறிய புள்ளிகள் தோன்றும். இது நாளடைவில் பெருக்கமடைந்து இலைகள் உதிரும்.
வயலில் காணப்படும் அறிகுறிகள்:
- சிறிய கருப்பு முதல் பழுப்பு நிற பள்ளத்துடன் கூடிய புள்ளிகள் காய்களில் காணப்படும்.
- இது நாளடைவில் பெருக்குமடைந்து புள்ளிகளின் ஓரங்கள் சற்று அழுகியது போன்று காணப்படும்.
- இதனால் காய்கள் சுருக்கமாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் தோன்றலாம்.
- இலை மற்றும் தண்டுப் பகுதியில் நீள் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும்.
- மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட காய் அல்லது இலைகளில் கருப்பு நிற பூஞ்சானத்தை காண இயலும்.
- கடைசி நிலையாக காய்களில் அழுகல் தென்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- இந்த பூஞ்சான நோய் விதை மூலம் பரவும் அபாயம் உள்ளதால், தரமான விதைகளை தேர்வு செய்து அதனை 50 டிகிரி வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் 15 முதல் 25 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
- அல்லது Trichoderma மற்றும் Pseudomonas பயன்படுத்தி விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
- இந்த பூஞ்சை பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மற்றும் மண்ணில் சுமார் ஒரு வருடம் கூட உயிர் வாழும் திறன் உடையதால், பயிர் கழிவுகளை முழுமையாக வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
- தொடர்ச்சியாக ஒரே வயலில் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
- இந்த தாங்கி வளரக்கூடிய ரகங்கள் அல்லது வீரிய விட்டு ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
- அதிக அளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்தால் மகசூல் குறைவதை தவிர்க்கலாம்.
- பயிரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உருவாகும் பூஞ்சைகளால், அந்த இடத்தில் வளவளப்பாக இருப்பதால் மருந்து தெளிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்துகள் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று விடும்.
- உயிர் பூஞ்சை கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தும் பொழுது குறைவான அளவு மருந்துடன் ஒட்டுப் பசை சேர்த்து செடி முழுவதும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
- நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
- Carbendazim
- Carbendazim + Mancozeb
- Copper Oxychloride
- Propiconazole
- Carboxin + Thiram
- Metalaxyl + Mancozeb
- Zineb
இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக