மண் வளமே மனித வளம் என்பது நிதர்சனமான கூற்று இதில் எவ்வித மாற்றக் கருத்தும் கிடையாது. கைப்பிடி மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் வாழ்கிறது. பொதுவாக இவற்றை நன்மை மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிரிகள் என இரண்டாக பிரிக்கலாம்.
முறையற்ற உர மேலாண்மை யுக்திகள், ரசாயன மருந்து பயன்பாடு, தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் கார அமிலத்தில் மாறு படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
விவசாயத்தில் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளில் பயன்கள் என்னவென்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்தல்:
அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோபாக்டர் போன்ற நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நைட்ரஜனை மாற்றி தலைச்சத்தாக மண்ணில் நிலை நிறுத்தி தருகிறது.
இதனால் 20% தழைச்சத்து தேவை இயற்கையாகவே நாம் பூர்த்தி செய்து விடலாம்.
இதேபோன்று மண்ணில் பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் இருக்கும் மணிச்சத்தை பயிர்களுக்கு ஏற்றவாறு கிடைக்கச் செய்வதும் நன்மை செய்யும் நுண்ணுயிரி யான பாஸ்போபாக்டீரியா ஆகும்.
இந்த பாக்டீரியா மண்ணில் பல்கி பெருகும் பொழுது இதனால் வெளியிடப்படும் ஆர்கானிக் ஆசிட் மூலக்கூறுகள் மண்ணில் அலுமினியம், இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்களுடன் பிணைந்து இருக்கும் மணி சத்தை பிரித்து பயிர்களுக்கு கொடுக்கிறது. இதன் மூலம் 20 முதல் 40 சதவீதம் வரை மணிச்சத்து தேவையை வெகுவாக குறைக்கலாம்.
வேம் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் பயிர்களில் காணப்படும் வேர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், அதன் நீளம் மற்றும் சல்லி வேர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பதால் பயிர்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும் திறன் மேம்படுகிறது.
இது மட்டும் இன்றி வறட்சியை தாங்கி வளர்தல் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளர்தல் போன்ற பண்புகளும் காணப்படும்.
நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:
மண்ணில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்வேறு நோய் பூஞ்சை மற்றும் பூச்சி காரணிகளை அழித்து பயிர்களை பாதுகாக்கிறது.
நுண்ணுயிரிகள் நோய் காரணிகளுக்கு எதிராக இடம் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்க விடாமல் செய்வதாலும்,
தீமை செய்யும் நோய் காரணிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு காரணிகளை உற்பத்தி செய்வதன் மூலமாகவும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.
இதை தவிர இதை மறைமுகமாக பயிர்களில் நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்தியும் உதவி புரிகிறது.
வளமான மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் நுண்ணுயிரிகளினால் சுமார் 15% முதல் 25% வரை நோய் தாக்குதல் குறைந்து காணப்படும்.
மண் தன்மையை மேம்படுத்துதல் ..
பயிர்களுடன் வேர்ப்பகுதியில் இணைந்து வாழும் வேம் போன்ற மைக் கோரைசா போன்ற நுண்ணுயிரிகள் ஒரு சில திரவங்களை வெளியிடுவதன் மூலம் மண் தன்மை மேம்படுகிறது.
இதன் மூலம் மண்ணின் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.
மண்ணிற்கு பொலபொலப்பு தன்மையை கொடுத்து வேறு வளர்ச்சி அதிகப்படுத்தி ஒட்டுமொத்த பயிர் வளர்ச்சி மேம்படுத்தும்.
மக்க வைத்தல்:
மண்ணில் காணப்படும் இயற்கை கழிவுகளை அல்லது பயிர்க் கழிவுகளை மக்க வைக்கிறது.
இதனால் மண்ணில் கரிம கார்பன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கிறது.
இது மட்டும் இன்றி மண் கட்டிகளை உடைப்பதன் மூலம் பயிர் வளர்ச்சி நன்றாக காணப்படும்.
இதர பணிகள்:
உயிர் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்பொழுது ரசாயன பயன்பாடு வெகுவாக குறைகிறது இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறைகிறது மேலும் நிலத்தடி நீர் ரசாயனம் கலக்காமல் பாதுகாக்கப்படும்.
தொடர்ச்சியான பயன்பாட்டின் பொழுது மண்ணில் இருக்கக்கூடிய கன உலோகங்களை படிப்படியாக கரைத்து மண்ணை விட்டு நீக்குகிறது.
நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளர்ச்சி உருக்கிகளையும் பயிர்களுக்கு கொடுக்கிறது
மண்ணின் கார அமில தன்மையை நடுநிலை படுத்துவதற்கு உதவி புரிகிறது.
அதிக மணல் தன்மையுடைய மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வது கடினமாகும். இது மட்டுமின்றி மண்ணில் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் மண்ணுக்கு அடியில் சென்று பயிர்களுக்கு எட்டாத வண்ணம் சென்றுவிடும்.
தண்ணீரும் அதே போன்று தான் ஆழமாக சென்று விடுவதால் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது இதனால் மீண்டும் மீண்டும் அதாவது குறுகிய இடைவெளியில் நாம் நீர் பாய்ச்சல் வேண்டிய தேவை இருக்கும். எனவே இந்த மண்ணை மேம்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வர கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
வழிமுறைகள்: மக்கிய உரங்களை இடுதல்:
இங்கு மக்கிய உரங்கள் என்பது கால்நடை தொழு உரம், பண்ணை கழிவு உரம், மண்புழு உரம் மற்றும் கிடைக்கப்பெறும் மட்கு பொருளை பயன்படுத்தலாம்.
இவ்வாறு இடும் பொழுது மணல் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைவதால் இவை எளிதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்கிறது.
இதன் மூலம் பயிர்களுக்கு போதுமான அளவு சத்துக்களும் நீரும் கிடைக்கப் பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்பட்டு வேர்கள் மண்ணை இறுக பற்றி நன்கு வளரும்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பயிர்களின் வேர் அமைப்புக்கு ஏற்றவாறு தொழு உரங்களை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக இடவேண்டும்.
இயற்கை நிலப் போர்வை அமைத்தல்:
பண்ணையில் கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் நிலப் போர்வை அமைக்கலாம். உதாரணத்திற்கு வைக்கோல், பயிர் கழிவுகள், தீவனக் கழிவுகள், களைகள் மற்றும் இதர.
இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆவியாகி வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவர் தடுக்கப்படும் பொழுது பயிர்கள் இதனை எடுத்துக் கொள்ளப் போதிய நேரம் இருக்கும்.
இது மட்டுமின்றி மண் அரிப்பு தடுக்கப்படும் மற்றும் களைகள் முளைப்பது வெகுவாக குறையும்.
நாளடைவில் இந்த இயற்கை வழி நிலப் போர்வை படிப்படியாக மக்கும் பொழுது ஊட்டச்சத்துக்கள் மண்ணில் அதிகரிக்கும்.
இதர மண்ணை இடுதல்:
மணல் பாங்கான மண் தன்மையை மேம்படுத்த மிதமான அளவு கருப்பு மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு உழவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.
அளவுக்கு அதிகமாக இடக்கூடாது இது மண்ணை மேலும் இறுக செய்துவிடும்.
பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்தல்:
பசுந்தாள் பயிர்களை மிக நெருக்கமாக சாகுபடி செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இதன் வேர்கள் மேல் மண்ணை மிக இறுக்கமாக பிடித்து வைத்து இருப்பதுடன் தழைச்சத்து உரத்தை நிலை நிறுத்திக் கொடுக்கும்.
இவற்றை மடக்கி உழவு செய்வதால் அதிக அளவு பயிர் கழிவுகள் மண்ணில் மக்குவதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் மேம்படும்.
உர மேலாண்மை:
நீரில் கரையும் உரங்களை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுக்கலாம்.
அல்லது ஊட்டச்சத்துக்களை பொறுமையாக கரையை செய்து பயிர்களுக்கு கொடுக்கும் உரங்களை பயன்படுத்தலாம்.
தேவைக்கு ஏற்ப இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளித்து வர வேண்டும்.
நீர் மேலாண்மை:
வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்க்க வேண்டும். இது நீர் தேவையை அதிகரிக்கும்.
சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.