google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

 

நீர் மேலாண்மை

        தென்னை சாகுபடியில் நீர் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தரவும், மரங்கள் திடகாத்திரமாக இருக்கவும், வெப்பத்தை சமநிலை செய்திடவும் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் தேவையான நீரை கொடுத்து வருவதன் மூலம் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை காண இயலும்.  தமிழ்நாட்டில் பொதுவாக வெள்ள நீர் பாசனம், வட்டப்பாத்தி மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது.

வெள்ளநீர் பாசனமுறை

  • இம்முறை நீர் பாசனத்தால் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் காணப்படுவதால், வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லப்படுவதால் பயிர்களுக்கு கிடைக்காமல் சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிக தண்ணீர் விடுவதால் ஊட்டச்சத்து வேர்கள் அழுக நேரிடலாம்.
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக  அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தொற்று ஏற்படலாம்.
  • அதிக தண்ணீர் கொடுப்பதன் காரணமாக இளநீரின் சுவை சற்று குறைந்தும்  கொப்பரைத் தேங்காயின் எண்ணெய் அளவு குறைந்தும் காணப்படலாம்.

வட்டப்பாத்தி முறை

          மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆரத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் நீர் விடப்படுகிறது.  இம்முறையில் சுமார் 400 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது சுமார் 7 நாட்கள் வரை போதுமானதாகும்.  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மணற்பாங்கான மண்ணில் நீர் குறைவாகவும், குறைவான இடைவெளியிலும், களிமண் பூமியில் அதிக இடைவெளியிலும் நீர் பாய்ச்சலாம்.  வட்டப்பாத்தி முறையானது வெள்ளநீர் பாசனமுறையை விட சிறந்தது என்றாலும், உரங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரினால் அடித்து செல்லப்படலாம்.  மேலும், மண் மற்றும் நீர் மூலமாக பரவும் தீமை செய்யும் பூஞ்சைகள் இம்முறையில் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சொட்டு நீர் பாசனமுறை

        சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் விடுவதால் அதிக அளவு தண்ணீரை சேமிப்பதுடன் வறட்சி காலத்திலும் நல்ல பயன்பெறலாம்.  ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றக்கூடிய அமைப்புடைய குழாய்களை பயன்படுத்தி தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 40 முதல் 60 லிட்டர் வரை தண்ணீர் விட வேண்டும்.  கோடைப்பருவத்தில் இன்னும் சற்று அதிகமான நீர் தேவைப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் வட்டப்பாத்தியின் 35 முதல் 40 சதவிகித பரப்பளவை மட்டுமே நனைப்பதால் வேர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.  

நீரியில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனம் வழியாக பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 40 சதவிகிதம் வரை குறைத்து பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Pages