google-site-verification: googled5cb964f606e7b2f.html கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • கோரை புல்லின் பல்லாண்டு வளரும் இயல்பு, அதன் பன்முகத்தன்மை, அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், மிக வேகமான இனப்பெருக்கம், மண்ணில் ஆழமான பகுதி வரை செல்லும் கிழங்குகள், அதிக நாட்கள் உறக்கத்தில் இருக்கும் கிழங்குகள் மற்றும் அதன் வேர்களின் Allelopathy தன்மை என பல்வேறு காரணங்களால் விவசாயிகளுக்கு பெரிய இடையூறாக திகழ்வது தான் இந்த கோரை புல்கள்/களைகள். 
  • வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக காணப்படுகிறது. கோரை களையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சுமார் 20 முதல் 90 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • உன்னை கட்டுப்படுத்த ரசாயன களைக் கொல்லிகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் இல்லை எனில் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவது உடன் மண் மலட்டுத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • முதலாவதாக கோரை அதிகம் காணப்படும் வயல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை நெல் சாகுபடி செய்வதால் கோரைகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். தொடர்ச்சியாக ஈரப்பதம் மற்றும் நீர் தேங்கி இருப்பதால் சங்கிலி போன்ற அமைப்புடைய அதன் வேர் பகுதி மற்றும் கிழங்குகள் அழுகி சிதைவதால் இதன் இனப்பெருக்கம் தடை செய்யப்பட்டு கோரைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கோடை காலத்தில் கோரை புல் அதிகம் காணப்படும் நிலத்தை ஆழமாக உழவு செய்வதால் அதன் கிழங்குகள் மண்ணின் மேற்பகுதிக்கு வருவதால் அதிக சூரிய மற்றும் மண் வெப்பத்தால் அதன் கிழங்குகள் உலர்ந்து/காய்ந்து வெடிப்பதால் ஓரளவிற்கு கோரையை கட்டுப்படுத்தலாம். இந்த முறையை பின்பற்ற விரும்பினால் முதல் உழவு செய்து 40-45 நாட்கள் கழித்து மீண்டும் அதே போன்று உழவு செய்து கோரை கிழங்குகளை அழிக்க வேண்டும். 
  • கோரையனாது அதிக சூரிய வெப்பத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வளரும் தன்மையை பெற்றது. எனவே இதற்கு சூரிய ஒளி கிடைக்காதவாறு நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்வதால் இதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்தலாம்.
  • மண்ணில் புதைந்து கிடக்கும் கோரை கிழங்குகள் சுமார் 30 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெப்ப நிலை மற்றும் மிதமான ஈரப்பதம் நிலவும் போது உறக்க நிலையில் இருந்து எழுந்து துளிர் விட ஆரம்பிக்கும் அதற்கு ஏற்றவாறு நாம் பயிரிடும் தேதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • வயலில் ஏதேனும் ஒரு சில இடத்தில் மட்டும் கோரை செடிகள் இருக்கும் போது அதனை வேரோடு கை அல்லது மம்முட்டி வைத்து அகற்ற முயற்சிக்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு மட்டும் மருந்துகள் தெளித்து அதனை பரவாமல் தடுப்பது மிக மிக முக்கியம்.
  • பன்றிகள் மற்றும் கோழிகள் கோரை கிழங்குகளை சிதைத்து உண்ணக்கூடிய திறன் படைத்தது வாய்ப்புகள் இருந்தால் இவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • நிழற்பாங்கான இடங்களில் இதன் வளர்ச்சி குறைவாக தான் காணப்படும். எனவே கோரைகள் அதிகம் உள்ள வயல்களில் வேகமாக வளரக்கூடிய சோளம், சனப்பை, தக்கை பூண்டு, அவரை, சர்க்கரைவள்ளி, தட்டைப்பயிறு போன்ற பயிர்கள் பயிரிடுவதால் இதன் நிழல் காரணமாக கோரைகளுக்கு அதிக வெப்பம் கிடைக்க பெறாமல் அதன் இனப்பெருக்கம் வெகுவாக குறைகிறது.
  • இந்த வகை பயிர்களை வழக்கத்திற்கு சற்று அதிகமான விதை அளவு பயன்படுத்தி நெருக்கமாக விதைப்பதால் இதன் வேர்கள் கோரை கிழங்குகளை உடைப்பதால் அதன் பெருக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இது மட்டுமன்றி இந்த வகை பயிர்களின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் ஒரு வகை திரவம் பல்வேறு வகையான களைகளை கட்டுப்படுத்தும்.
  • ரசாயன முறையை பின்பற்றும் போது ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Glyphosate 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் சுமார் ஆறு கிலோ சல்பேட் மற்றும் தேவையான அளவு 2,4 D ஆகியவை கலந்து வயலில் நல்ல ஈரப்பதம் இருக்கும்போது தெளிப்பதால் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இதன் தொல்லைகள் நீங்கும்.
  • கோரைகளை மட்டும் தாக்கி ஊடுருவி அதன் கிழங்கு பகுதி வரை சென்று தாக்கக்கூடிய ரசாயன களைக்கொல்லியான Halosufuron Methyl என்ற மருந்து உள்ளது. இதனை 10 லிட்டர் தண்ணீருக்கு 2.4 கிராம் என்ற அளவில் கலந்து வயலில் நல்ல ஈரப்பதம் இருக்கும் போது ஒட்டுப் பசை கலந்து ஒரு ஏக்கருக்கு சுமார் 150 லிருந்து 180 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.
  • இந்த மருந்தானது செடிகளின் ஊடுருவி கிழங்குகளை சென்றடைய சுமார் 5 லிருந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்வதால் ஒரு வாரம் கழித்து தான் செடிகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.
  • ஒரு மாத இடைவெளியில் இந்த மருந்தை இரண்டு முறை பயன்படுத்துவதால் பெரும்பான்மையான கோரைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி விடலாம்.

கோரை களை மேலாண்மையில் நாம் என்ன செய்யக்கூடாது:

  • எக்காரணத்தைக் கொண்டும் கோரைகள் நம் நிலத்தில் இருக்கும் போது பூ பிடிக்க அனுமதிக்க கூடாது.
  • களைகளை கை மூலமாக அல்லது கை கொத்தி மூலமாகவோ அகற்ற முயற்சிக்கும் போது அதன் வேர்கள் அல்லது கிழங்குகளை அரைகுறையாக அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.
  • அகற்றப்படும் கோரைகளின் வேர் மற்றும் கிழக்கு பகுதியை அதே நிலத்தில் இட்டு உழவு செய்ய வேண்டாம்.

  • கோரையை அழிக்க உப்பு கலந்து தெளிக்கும் முறையும் சில நேரம் பின்பற்றப்படுகிறது அதை தவிர்க்கவும்.

இது போன்ற பயனுள்ள வேளாண் தகவல் மற்றும் அன்றாட விவசாய பணிகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Pages