google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: மற்றவைகள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 டிசம்பர், 2024

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
  • தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.

  • அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
  • பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
  • காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை,  கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
  • மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
  • நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
  • சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
  • பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
  • தீவன பயிர்கள்
  • கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா,  மற்றும் இதர

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும். 

  • கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம். 
  • எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 10 டிசம்பர், 2024

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை  மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். 

  • பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல். 
  • அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
  • மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது. 
  • ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன்  எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
  • காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். 
  • பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
  • காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
  • இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
  • காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம். 
  • காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
  • அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு. 
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
  • அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது  இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம். 
  • சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு. 
  • இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 15 அக்டோபர், 2024

மழை தருணத்தில் தக்காளி சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை கவனிக்கப்பட வேண்டியவை...

முன்னுரை: 

நெல் போன்ற ஒரு சில பயிர்களை தவிர நாம் சாகுபடி செய்யும் அநேக  பயிர்களுக்கு மண் பகுதியில் ஈரப்பதமும் காற்றோட்டமும் சரிவிகித அடிப்படையில் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் சீரான வளர்ச்சி மற்றும் மகசூல் பெற இயலும். இதேபோன்று பயிரின் மண் பகுதிக்கு மேல் இருக்கும் இலை பகுதியில் போதுமான அளவு வெப்பநிலையும் திகழ வேண்டும்.தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது தக்காளி சாகுபடியில் ஏற்படும் சில சவால்களை விரிவாக பார்ப்போம். 

நாற்றாங்காலில் ஏற்படும் சவால்கள்:

  • பாத்தியில் விதைக்கப்பட்டுள்ள விதைகளில் முளைப்புத்திறன் குறைபாடு, வேர் அழுகல், தண்டு அழுகல், பேன் மற்றும் வண்டுகளால் ஏற்படும் அறிகுறிகள் காணப்படலாம். 
  • நன்கு உயரமான மேட்டுப்பாத்தி அமைத்து அதில் போதுமான அளவு மக்கிய தொழு உரம், டிரைக்கோடெர்மா, பாஸ்போபாக்டீரியா மற்றும்   ஹீயூமிக் அமிலம் இட வேண்டும்.
  • விதைகளை சற்று ஆழமாக விதைக்க  வேண்டும். 
  • மேட்டுபபாத்தி மழையால் பாதிக்கப்படாத அளவு தார்ப்பாய் உரிய உயரத்தில் கட்ட வேண்டும். இல்லையெனில் மேட்டுப்பாத்தியில் மக்கிய வைக்கோல்கள் 1இன்ச்  உயரத்திற்கு இட வேண்டும்.
  • விதைகள் முளைக்கும் போதும் முளைத்த பிறகும் வேர் மற்றும் கழுத்து அழுகல் நோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் வாரம் ஒருமுறை  டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை தலா 50 மில்லி நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.
  • பேன் மற்றும் வண்டு தாக்குதல் காணப்படும் பொழுது மெட்டாரைசியம் நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.

வயலில் ஏற்படும் சவால்கள்:
பயிர் வளர்ச்சி: 

  • தொடர்ச்சியான மழை அல்லது மண் ஈரப்பதத்தினால் வேர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாமல் குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • போதுமான பகல் வெப்பநிலை இல்லாத காரணத்தால் இலைகளினால் உணவு உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டு காணப்படாலாம்.
  • இதனால் தக்காளி பயிரில் பிரதானமாக தழைச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், போரான் மற்றும் கால்சியம் பற்றாக்குறை காணப்படும்.
  • எனவே, மழைத் தருணத்தில் கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி இலை வழியாக பேரூட்ட  மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை இட வேண்டும்.
  • பயிர்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு நொதிகளால் நடைபெறுகிறது.
  • வெப்பநிலை பற்றாக்குறை ஏற்படும் பொழுது பயிர்களில் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி தடைபடுவதால் அதனையும் நாம் இலை வழியாக கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் வாரம் ஒரு முறை இலை வழியாக ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கி  தெளிப்பது சிறந்தது.

பூ பூத்தல் மற்றும் காய் பிடித்தல்:
  • தக்காளி வயலில் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நின்றால் அல்லது தொடர்ச்சியான ஈரப்பதம்  இருந்தால் வேர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாமல் ஊட்டச்சத்துக்களை கிரகித்து பயிர்களுக்கு எடுத்து தருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பூ பிடித்தல் 27 முதல் 25% வரை குறையும். 
  • பகல் மற்றும் இரவு நேரத்தில் திகழும் குறைந்த வெப்பநிலை காரணமாக பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் பூ உதிர்வு அதிகம் காணப்படும். 
  • பூக்கள் விரிந்த உடன் அதில் ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும் தருணத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோயினால் பூக்கள் சற்று கருகி அதிக அளவு உதிரும்.
  • இவை அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய பூக்கள் காயாக மாற வாய்ப்புகள் உள்ளது. தக்காளி பூக்கள் தன் மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் நடைபெறுவதால் பூச்சி அல்லது காற்றுகள் பெரிய அளவு தேவைப்படாது.
  • அதே போன்று வெப்பநிலை குறைபாடு பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி தடை படுவதால் அதை நாம் செயற்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே பூப்பிடித்தலை அதிகப்படுத்த இயலும்.
  • மண்ணில் அதிக ஈரப்பதம் திகழும் பொழுது தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவ்வாறு நாம் இடம் குறைந்தபட்ச உரம் கூட பயிரின் இலை வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் பூ பூத்தலை தாமதப்படுத்தும்.

நோய்கள்:
வேர் மற்றும் கழுத்து அழுகல்:

  • இறுக்கமான மற்றும் வடிகால் வசதி இல்லாத வயலில் இந்த நோய் தொடர்ச்சியாக காணப்படும்.
  • மண்ணின் கிடைமட்டத்தில் உள்ள தண்டுப்பகுதியில் நீர்த்த புண்கள் தோன்றி நாளடைவில் செடிகள் முறிந்து இறந்து விடும்.
  • இந்த நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயிர்கள் துவண்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதலையும் காண இயலும்.

பாக்டீரியா வாடல் நோய்:

  • அதிக மழைப்பொழிவு மற்றும் காற்று ஈரப்பதம் திகழும் பொழுது இந்த பாக்டீரியா வாடல் நோய் அதிகம் தென்படும்.
  • நன்கு வளர்ந்த பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் மொத்த பயிலும் துவண்டு காணப்படும். 

  • இரண்டு மூன்று தினங்களில் பயிர்கள் பச்சையாக இருக்கும் பொழுது வாடி இறந்துவிடும். 
  • இந்த நோய் நீர் வழியாக பரவும் அபாயம் உள்ளதால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு தண்ணீர் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிட்டு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பேசில்லஸ் சப்டில்லிஸ் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

  • வாடல் நோய்: 

  • பாக்டீரியா வாடல் நோய் போன்றே பூஞ்சைகளாலும் வாடல் நோய் தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஏற்படும். இந்த நோய் தாக்குதல் பரவாமல் இருக்க ட்ரைகோடெர்மா விரிடி தெளிப்பு வாயிலாகவும் பாசன நீர் வாயிலாகவும் கொடுக்க வேண்டும். 

  • இலைப்புள்ளி நோய்கள்: 

  • பருவ மழையின் போது இலை புள்ளி நோய்களும் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதில் பல வகைகள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • காய் அல்லது பழங்களில் ஏற்படும் மாற்றங்கள்:

  • பழம் அல்லது காய்களில் மழைக்காலங்களில் பாக்டீரியா தாக்குதலால்  புள்ளிகள் காணப்படும்.

  • வேர்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததாலும் அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களால் காய்கள் ஒழுங்கற்ற முறையில் பழுக்கும். 

  • ஒழுங்கற்ற வடிவில் காய்கள் தென்படும். 

  • காய் அல்லது பழங்களில் வெடிப்புகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் காணப்படும் இது தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பாகும். 
    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 19 செப்டம்பர், 2024

பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை....

  • பருவ மழைக்கு முன்னதாக சட்டி கலப்பை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்வதன் மூலம் நிலத்தின் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை கொத்து கலப்பை பயன்படுத்தி உழவு செய்து கட்டிகளை நன்றாக தூளாக்கி பின்னர் தேவையின் அடிப்படையில் ரோட்டாவேட்டர் பயன்படுத்தலாம்.
  • நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யும் பொழுது மேட்டுப்பாத்தி அல்லது தகுந்த இடைவெளியில் பார்கள் அமைத்து விதைப்பு மேற்கொள்ளலாம். 
  • கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் /ஒரு டன் மண்புழு உரம், தேவையின் அடிப்படையில் அதனுடன் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகள் கலந்து கொள்ளலாம்.
  • ரசாயன உரங்கள் இடவேண்டும் என்றால் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி, பொட்டாஸ் 15 முதல் 20 கிலோ, பருத்தி நுண்ணூட்ட உரம் 5-8 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
  • நாம் பொதுவாக B.t வகை வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்வதால் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படும்  உர அளவான தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 60 கிலோ முதலியவற்றை ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு  இடலாம். 
  • மண்ணில் நல்ல ஈரப்பதம் இருக்கும் பொழுது 60-90 X 30-45 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளலாம். பருத்தி ரகங்களின் முளைப்பு திறன் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 
  • நீர் வசதி இல்லாமல் காய்ச்சலில் விதைப்பு மேற்கொள்ளும் பொழுது மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கண்டிப்பாக இடவேண்டும். 
  • பருத்தியில் களை மேலாண்மை மிகவும் சவாலானதாக திகழ்வதால், இதில் அதிக கவனம் தேவை. விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளியில் களை முளைப்பதற்கு முன்னதாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்து விடவும். உதாரணத்திற்கு Butachlor, Pendimethalin, Alachlor போன்றவற்றை பரிந்துரைக்கப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிரில் தெளிக்க கூடிய களைக்கொல்லிகள் பல இருந்தாலும் அதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட சில களைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக திகழ்கிறது எனவே அதனை முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். 
  • விதைத்த ஏழாம் நாள் முளைப்புத் தவறிய இடங்களில் மீண்டும் விதையை விதைக்கலாம். 
  • நீர் நிர்வாகத்தை பொறுத்தவரையில் உயிர் தண்ணீர், அதைத் தாண்டி பூக்கும் தருணத்திலும், காய்க்கும் மற்றும் காய்கள் பெருக்குமடையும் தருணத்தில் நல்ல ஈரப்பதம் வேர்களுக்கு கிடைத்தால் மகசூலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சலாம். 
  • மண்ணின் அமைப்பு மற்றும் தன்மையை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச நீர் பாய்ச்சினால் பருத்தியில் அதிக அளவு மகசூல் எதிர்பார்க்கலாம். 
  • பயிரின் 40 ஆம் நாள் நுனிப்பகுதியை கிள்ளிவிட்டு தேவையான வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் அதிக கிளை பிரிவதை காணலாம். வீரிய ஒட்டு ரகம் என்பதால் நல்ல கிளை பிரியும் திறன் எதிர்பார்க்கலாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுத்தால். 
  • நுனியை கிள்ளிவிட்டு NAA/Cytocyme போன்ற வளர்ச்சி ஊக்கியை பரிந்துரை செய்த அளவில் ஏழு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் அதிக காய்ப்பு திறன் எதிர்பார்க்கலாம் இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும். 
  • பூக்கும் தருணத்தில் பயிரில் வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் பராமரிப்பது இன்றி அமையாததாகும். இந்த தருணத்தில் பொதுவாக மெக்னீசியம் குறைபாடு காணப்படும். இதனால் இலைகள் விறைப்புத் தன்மையுடனும், இலையின் விளிம்புகள் சிகப்பு நிறத்தில் மாற்றம் அடைவதையும் காண இயலும். பொதுவாக அதிக அளவு பொட்டாசியம் சத்து கொடுக்கும் பொழுது இதை நாம் எதிர்பார்க்கலாம். இது கடந்த சில வருடங்களாக தென்படுகிறது எனவே அடி உரமாகவோ அல்லது இடைவெளியாகவோ போதுமான அளவு மெக்னீசியம் தெளிக்கலாம். 

  • அதேபோன்று போரான் மற்றும் துத்தநாகம் பற்றாக்குறைகள் தென்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு உரிய தருணத்தில் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இழை வழியாக நாம் தெளிக்கும் பொழுது வளர்ச்சி ஊகிகள் கலந்து தெளிப்பதால் பூ /சப்பைகள் உதிர்வதை வெகுவாக குறைக்கலாம். 
  • முதல் அடி உரம் 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் செடிக்கு அருகில் வைத்து நீர் விட வேண்டும். அப்பொழுது மணிச்சத்தும் பொட்டாசியம் சத்தும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஏக்கருக்கு தலா 40 கிலோ இடலாம். இடைப்பட்ட காலத்தில் நீர் வசதி இருந்தால் அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் NPK consortia வேர்ப்பகுதிகளுக்கு கொடுத்தால் அடியில் இடப்பட்ட உரங்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும். 
  • அடுத்த கட்ட மேலூரம் 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.அப்பொழுது தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடலாம். 
  • பூச்சி தாக்குதலை பொருத்தவரையில் தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், காய்ப்புழு, அஸ்வினி போன்ற பூச்சிகள் பிரதானமாக பயிரை தாக்கும். 
  • நோயைப் பொருத்தமட்டில் வேர் வாடல் நோய், அழுகல் நோய், இலை கருகல் மற்றும் பாக்டீரிய கருங்கல் நோய் எதிர்பார்க்கலாம்.

மேலும் சந்தேகம் மற்றும் தகவல்களுக்கு இணைப்பில் கலந்துள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.. https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 15 ஆகஸ்ட், 2024

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்...

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்:

  • தேசிய அளவில் தென்னை சாகுபடி என்பது பிரதான பயிராக திகழ்கிறது. இந்தியா உலக அளவில் தென்னை சாகுபடியில் மூன்றாவது இடத்தினை எட்டியுள்ளது அதேபோன்று தமிழ்நாடு இந்திய அளவில் தென்னை சாகுபடியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து பயிர் காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்கள்.
  • எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாகுபடியில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தென்னை பனை காப்பீடு திட்டம் (CPIS)

ஆங்கிலத்தில் Coconut Palm Insurance Scheme எனப்படும் இந்தத் திட்டமானது தென்னை மரங்களை இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் பல இதர உடனடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமாகும்.

  • இத்திட்டத்தில் வளமான மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். 
  • சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்ய இயலாது தனிப்பட்ட மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
  • காய்ப்பில் உள்ள மரங்கள் குறைந்தது ஐந்து வளமான காய்களை காய்க்க வேண்டும். 
  • காப்பீடு நிறுவனங்களுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 
  • 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்து தொகையாக Rs. 9 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 60 வயது உடைய மரங்களுக்கு Rs. 14 ஆகும்.
  • ஒருவேளை மரங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது முழுவதும் காய்க்கும் திறனை இழந்து விட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.900 எனவும் 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.1750 எனவும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

Kera Suraksha Insurance Scheme:

இளநீர் அல்லது தென்னங் காய்களை அறுவடை செய்தல், மரத்தை சுத்தப்படுத்துதல், மற்றும் பல பணிகளுக்காக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீடு செய்வதே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆண்டிற்கு ரூபாய் 99 செலுத்த வேண்டும் மீதமுள்ள செலுத்து தொகையான ரூபாய் 299.55 ஐ தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும். 18 முதல் 65 வயது உடைய தென்னை மரம் ஏறுபவர்கள் மட்டுமே இதில் பயனடைய இயலும். காப்பீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். ஊனம் அடைந்தால் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

சனி, 20 ஜூலை, 2024

தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.

முன்னுரை:

தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.

ஏன் செய்ய வேண்டும்: 

  • மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில் இருக்கும் பன்னாடைகள் மரத்தோடு சேர்த்து கட்டியது போல் காணப்படும். இதனால் இது எந்த இடையூறும் விளைவிக்காது. 
  • ஆனால் மரத்தின் அடிப்பாகத்தில் தாறுமாறாக தொங்கும் காய்ந்த பன்னாடைகள் காற்றில் உள்ள தூசிகளையும் பறந்து வரும் வேறு மரத்தின் இலை பாகங்களையும் தடுத்து மட்டை இடுக்குகளில் தேக்கி வைப்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. 
  • இந்தப் பகுதிகள் பாம்பு, தேள், குளவி போன்றவை இனப்பெருக்க இடங்களாக பயன்படுத்துவதால் மரத்தை சுத்தம் செய்பவர்களுக்கு இடையூறாக திகழும்.
  • இங்கு கூராஞ்சிகள் எனப்படுவது தென்னங் காய்கள் அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள குலை ஆகும். கிராமங்களில் நன்கு காய்ந்த கூராஞ்சியை சுற்றி கட்டி கூட்டும் விளக்குமாறாக பயன்படுத்துவார்கள்.
  • காய்ந்த கூராஞ்சிகள் மரத்திலேயே விட்டு விட்டால் அதில் சிலந்தி அல்லது குளவி கூடு கட்டும். இந்த சிலந்தி கூட்டினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பெண் பூக்களை அடைய முடியாமல் வலையில் சிக்கி இறந்து விடுகிறது. 
  • இது மட்டும் இன்றி கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை இதனால் வேர்கள் மூலம் கிடைக்க பெறும் நீர் மற்றும் ஊட்டச்சத்தை இதுவும் பங்கு போட்டுக் கொள்கிறது. 
  • கூராஞ்சிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் மரத்தில் அதிக அளவு பொய் பாளைகள் மற்றும் சூரிய வெளிச்சம் போதுமான அளவு குறித்து பகுதிக்கு கிடைப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது. 
  • மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மட்டை இடுக்குகளில் அதிக அளவு கழிவுகள் தங்கி இருப்பதால் அங்கு குடும்பம் நடத்தும் எலி மற்றும் அணில்கள் பூ மற்றும் இளநீரை சுவைப்பதால் மகசூல் தரம் பாதிக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி சில நேரங்களில் எலிகள் மரத்தின் குருத்துப் பகுதி அல்லது பாலையின் அடிப்பகுதியை ஓட்டை இடுவதால் மகசூல் இழப்பு சில நேரங்களில் செடிகளும் இறக்க நேரிடுகிறது.
  • அதேபோன்று மட்டைகள் நெருக்கமாக உள்ள மரங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மட்டைகளில் சுமார் அரை அடி முதல் ஒரு அடி வரை ஓலைகளை எடுக்கலாம்.

மரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது:

  • மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக மரத்தின் நுனிப்பகுதியில் பாம்பு அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.
  • அனுபவம் உள்ள மரம் சுத்தம் செய்பவர்களை ஏறச் செய்து காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சிகள் மற்றும் இதர பகுதிகளை அகற்ற வேண்டும். 
  • மரத்தின் நுனி பகுதியில் இருக்கும் பன்னாடைகளை பெரிய அளவு எடுக்க வேண்டாம். 
  • மரம் ஏறுபவர்கள் பாலை அல்லது தென்னங் கொலைகளில் உட்காராமல் தேவையற்ற பகுதியை அகற்ற வேண்டும்.
  • மரம் சுத்தம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை: 
  • எக்காரணத்தை கொண்டும் பன்னாடைகளை அருளால் அகற்றக்கூடாது. இது தேவையற்ற காயங்களை ஏற்படுத்தும். 
  • மர இடுக்குகளில் காணப்படும் குப்பைகளை கையாள அகற்றக் கூடாது ஏனெனில் அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • தேன் அல்லது குழுவில் ஏதேனும் கூடு கட்டி உள்ளதா என்பதை அறிய சிறிய கற்களை எரிந்து சோதித்து விட்டு பின்பு மரம் ஏறலாம். 
  • நன்கு விளைச்சல் தரும் மரம் மற்றும் மட்டைகள் சாய்ந்துள்ள மரங்களில் ஓலைகளை அகற்ற வேண்டாம்.
  • ஓரிரு பிஞ்சுகள் இருக்கும் கொலைகளில் உள்ள இதர கூராஞ்சிகளை அகற்றலாம் தவறில்லை. 
  • சில நேரங்களில் மட்டைகள் பாதியாக உடைந்து தொங்கும் அதை முழுமையாக அகற்றாமல் ஒடிந்த பகுதி வரை மட்டும் அகற்றவும். 
  • காற்றாடி காலத்திலும் கோடை பருவத்திலும் மரம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது மரத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான விளைச்சலுக்கு அடித்தளமாக திகழும். 
  • முற்றிய தேங்காய்கள் பறிக்கும் பொழுது காய்கறி மட்டும் பறிக்காமல் குலையோடு வெட்டி எடுப்பது சால சிறந்தது. 

இதுபோன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.


செவ்வாய், 9 ஜூலை, 2024

தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:

முன்னுரை:

பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

காரணங்கள்: 
மண்ணின் கார அமிலத்தன்மை: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும். 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை: 

  • போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.

நீர் மேலாண்மை: 

  • கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

மண் மேலாண்மை: 

மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.

போரான் ஊட்டச்சத்து குறைபாடு:

  • பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து  குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
  • போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.

மகரந்த சேர்க்கை: 

  • தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது. 
  • அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது. 

தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்: 

  • ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:

  • இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 

எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618

செவ்வாய், 2 ஜூலை, 2024

இலாபம் தரும் சவுக்கு மரம் சாகுபடி

முன்னுரை:

குறைந்த நாட்களில் செலவில்லாமல் மர பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு சவுக்கு மரம் சாகுபடி செய்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. காகிதம் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், விறகு, மரக்கட்டை என பல்வேறு பயன்களை கொண்டுள்ள சவுக்கு மர சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏன் சாகுபடிக்கு உகந்தது: 

  • அனைத்து மண் வகைகளிலும் வளரும் 
  • குறைந்த சாகுபடி செலவினம் 
  • வேலையாட்கள் பெரிய அளவில் தேவையில்லை 
  • நீர் தேவை மிகவும் குறைவு 
  • எளிதில் விற்பனை செய்ய இயலும் 
  • வனவிலங்குகள் தொல்லை இல்லை 
  • நோய் அல்லது பூச்சி தாக்குதல் இல்லை 
  • சராசரி விலை கிடைக்கப் பெறுகிறது.

ரகம் தேர்வு செய்தல்: 

  • பல்வேறு நாட்டு, ஒட்டு  மற்றும் கலப்பின ரகங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து முழு விலையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. நாட்டு சவுக்கு மற்றும் இந்தோனேசிய வகை ரகங்கள் கொண்டு கலப்பினம் அல்லது ஒட்டுக் கட்டிய ரகங்களை முறையாக தேர்வு செய்து பயிரிடுவதால் நல்ல விளைச்சல் பெற இயலும்.
  • குறிப்பாக TNPL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் கலப்பின ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கக் கூடியதாக திகழ்கிறது எனவே இதனையும் தேர்வு செய்து நடவு செய்யலாம். 

நிலம் தயார் செய்தல்: 

இரண்டு முறை கலப்பை உழவு செய்து பின்னர் ரோட்டா வேட்டர் பயன்படுத்தி மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி: 

இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி ஐந்து முதல் ஆறு அடி எனவும் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மூன்று முதல் மூன்று அடி வரை இருக்கலாம். இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 2500 மரங்கள் பெற இயலும்.

குழி எடுத்தல்: 

30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உடைய குழிகளை தயார் செய்து 15 நாட்கள் ஆற விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள், VAM மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இடவேண்டும்.

நடவு செய்தல்: 

போதுமான நீர் வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மன வரி பூமியில் நடவு செய்ய விரும்பினால் பருவ மழை காலத்தில் நடவு மேற்கொள்ளலாம்.

களை மேலாண்மை:

ஆரம்ப காலத்தில் களை மேலாண்மை மிகவும் அவசியம். அதாவது முதல் வருடம் சுமார் 4 முறையாவது களையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உர மேலாண்மை: 

இந்த மரம் வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது அதற்கேற்றவாறு உரமிடுதலை திட்டமிடலாம். வருடத்திற்கு இரண்டு முறை போதுமான அளவு ஊட்டச்சத்து பருவமழை தருணத்தில் கொடுக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனம் அமைத்தல்: 

சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால் வேலையாட்கள் குறைக்கப்படுகிறது, களைகள் அதிகம் வளர்வதில்லை, நீர் தேவையும் குறைவு, அனைத்து வகையான நிலங்களுக்கும் உகந்தது, நீரில் கரையும் உரங்களை கொடுக்க இயலும். இதனால் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

இதில் பெரிய அளவு நோய் அல்லது பூச்சி தாக்குதல் இருப்பதில்லை அவ்வாறு இருந்தால் அதனை எளிதில் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி விடலாம்.

ஊடுபயிர் இடுதல்: 

அனைத்து வகையான காய்கறி பயிர்கள், நிலக்கடலை,உளுந்து, எள், பயிறு வகை பயிர்கள் என குறைந்த வாழ்நாள் கொண்ட அனைத்து பயிர்களையும் முதல் ஒரு வருடம் சாகுபடி செய்யலாம்.

அறுவடை மற்றும் விளைச்சல்: 

அதிக வாழ்நாள் திறன் கொண்ட பயிராக இருந்தாலும் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்களில் நாம் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். கலப்பின கன்றுகளை பயன்படுத்தும் பொழுது ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வரை நிகர லாபம் எடுக்க இயலும். 

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


சனி, 29 ஜூன், 2024

காய்கறி பயிர்களில் ஒட்டுக்கட்டுதலும் அதன் நன்மைகளும்

முன்னுரை: 

  • மனிதர்களின் அன்றாட வாழ்வில் காய்கறிகளின் பண்பாடு தவிர்க்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காய்கறி சாகுபடியில் ஏற்படும் அதிக நோய் மற்றும் பூச்சி தாக்குதல், அதிக உர பயன்பாடு, மகசூல் குறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பழ பயிர்களில் ஒட்டுக்கட்டி வீரிய ரகங்களை பெறுவது போன்றே காய்கறி பயிர்களிலும் ஒட்டுக்கட்டுதல் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். 

ஒட்டு கட்டுதல் என்றால் என்ன: 

  • ஒட்டுக்கட்டுதல் என்பது ஒரே இனம் அல்லது குடும்பத்தைச் சார்ந்த இரண்டு செடிகளின் பாகங்களை இணைத்து அதன் சிறப்பு பண்புகளை புதிய செடி வடிவில் உருவாக்கும் தொழில் நுட்பம் ஆகும். 
  • இந்தச் செடியின் அடிப்பாகத்தை வேர்ச்செடி எனவும் மேல் பாகத்தை தண்டுக்குச்சி எனவும் அழைப்பார்கள். பொதுவாக வேர்ச்செடிகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை, அதிக நீர் அல்லது உப்பை தாங்கி வளரும் தன்மை, வேர் வழியாக பரவக்கூடிய பல்வேறு நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை அல்லது தாங்கி வளரும் தன்மையை கொண்டிருக்கும். 
  • தண்டுக்குச்சியானது நோய் அல்லது பூச்சி எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன், மேம்பட்ட ஊட்டச்சத்து, அதிக விளைச்சல் என பல்வேறு பண்புகளை கொண்டிருக்கும். இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கிணைத்து புதிய செடியாக மாற்றி நாம் விரும்பிய பண்புகள் மற்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட புதிய செடியை உருவாக்குவது ஒட்டுக்கட்டுதல் நிகழ்வாகும்.

கத்தரி செடியில் ஒட்டு கட்டும் முறை:

  • நல்ல வேர் அமைப்பு, அதிக ஆண்டு நிலைத்திருக்கும் தன்மை, வறட்சியை தாங்கி வளர்தல், நோய், பூச்சி மற்றும்  நூற்புழுக்களுக்கு எதிரான செயல்படும் கத்திரி இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய் செடியை வேர் செடியாக பயன்படுத்த வேண்டும். 
  • அதேபோன்று நாம் விரும்பிய பண்புகளைக் கொண்டுள்ள கத்திரி ரகத்தை தண்டு குச்சியாக பயன்படுத்த வேண்டும். இதன் இரண்டு தண்டு பகுதியும் ஒரே அளவு உதாரணத்திற்கு பென்சில் தடிமன் உடையதாக இருக்க வேண்டும். 
  • சுண்டைக்காய் செடியில் செங்குத்தாக வளரும் கிளைப் பகுதியில் உள்ள குச்சியை தேர்வு செய்து அதே தடிமன் உடைய கத்தரி தண்டு குச்சியை ஒன்றிணைத்து ஒட்டு கட்ட வேண்டும். அதாவது வேர்ச்செடியின் பாகத்தை சுமார் பத்து சென்டிமீட்டர் உயரத்தில் கத்தி முழுமையாக இருப்பது போன்று தயார் செய்ய வேண்டும் அதில் தண்டுக்குச்சியின் பகுதியை V வடிவத்தில் தயார் செய்து குச்சியின் பகுதியுடன் இணைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தி இணைத்து கட்ட வேண்டும். 
  • இவ்வாறு செய்தால் அதிக அளவு உணவு இந்த ஒட்டு பகுதிக்கு செல்வதால் எளிதில் ஒட்டுக்கட்டுதல் ஒருங்கிணைந்து புதிய செடியாக உருவாகும். போதுமான வேர் வளர்ச்சி அடைந்தவுடன் இதனை தனியாக பிரித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடினப்படுத்தி பின்பு வயலில் நடவு செய்ய வேண்டும். 
  • இதற்கு 70 முதல் 80 சதவீதம் காற்று ஈரப்பதம் இருக்கும் இடத்தில் பத்து நாட்களும் பிறகு நிழல் வலை கூடாரத்தில் பத்து நாட்களும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உருவாகும் ஒட்டுச் செடியில் தண்டு குச்சி மற்றும் வேர்ச்செடி ஆகிய இரண்டு பண்புகளும் ஒருங்கிணைந்து கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடி செலவினும் குறைவதுடன் அதிக மகசூல் பெற இயலும்.

ஒட்டு கத்திரியின் சிறப்பியல்புகள்: 

  • நல்ல வேர் அமைப்பு 
  • வறட்சியை தாங்கி வளர்தல் 
  • மண்ணின் கார அமிலத்தன்மையை தாங்கி வளர்த்தல் 
  • அதிகளவு ஊட்டச்சத்து மற்றும் நீரை பயிர்களுக்கு உறிஞ்சி கொடுப்பது 
  • இதனால் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் அதிக கா
  • வேர் சம்பந்தமான அனைத்து நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை பெறுதல்
  • நீண்ட நாட்களுக்கு மகசூல் தருதல் 
  • அதிக மகசூல் தரும் தன்மையுடையது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறவும்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


திங்கள், 24 ஜூன், 2024

நிழல் வலை கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வதன் நன்மைகள்

முன்னுரை:

  • பெரும்பான்மையான காய்கறிப் பயிர்கள் குறிப்பிட்ட பருவம் மற்றும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதால் பருவமற்ற காலத்தில் இதன் சாகுபடி பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் தரம் குறைந்து விலையில் அதிக மாற்றம் திகழ்கிறது.
  • விவசாயிகள் பருவ மற்ற தருணத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பொழுது அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, மழை மற்றும் வெப்பநிலை காரணத்தால் இதன் உற்பத்தி பெரிதும் பாதிப்படைகிறது. குறிப்பாக தீவிர குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை காரணத்தால் பெரும்பான்மையான காய்கறி பயிர்களில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு காய் பிடிப்பு திறன் மிகவும் குறைந்து காணப்படுவதால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு விலை ஏற்றத்தை காண இயலுகிறது.
  • பல்வேறு உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால் பயிர் சாகுபடியில் ஏற்படும் சவால்களை சரி செய்திடவும், காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், பருவ மற்ற தருணத்தில் தரமான காய்கறிகளை உற்பத்தி செய்திடவும், நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை வழங்கிட  நிழல்வலைக் கூடாரத்தில் காய்கறி சாகுபடி செய்வது ஒரு சிறந்த முறையாகவே கருதப்படுகிறது.

நிழல் வலை கூடாரம் என்றால் என்ன:

இதில் நிழல் வலை கூடாரம் என்பது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளியை குறிப்பாக அல்ட்ரா வயலட் கதிர் வீச்சை தடை செய்தும், வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதத்தை பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியும், காற்று உள் புகுந்து எளிதில் வெளி வரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.

நிழல் வலை கூடாரத்தில் நிறங்கள்:

பச்சை மற்றும் கருப்பு - இந்த நிற நிழல் வலை கூடாரங்கள் ஒளியின் அளவு மற்றும் தரத்தை மாற்றி அமைத்து கொடுக்கிறது. இதனால் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
வெள்ளை- ஒளியின் அளவை சற்று குறைத்து மட்டும் கொடுக்கிறது தரத்தில் எந்த மாற்றமும் செய்யாது. இதனால் பயிர் வேகமாக வளரும்.

நிழல் வலை கூடாரத்தின் நன்மைகள்:

  • கூடாரத்தின் உட்பகுதியில் வெப்பநிலையை 50 சதவீதம் வரை குறைத்துக் கொடுக்கக்கூடியது. 
  • அனைத்து பருவத்திலும் காய்கறி பயிர் சாகுபடி செய்ய உகந்தது. 
  • அதிக வெப்பநிலை மழைப்பொழிவு காற்று போன்ற அசாதாரண சூழ்நிலையில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. இதனால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படாமல் அதிக அளவு பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • வீரிய விட்டு ரகங்களை சாகுபடி செய்ய உகந்த சூழ்நிலை ஏற்படுத்தும். 
  • கிடைக்கப்பெறும் குறைந்த இடத்தில் பயிர்களை செங்குத்தாக வளர்த்து அதிக மகசூலை ஈட்ட இயலும். எனவே இதன் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கும்
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படுகிறது.
  • இதனால் மகசூலின் தரம் மேம்பட்டு காணப்படும்.
  • இதர வேளாண் நவீன தொழில் நுட்பங்களான நிலப் போர்வை அமைத்தல், சொட்டுநீர் பாசனம் /தெளிப்பு நீர் பாசனம், பல்வேறு பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தரமான காய்கறிகளை பெறலாம்.
  • தக்காளி, கத்தரி, வெள்ளரி, மிளகாய், குடைமிளகாய், கீரை வகைகள் மற்றும் அனைத்து கொடி காய்கறி வகைகள் என நாம் விரும்பிய பயிரை இதில் சாகுபடி செய்து பயன்பெறலாம். 
  • இது மட்டும் இன்றி களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளுக்கு தேவைப்படும் வேலை ஆட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதால் உற்பத்தி செலவும் குறைகிறது.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 14 ஜூன், 2024

சாம்பல் பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • சாம்பல் பூசணி சாகுபடியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாம் எந்த பயனுக்காக சாகுபடி செய்கிறோம் என்பதுதான். திருஷ்டிக்காக சாகுபடி செய்யும் போது அதன் உருவம் சரியானதாக இருக்க வேண்டும். உணவுக்காக உற்பத்தி செய்யும் போது அறுவடை பருவம் பருவமழையை ஒத்து வரக்கூடாது. 
  • இதைத் தவிர இதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புக்காக சாகுபடி செய்கிறோம் என்றால் வியாபாரிகளிடம் சாகுபடிக்கு முன்னதாக ஒப்பந்தம் இட்டு கொண்டு பின்பு சாகுபடி வேலையை தொடங்கலாம்.

பருவம்: 

அறுவடை காலம் பருவமழையை நெருங்கி வரக்கூடாது. டிசம்பர் முதல் மே மாதம் இறுதி வரை அறுவடை செய்ய ஏதுவாக பயிர் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நல்ல விலை கிடைப்பதுடன் மகசூல் பாதிப்பு இருக்காது.

ரகம்: 

Mahyco, Drishti, VNR போன்ற ரகங்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை வாங்கும்போது தரமானதா மற்றும் காலாவதி ஆகாத விதையா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

விதை அளவு: 

600-700 கிராம் ஏக்கருக்கு.

நிலம் தயார் செய்தல்: 

வாய்க்கால் அமைக்க வேண்டும். இரண்டு வாய்க்காலுக்கு இடைப்பட்ட தூரம் இரண்டு முதல் மூன்று மீட்டர் இருக்கலாம். ஒரு வாய்க்காலின் இரண்டு அணைப்பகுதிகளிலும் விதைகள் நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்: 

  • வாய்க்காலில் நன்கு நீரைப் பாய்ச்சி ஈரப்படுத்தவும். விதைகள் விதைப்பதற்கு முன்பு அல்லது பின்பு களைக்கொல்லி தெளிக்கலாம். 
  • ஏக்கருக்கு சுமார் 750-1000 மில்லி Pendimethlin அல்லது Metolachlor தெளிக்கலாம். விதைப்பதற்கு முன்பு அல்லது விதைத்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மட்டுமே தெளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட நாட்களில் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

விதைத்தல்: 

குழிக்கு இரண்டு விதை விதைக்கலாம்.

உரம் இடுதல்: 

அடி உரமாக தேவையான அளவு தொழு உரம், 75 கிலோ டி ஏ பி மற்றும் தேவையான அளவு நுண்ணூட்ட உரம். ஆனால் 20-25 நாட்களில் ஒரு முறையும் 40 முதல் 45 நாட்களில் மீண்டும் ஒரு முறையும் உரம் இடுதல் மிகவும் சிறந்தது.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: 

  • விதைத்த 20 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை etherl என்ற மருந்தை பத்து லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 மில்லி கலந்து தெளிப்பதால் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் பூ உதிராது.
  • தேவையின் அடிப்படையில் உரம் மற்றும் டானிக் பயன்படுத்தலாம். குறிப்பாக இதில்  பொட்டாசியம், போரான் மற்றும் நுண்ணூட்ட சத்து கொடுக்க வேண்டும் அப்போதுதான் பூ மற்றும் காய் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூச்சி மேலாண்மை: 

  • பயிரின் ஆரம்ப நிலையில் சாறு உறிஞ்சு பூச்சி அஸ்வினி மற்றும் இலைபேன் தாக்குதல் தென்படும். இதனை கட்டுப்படுத்த Fibronil அல்லது imidacloprid தெளிக்கவும்.
  • பயிரின் நடுத்தர மற்றும் பிந்தைய நாளில் புழு மற்றும் பழ ஈ தாக்குதல் காணப்படும் அதை இயற்கை முறையில் அல்லது ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை:

இதில் பெரிதளவு நோய்கள் ஏற்படாது சாறு உறிஞ்சும் பூச்சிகளால் தேமல் நோய் தென்படலாம் அதைத் தவிர மழைக்காலங்களில் வேர் அழுகல் மற்றும் வெள்ளை பூஞ்சான நோய் காணப்படும். நோய்கள் தென்படும் போது உடனடியாக அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞாயிறு, 9 ஜூன், 2024

நிலக்கடலையில் நீர் மேலாண்மையில் ஏற்படும் சவால்கள்

முன்னுரை:

  • வைகாசி பட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விதைப்பு மேற்கொண்டு தற்பொழுது சுமார் 10 முதல் 25 நாள் வயது பயிராக சாகுபடியில் உள்ளது. 
  • தற்போது பெய்து வரும் குறைந்தபட்ச மழையினால் கூட தொடர்ச்சியான மண் ஈரப்பதம் திகழ்வதால் பல்வேறு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நிலக்கடலையில் காண முடிகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களும் பெரும்பான்மையான பயிறு வகை பயிர்களும் தொடர்ச்சியான மழைப்பொழிவு / வயலில் நீர்த்தேக்கம் / தொடர்ச்சியான ஈரப்பதம் போன்ற பல்வேறு நீர் மேலாண்மை சார்ந்த காரணங்களால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நிலக்கடலையில் நீர் மேலாண்மை: 

  • மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் தேர்வு செய்யப்படும் ரகம் ஆகியவற்றைப் பொறுத்து நிலக்கடலை மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் மூலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது மண் தன்மையை பொறுத்து சராசரியாக 7-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அதாவது மணல் மற்றும் சரளை வகை மண்ணில் ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் செம்மண் போன்ற நிலங்களுக்கு சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது.
  • நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற அதன் மொத்த வாழ்நாளில் சுமார் 500 முதல் 800 மில்லி மீட்டர் அளவிற்கு நீரை கொடுத்தால் நல்லது.
  • நிலக்கடலை பயிரில் நீர் மேலாண்மையில் ஏற்படக்கூடிய சவால்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று வறட்சி பருவம் மற்றொன்று பூக்கும் பருவம். 
  • வளர்ச்சி பருவம் என்பது விதை விதைப்பு மேற்கொண்ட நாட்கள் முதல் சராசரியாக 55 நாட்கள் வயதுடைய பயிராக கருதலாம். இந்த நாட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயிர் அதிகப்படியான வறட்சியை கூட தாங்கி வளரும் ஆனால் மண்ணில் நிலவும் தொடர்ச்சியான ஈரப்பதத்தினால் குன்றிய பயிர் வளர்ச்சி, பல்வேறு  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல நோய்கள் பயிரை தாக்கும்.

பயிர் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்:(50 நாட்களுக்கு உட்பட்ட வயது உடைய பயிர்களில்)

அதாவது வளர்ச்சிப் பூர்வமான முதல் 50 முதல் 55 நாட்களில் பயிர் வறட்சியை எளிதாக தாங்கி வளரும் ஆனால் மழை காரணமாக அல்லது தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுவதால் கீழ்க்கண்ட அறிகுறிகளை நாம் வயலில் காண இயலும்.

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • குன்றிய வேர் வளர்ச்சி 
  • இதனால் வேர்ப்பகுதியில் வேர் முடிச்சுகள் குறைவாக உருவாதல். எனவே தழைச்சத்தை கிரகித்து வேர்ப்பகுதியில் நிலை நிறுத்துவது வெகுவாக குறையும். 
  • இளம் பருவத்திலேயே செடிகளின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்தல். 
  • பயிர்கள் சரியாக கிளை பிரியாமல் காணப்படுதல்.
  • கிளைகளில் காணப்படும் கணு இடைவெளி பகுதி அதிகமாக இருப்பதால் குச்சி போன்ற வளர்ச்சி இருக்கும்.
  • இதனால் பயிரில் இருக்கும் மொத்த எண்ணிக்கையின் இலைகள் குறைவாகவே காணப்படும்.
  • நிலக்கடலையை உருவாக்கக்கூடிய விழுதுகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: தழைச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, துத்தநாகம் மற்றும் சல்பர் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரதானமாக காண இயலும். 
  • ஏற்படும் நோய்கள்:  வேர் அழுகல், கழுத்து அழுகல் மற்றும் மொட்டு அழுகல் நோய் பிரதானமாக காணப்படுகிறது.

50 நாட்களுக்கு மேற்பட்ட வயது உடைய பயிரில் ஏற்படும் அறிகுறிகள்:

  • வாடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • விழுதுகள் எண்ணிக்கை குறைந்து மற்றும் மண்ணில் சரிவர புதையுறாமல் இருக்கும். 
  • காய்கறி எண்ணிக்கை குறைதல்.
  • நிலக்கடலையில் உள்ள பருப்புகள் போதுமான அளவு பெருக்கம் அடையாமல் இருக்கும்.
  • நாட்டு நிலக்கடலையில் பருப்பின் சுவை மாறுபட்டு காணப்படுதல். 
  • ஆனால் பருப்பில் இருக்கும் எண்ணெய் சதவீதம் மற்றும் புரதச்சத்து அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • நிலக்கடலை ஒரே தருணத்தில் முதிர்ச்சி அடைவது இல்லை. 
  • அறுவடை சமயத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் விதை முளைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது போன்ற வேளாண்மை சார்ந்த தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 7 ஜூன், 2024

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

களை என்பது என்ன: 

  • களைச் செடிகள் தேவையற்ற செடிகள் அல்ல. தேவையற்ற இடத்தில் வளர்வதால் அதனை நாம் களைகள் என்று கூறுகிறோம். மற்றபடி இந்த செடிகள் எண்ணற்ற பலன்களையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
  • பயிர் சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக திகழ்கிறது. குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் களைகளை கட்டுப்படுத்த முடியாமல்  அதிக செலவினம் மற்றும் மகசூல் இழப்பீடு சந்திக்க நேரிடுகிறது.

களைகள் எவ்வாறு பரவுகிறது:

  • மக்காத தொழு உரத்தை பயன்படுத்துவதால்.
  • வேறு வயல்களில் இருந்து தண்ணீர் நம் வயலுக்குள் செல்வதாலும்.
  • புதிதாக நம் வயலுக்கு மண் அடிக்கும் பொழுது அதன் வழியாகவும். 
  • தொடர்ச்சியாக கால்நடைகளை வயலில் மேச்சலுக்கு விடுவதாலும். 
  • முறையான பண்ணை வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • 18 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் களைகள் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு அதில் உள்ள ஈரப்பதம் முழுமையாக வெளியேறுவதால் களைகள் இறந்து விடுகிறது. இதனால் மீண்டும் முளைத்து வரும் களைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. 
  • வயலை சுற்றி உயரமான வரப்பு அமைப்பதால் அருகில் உள்ள வயல்களில் இருந்து மழை நீர் உள்ளே வராமல் இருப்பதால் களைகள் பரவுவதை தவிர்க்கலாம்.
  • நமது வயல்களுக்கு புதிதாக மண் அடிக்கும் பொழுது தேர்வு செய்து கொண்டு வரப்படும் மண்ணில் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இதில் இருக்கக்கூடிய விதைகள் முளைத்து வயலில் களைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அதிகம் களைகள் வளரக்கூடிய நிலத்தில் தொடர்ச்சியாக பயிர் சுழற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நம் தேர்வு செய்யும் பயிர் நல்ல வேர் அமைப்பு மற்றும் அதிக இலை பகுதியை கொண்டுள்ளதாகவும் தேர்வு செய்யப்படுவதால் களைகளின் வளர்ச்சி வெகுவாக மட்டுப்படுத்தப்படுகிறது.
  • அதேபோன்று ஊடு பயிரிடுதல், வரப்பு பயிர் சாகுபடி செய்தல் மற்றும் தொடர் பயிர் சாகுபடி போன்றவற்றை பின்பற்றுவதாலும் களைகள் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • நிலத்தில் பயிர்கள் இல்லாத காலத்தில் அல்லது பயிர் இடைவெளியில் மாடு/ஆடுகள் மேய்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதன் மூலம் இடப்படும் சாணம் மீண்டும் களை வளர்ச்சியை நிலத்தில் அதிகப்படுத்தும்.
  • வருடத்திற்கு ஒரு முறை வேகமான வளர்ச்சி மற்றும் அதிக வேர் அமைப்பு கொண்ட குறைந்த வாழ்நாள் பயிர் அல்லது பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்வதால் களைகளின் வளர்ச்சி மற்றும் வேர் அமைப்பு இந்தப் பயிர்களால் சிதைக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் இது மண்ணிற்கு வளத்தையும் தன்மையையும் மாற்றுகிறது. 
  • நிலத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது பிடுங்கி எடுக்க வேண்டும். குறிப்பாக களை செடிகள் பூ பூப்பதற்கு முன்னதாக இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
  • உழவு அல்லது கைகளை எடுக்கும் பொழுது களைகள் நன்கு காய்ந்த பிறகு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில் இதன் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அல்லது களைகளை வயலில் இருந்து சேகரித்து வெளியே அகற்றலாம்.
  • பல்லாண்டு பயிர் அல்லது உயர் தொழில்நுட்ப முறையில் பயிர் சாகுபடி செய்யும் பொழுது இடைப்பட்ட பகுதியில் Weed mat எனப்படும் மக்காத தார் பாய்களை விரித்து விடுவதால் அந்த பகுதியில் களை வளர்ச்சி முற்றிலும் தடைபடுகிறது. ஆனால் இது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். 
  • நாம் தேர்வு செய்து பயிரிடும் பயிரை பொறுத்து நெகிழி நிலப் போர்வை அல்லது பண்ணை கழிவுகள், தேங்காய் நார் கழிவு, மரத்தூள்கள், மக்கிய இலைகள் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்காலிக முறையில் மண் மூடாக்கு இடலாம். ஆனால் இது எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • புல் வகைக் களைகள் உதாரணத்திற்கு அருகம் புல், கோரை, சுனைப்புல் போன்றவை அதிக அளவு நம் வயலில் இருக்கும் பொழுது அந்த வயலில் நெல் வாழை போன்ற அதிக நீர் தேவை உள்ள பயிர்களை சாகுபடி செய்யும் பொழுது களைகளின் கிழக்குகளை அழுகச் செய்து வெகுவாக புல் வகைகளை கட்டுப்படுத்தலாம். 
  • சில வகை பயிர்களின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் திரவங்கள் மற்ற பயிர்கள் வளர்வதை தடை செய்கிறது இது போன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிடலாம். உதாரணத்திற்கு சோளம், தட்டைப்பயிறு நரி பயிர், பசுந்தாள் பயிர்கள், மொச்சை, குதிரைவாலி, சூரியகாந்தி மற்றும் பல பயிர்கள்.
  • மாமரத்தின் அடிப்பகுதியில் பொதுவாக களைகள் அதிகம் வளர்வதில்லை. ஏனெனில் மரத்தின் நிழல் மற்றும் மா இலை, பட்டை மற்றும் தண்டுப் பகுதியில் உள்ள வேதிப்பொருட்கள் களைகள் வளர்வதை தடை செய்வதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு கூறுகிறது. 
  • எலுமிச்சை புல் எண்ணெய், தைல புல் எண்ணெய் மற்றும் கற்பூரம் போன்றவைகளும் களைகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. 
  • பல்வேறு வகையான களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் மத்தியில் மாட்டு கோமியம், கல் உப்பு கரைசல், சோப்பு கரைசல், எலுமிச்சை சாறு என பல்வேறு இயற்கை வழி பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை நாம் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதில் உள்ள சவால்கள். 
  • இதைத் தாண்டி இயற்கை வழி களைக்கொல்லிகள் உதாரணத்திற்கு Gluten meal எனப்படும் ஒரு வகை பசை போன்ற திரவத்தை களைகள் முளைப்பதற்கு முன்பதாக பயன்படுத்துவதால் நல்ல பயன் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...